இது என் சொத்து
முகில் தினகரன்
அவள்….ஸ்ருதி!
‘இயற் பெயரா?’ என்று கேட்டால், பதில் சொல்லாமல் அழகாய்ப் புன்னகைப்பாள். காரணம் அவள் தொழிலுக்கு அதெல்லாம் தேவையில்லாத கேள்வி.
‘பணம் கொடுத்து..சுகம் வாங்கிப் போக வந்தவனுக்கு…பெயர் எதற்கு?…அப்படித்தான் அவசியமென்றால்…எந்தப் பெயர் பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?…’ என்பாள். அதே நேரம், அவளை யாராவது கொச்சையாக விபச்சாரி என்றோ…வேசி என்றோ குறிப்பிட்டு விட்டால் அவ்வளவுதான், கொதித்தெழுவாள்.
‘நோ…இத்தோட சரி…இனிமே…இந்த மாதிரியெல்லாம் என்னைக் கூப்பிடுற வேலை வெச்சுக்காதீங்க…அப்புறம் மரியாதை கெட்டுடும்…!…வேணும்ணா…சி.ஜி ன்னு சொல்லுங்க…சி.ஜின்னா…கால் கேர்ள்…ஓ.கே.வா?’ என்பாள்.
அந்த சி.ஜி.யின் இன்றைய புரோக்ராம் கோவையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான சஞ்சீவ் ரங்க பிரசாத்துக்கு கம்பெனி கொடுப்பது. அதற்காகத்தான் அவனுடன் ஊட்டி மலையேறி…சேரிங் கிராஸ் பகுதியிலிருந்த அந்த உயர்தர ஹோட்டலில் அறை எண் 336-ல் அரை குறை ஆடையுடன்…நுரைப்பூ மெத்தையில் இந்த நிமிடம் படுத்துக் கிடக்கிறாள்.
அறையின் காலிங் பெல் நாசூக்காய் சிணுங்க. பாத்ரூமிலிருந்த சஞ்சீவ் ரங்க பிரசாத், ‘ஹேய்…யாருன்னு பாருடி’ என்றான் அங்கிருந்தபடியே,
எழுந்து, ஒயிலாய் நடந்து கதவைத் திறந்தாள்.
வெய்ட்டர் உணவுப் பதார்த்தங்கள் தாங்கிய வண்டியுடன் நிற்க, விலகி வழி விட்டாள்.
வுண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவன், அதை அறையின் டைனிங் டேபிள் அருகில் நிறுத்தி விட்டு, ‘வேற ஏதாவது வேணும்னா கால் பண்ணுங்க மேடம்’ என்று சொல்லி விட்டுத் திரும்பிய போதுதான் அவள் அதைக் கவனித்தாள்.
அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருந்தது ஒரு தாலி.
‘ஹேய்..ஹேய்..ஒன் மினிட்..அதென்ன பேண்ட் பாக்கெட்டில்?’ அவள் மிரட்டலாய்க் கேட்க,
நடுங்கிப் போனான் அந்த வெய்ட்டர். ‘மேடம்..மேடம்…சத்தம் போடாதீங்க மேடம்…ப்ளீஸ்’
‘நோ…உன்கிட்ட ஏதோ தப்பிருக்கு….உண்மையைச் சொல்லு எங்க கெடைச்சது உனக்கு இந்தத் தாலி?’
‘மேடம்…மேடம்…ப்ளீஸ் மேடம்’ அவன் பதில் சொல்லாமல் ஒரு வித பதட்டத்துடன் கெஞ்ச,
‘ச்சூ…மொதல்ல இப்படிக் கெஞ்சறதை நிறுத்திட்டு அது எப்படி உன் பாக்கெட்டுக்கு அதைச் சொல்லு…’
அவன் அப்போதும் கல்லுளிமங்கனாய் நின்றான்.
‘ஓ.கே…நான் ஹோட்டல் மேனேஜரைக் கூப்பிட்டுப் பேசிக்கறேன்’ சொல்லியவாறே அவள் போனைத் தொட,
‘அய்யோ…அய்யோ…வேண்டாம் மேடம்..நான் உண்மையைச் சொல்லிடறேன் மேடம்….இங்க டிபன் கொண்டு வந்த மாதிரியே பக்கத்து ரூமுக்கும் ஒரு வண்டி கொண்டு போனேன்…அதை உள்ளார கொண்டு போய் விட்டுட்டுத் திரும்பி வரும் போது பார்த்தேன்…டீப்பாய் மேலே…இந்த தங்கத்தாலி வெச்சிருந்திச்சு….அந்த அறையில் தங்கியிருந்த பெண்தான்; தன்னோட தாலி கழட்டி வெச்சிட்டுக் குளிக்கப் போயிருந்தாங்க…அந்தப் பெண்ணோட புருஷன் நான் வந்ததையே கவனிக்காம பால்கனிப் பக்கமா நின்னு மும்முரமா செல்போன் பேசிட்டிருந்தாரு…பார்த்தேன்.. டபக்னு எடுத்துப் பாக்கெட்ல போட்டுட்டு வந்திட்டேன்…’
ஸ்ருதி அவனை எரித்து விடுபவள் போல் பார்க்க,
‘என்னைய மன்னிச்சுடுங்க மேடம்…இப்பவே இதைக் கொண்டு போய் நானே திருப்பிக் குடுத்திடறேன் மேடம்…என்னையக் காட்டிக் குடுத்துடாதீங்க மேடம்…ப்ளீஸ்’
‘நோ…உன்னைய நான் நம்ப மாட்டேன்..’
சட்டென்று பாக்கெட்டிற்குள் கையை விட்டு அதை வெளியே எடுத்தவன், ‘வேணா நீங்களே…ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொடுத்திடுங்க மேடம்…என்னைய மட்டும்…’
‘ஓ.கே..நானே குடுத்திடறேன்.’ ஏன்றபடி அவள் அதை வாங்கிக் கொள்ள, தயங்கியபடியே வெளியேறினான் வெய்ட்டர்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சஞ்சீவ் ரங்க பிரசாத் அந்த விநாடியில் அறைக்கு வெளியே கேட்ட காலடிச் சப்தங்களைக் கேட்டு அலறினான். ‘ஓ..காட்…போலீஸ் ரெய்ட்….போச்சு…போச்சு….என் மானமே போச்சு…நாளைக்குப் பேப்பர்ல ‘இளம் தொழிலதிபர் பலான பெண்ணுடன் கைது’ன்னு கொட்டை எழுத்துல போடப் போறான்…’ கைகளைப் பிசைந்தபடி அறைக்குள் இங்குமங்கும் நடந்தவனை புன்னகையுடன் பார்த்தாள் ஸ்ருதி.
‘சிரிக்கறியா?….உனக்கு இதெல்லாம் பழகின விஷயம்…அதனால பயமில்லாமச் சிரிக்கறே…பட்..எனக்கு?…பிரெஸ்டிஜ் இஷ்யூ’
கதவு தட்டப்பட்டது.
நடுங்கினான்.
மீண்டும் கதவு தட்டப்பட, சிறிதும் தயக்கமின்றிப் போய் திறந்தாள் ஸருதி.
வெளியே நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் அவள் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த தாலியையும்…உள்ளே வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த சஞ்சீவ் ரங்க பிரசாத்தையும் மாறி மாறிப் பார்த்து விட்டு,
‘ஸாரி மேடம்…ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்….’என்று சொல்லி விட்டு நகர்ந்தனர்.
கதவைத் தாழிட்டு விட்டுத் திரும்பிய அவளை வியப்பு மேலிடப் பார்த்தான் சஞ்சீவ் ரங்க பிரசாத்.
‘ரொம்பக் குழம்பாதீங்க…இதோ…இந்தத் தாலிதான் இப்ப நம்மைக் காப்பாத்தியிருக்கு’ என்றாள்.
அப்போதுதான் அதைக் கவனித்தவன், ‘உன் கழுத்துல…எப்படி…தாலி?’
சொன்னாள்.
முழுவதையும் கேட்டு முடித்தவன் வெகுவாய் ஆச்சரியப் பட்டான், ‘நம்பவே முடியலை…இப்படியெல்லாம் கூட நடக்குமா?’
‘ஓ.கே…நான் இப்பவே போய் இந்தத் தாலியை அந்தப் பொண்ணுகிட்டக் குடுத்திட்டு வந்திடறேன்…’
வேகவேகமாய்ப் போன ஸ்ருதி அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.
‘ஏன்?…என்னாச்சு?…திருப்பிக் குடுக்கலையா?’ சஞ்சீவ் ரங்க பிரசாத் கேட்க,
‘ரூம் பூட்டியிருந்திச்சு…வெய்ட்டர்கிட்டக் கேட்டேன்…அவங்க அப்பவே…ரெய்டெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்களாம்’
‘சரி…விடு’ என்றபடி அந்தத் தாலியை அவள் கையிலிருந்து வாங்கி சஞ்சீவ் ரங்க பிரசாத் திடீரென்று பிளிறினான், ‘ஹேய்…இதுல ஒரு லாக்கெட் இருக்கு’
‘அப்ப ஓப்பன் பண்ணிப் பாருங்க…நிச்சயம் அதுல போட்டோ இருக்கும் ..அதை வெச்சுக் கூட அவங்களைக் கண்டுபிடிக்கலாம்’
அதைத் திறக்க முயற்சித்தவன் அது முடியாமல் போக, ‘ச்சை…இந்தா…நீயே திற’ என்றவாறு அவளிடம் தந்தான்.
அதை வாங்கி வெகு எளிதாகத் திறந்தவள் அதிலிருந்த போட்டோவைப் பார்த்ததும் அதிர்ந்தாள். ‘இவன்….இவன்…ரமேஷ்’
‘அப்படின்னா…உனக்குத் தெரிஞ்சவனா…அப்பப் பிரச்சினையே இல்லை…ஈஸியாக் கண்டுபிடிச்சுக் குடுத்துடலாம்’
ஆனால்…..ஸருதி அதை மறுப்பது போல் தலையை இட,வலமாய் ஆட்ட,
‘ஹேய்…நீ என்ன சொல்றே?’
‘இது…எனக்குச் சேர வேண்டிய தாலி…..இவன் என்னுடைய பழைய காதலன் ரமேஷ்…உண்மையைச் சொல்லப் போனா…இப்ப நான்…இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கே காரணம்…இவன்…இந்த ராஸ்கல்தான்’ ஸ்ருதி முகத்தில் லேசாய் சோகத் தீற்றல்கள்.
‘வாவ்…இண்ட்ரஸ்டிங்….சொல்லு…சொல்லு’ ஆர்வமானான் சஞ்சீவ் ரங்க பிரசாத்.
‘இவன் ஒரு காலத்துல என்னைத் தீவிரமாய்க் காதலிச்சான்….பேசிப் பேசியே என்னை மயக்கிய இவனை நம்பி நான் வீட்டை விட்டு இவன் கூட ஓடிப் போனேன்…ஆசை தீர ஒரு வாரம் என்னை அனுபவிச்சிட்டு…காணாமல் போயிட்டான்…அப்புறம் வீட்டுக்கும் திரும்ப முடியாம…வெளியிலேயும் நல்லவிதமா வாழ முடியாம…இந்தப் பாவத் தொழிலுக்கு வந்தேன்…’ சொல்லிவிட்டு அந்த பில்டிங்கே அதிரும் வகையில் வாய் விட்டுச் சிரித்தாள் ஸ்ருதி.
அவளை விநோதமாகப் பார்த்த சஞ்சீவ் ரங்க பிரசாத், ‘எதுக்கு…இந்தச் சிரிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?’ கேட்டான்.
‘ம்…ஒரு காலத்துல இந்தத் தாலி வராததால குடும்பப் பெண்ணான நான் விபச்சாரியானேன்….இன்னிக்கு இந்தத் தாலி வந்ததால விபச்சாரியான நான் குடும்பப் பெண்ணானேன்…என்ன ஒரு விந்தை?’
சில நிமிட அமைதிக்குப் பின், ‘இந்தத் தாலியை நான் திருப்பித் தரப் போறதில்லை…ஏன்னா…இது என் சொத்து…எனக்குச் சேர வேண்டிய சொத்து’
‘ஓ.கே’ என்று தோள்களைக் குலுக்கிய சஞ்சீவ் ரங்க பிரசாத் ஸ்ருதியின் முகத்தில் தெரிந்த அந்தப் பிரகாசத்தை ரசித்தான்.
(முற்றும்)
ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் படித்த
ஜெயகாந்தன் கதையை நினைவூட்டுகிறது.
அந்தக் கதையின் மையக்கருத்தை இந்தக்கதை உட்கொண்டிருந்தாலும்
கதையின் போக்கும் முடிவும் தனித்திருப்பதால் சிறப்புடைத்து.
மனித வாழ்விலே எதிர்பாரா நிகழ்வுகள் நடக்கையிலே
வழிகள் தடம்புரண்டு மாறித்தான் போகின்றன.
சுப்பு ரத்தினம்.