இசைக்கவி ரமணன்

 

கண்ணுக்குக் கண்ணான என் காளியின் பாதம் முன்னே

காளிக்கு முன்னே எந்தக் கருமமும் தருமமும் பின்னே

மண்ணெங்கும் விண்ணானது மாரியின் கருணை கண்ணே

மாரியின் சொந்தம் முன்னே மனிதரின் பந்தம் பின்னே

 

ஏழைக்குக் கூழை ஊற்ற எங்கிருந்தோ அவள் வந்தாள்

எல்லாமுமாகத்தானே எதிரே அன்னை நின்றாள்

வாழத்தான் வேண்டுமென்று வாதைகள் தூசே என்று

வளவிக்கை குலுங்கநம்முடன் வழியாய்த் துணையாய் வந்தாள், ஒரு

வளைவினிலே வழியை மறித்து வாரித் தழுவிக் கொண்டாள்! (கண்)

 

வேடங்கள் பொய்கள் யாவும் வெட்டிப்போடும் வீரி

வெந்தண லில்நடந்தால் சந்திரன் மொழியும் மாயி

பாடங்கள் தினமும் உண்டு படியவைக்கும் தண்டனை உண்டு

பாராத வேளைதன்னில் பனிமுத்தங்கள் பரிசுண்டு

பரிதவிக்கும் நேரம் அந்த மடியில் தூங்கும் சுகமுண்டு

 

ஊருக்கு நானோர் ஏழை உண்மையில் நானே செல்வன்

உலகம்போனாலும் எங்கும் போகாதம்மா என் செல்வம்

யாருக்குக் கிட்டும் இந்தக் காளியின் கருமைப் பாதம்

நீரோடும் விழியோடருகே நின்றால் அதுவே போதும்….

 

இசைக்கவியின் குரலில் பாடலைக் கேளுங்கள்

 

படங்களுக்கு நன்றி : 

http://www.shaktipeethas.org/ashtadasa/topic533.html

http://en.wikipedia.org/wiki/Mahakali

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *