இசைக்கவி ரமணன்

ஒரு புதிய கவிதை, பழைய பாடல்

ஒவ்வொரு நாளும் கவிதைகள்
ஒவ்வொரு வேளையும் கானங்கள்
ஓங்கி வளர்கிற தோர்பூசை
ஒய்யா ரிக்கிது தான்சேவை
ஒவ்வொரு கணமும் ஆனந்தம்
ஒவ்வொரு கனவும்  மிகவும்நிசம்
ஒருகணம் போலொரு கணமில்லை
ஒவ்வொரு பொழுதும் புதுஎல்லை!

“அம்மா!” என்னும் குரல்கேட்க
அவளுக் காசை மிகவுண்டு
அவளது தன்னந் தனிமையிலே
அனுபவித் துள்ளே நெகிழ்வதுண்டு
அம்மா என்னும் மந்திரச்சொல்
அதுபோல் எதுவும் இங்கில்லை
அவள்செவி வேறெதும் கேட்பதில்லை
அதுவே அதுவே அவள் எல்லை!

குட்டியைக் கவ்விய தாய்ச்சிங்கம்
கொஞ்சம் தரையில் குலவவிடும்
கூரிய கண்கள் ஒருசிறிதும்
குட்டியை விட்டு விலகாது
எட்டும் தொலைவில் அவள்காவல்
என்றும் ஒளியாய்ச் சூழ்ந்திருக்கும்
இடையே கவலை களிப்பாட்டம்
என்னும் நாடகம் தொடர்ந்திருக்கும்

மறந்த நினைவு மீள்கையிலே
மடியைத் தேடி மனம்பதறும்
மறக்கத் தெரியா மனத்தவளின்
மணத்தில் முகத்தைத் தேய்த்திருக்கும்
பிறந்து வளர்வது அவளில்தான்
பின்னும் முன்னும் அவளில்தான்
பிணியும் குணமும் அவளில்தான்
பிணக்கும் தீர்வும் அவளேதான்!

ஆழ மனத்தின் அடியிலிருந்து
அம்மா என்றே அழைப்பவரை
அல்லல் ஏதும் அண்டிடுமா?
அற்ப மரணம் தீண்டிடுமா?
வேழம் எலிவளை வீழ்ந்திடுமா?
வேலை நாணல் பிளந்திடுமா?
வேதனை தீர்க்கும் நாமமிது!
வேதம் பணியும் நாமமிது!

ஆயிரம் நாவுகள் இருந்தாலும்
அதுதான் சொல்லித் தீர்ந்திடுமோ?
அம்மா அம்மா என்றிடுவோம்
ஆனந் தக்கூத் தாடிடுவோம்
வாயினிக்க வரும் வார்த்தைகள்
வண்ணக் கவிதைக ளாகட்டும்
வற்றிக் கிடக்கும் தடங்களிலே
வசந்த நதிகள் பொங்கட்டும்!

அன்பின் மறுபெயரைச் சுவையுங்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.