எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தாகூர் இலக்கிய விருது

மகாகவி தாகூரின் 150ஆவது ஆண்டினை ஒட்டி, இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக, கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.
91 ஆயிரம் ரொக்கப் பணமும் தாகூர் உருவச் சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச் சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்குத் தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வுப் பணியை மேற்கொள்வது, டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம். இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்
2010ஆம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘யாமம்’ நாவலுக்கு வழங்கப்படுகிறது.
‘யாமம்’ நாவல், சென்னையின் முந்நூறு ஆண்டுக் காலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல். இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு, கனடாவின் இயல் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கிய விருது, தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் எஸ், ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி, மும்பையில் 2011 மே மாதம் 5ஆம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
தாகூர் இலக்கிய விருது பெறும் எஸ்.ராமகிருஷ்ணனை வல்லமை வாழ்த்துகிறது.
===========================
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா
