பொன் வண்டு (இறுதிப் பகுதி)
பவள சங்கரி
அன்பு நண்பர்களே,
பல நாட்களுக்கு முன்பு ‘பொன் வண்டு ‘ என்ற இந்த சிறுகதையின் முடிவை எழுதுமாறு ஒரு சவால் விட்டிருந்தோம். அதற்கான சரியான முடிவு கிடைக்காதலால் நானே எழுதி முடித்திருக்கிறேன். இதற்கு வேறு விதமான முடிவு யாராவது அளித்தாலும் மகிழ்ச்சி. இதோ என்னுடைய முடிவுப் பகுதி. நன்றி .https://www.vallamai.com/literature/short-stories/4737/
உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள்……..அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது!ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது……..இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.
பி.கு. நண்பர்களே, இக்கதையின் இறுதிப் பகுதியை நீங்கள் எழுதலாம். இக்கதையின் போக்கிலேயே தொடருங்கள் நண்பர்களே….வாழ்த்துகள்.சவாலுக்கு சவால்!
பொன் வண்டு – பகுதி (2)
நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் இடைவிடாத போராட்டத்தையும் மீறி, கூட்டை விட்டுப் பிரிந்தது உயிர். மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இதுபோன்ற திடீர் மரணம் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடும் என்று மருத்துவர்களின் அறிக்கை எளிதாக சொல்லி முடித்துவிட்டது.
காலையில் தங்க ரதமாக அனுப்பிய மகள், வெள்ளை துணி சுற்றிய மூட்டையாக வந்து பட்டாசாலையில் கிடத்தப்பட்டபோது ஊரே சேர்ந்து எழுப்பிய ஒப்பாரி விண்ணைப் பிளந்தது.
மூன்று நாட்கள் அன்ன ஆகாரமும், சுய நினைவும் இல்லாமல் கிடந்த ஒயிலாவின் தாய், அசந்து உறங்கிக் கொண்டிருந்த விடிகாலைப் பொழுது. சட்டென எழுந்தவள் “ஒயிலா….. வந்துட்டியாம்மா.. வாடா கண்ணு, இதோ வாரேன்… “ என்று குரல் எழுப்பியபடி மளமளவென சுருட்டிப்பிடித்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினாள். மருமகளின் குரல் கேட்டு அருகில் இருந்த அப்பத்தாவும், மற்றும் சிலரும் விழித்துக் கொண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் அரை தூக்கத்தில் உட்கார்ந்திருந்தனர். மருமகள் இந்த நேரத்தில் எழுந்து வாசலை நோக்கி ஓடுவதைப் பார்த்த அப்பத்தா வேகமாக எழுந்து லைட்டைப் போட்டுவிட்டு மணியைப் பார்த்தார். விடியற்காலை 1 மணி. இந்த நேரத்தில் எங்கு போகிறாளோ என்று பின்னாலேயே ஓடினால், கதவைத் திறந்து கொண்டு , வெளியே தோட்டம் நோக்கிக் செல்லும் பாதையில் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தாள் அவள்.
“அடக்கடவுளே.. இவளுக்கு என்ன ஆச்சோ தெரியலியே… இந்த நேரத்துல தோட்டத்துப் பக்கம் போறாளே… டேய்… பழனிச்சாமி.. இங்கன வாப்பா.. வந்து உம்பட பொண்டாட்டி பண்ற வேலையைப் பாரு” என்று கூச்சலிட்டதைக் கேட்டு, ஒயிலாவின் தந்தையும் “என்னம்மா.. என்னாச்சு..” என்று ஓடி வந்தார். விசயம் புரிந்து தானும் வெளியே தோட்டத்தின் பக்கம் வேகமாக மூச்சிறைக்க நடந்து கொண்டிருக்கும் மனைவியின் பின்னால் ஓடிச்சென்று பிடித்து நிறுத்தினார்.
“அட…விடுங்கோ.. ஒயிலா கூப்பிட்டா, பாத்துப்போட்டு வாரேன். அழுதுட்டிருக்கா குழந்தை. தனியா இருக்க பயமா இருக்குதாம்.. நான் போய் வூட்டுக்கு கூட்டியாறேன்”
மகளை இழந்த சோகமே வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மனைவியின் இந்த செயலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. துக்கம் தாங்காமல் பாவம் ஏதேதோ செய்கிறாளே என்று வருத்தத்துடன், அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் போதுமென்றாகி விட்டது. வீட்டிற்கு வந்தும் திரும்பத் திரும்ப ”ஒயிலா அழுதிட்டிருக்காள், நான் போய் பார்க்கிறேன் “ என்று தோட்டம் பக்கம் போகவே துடித்துக் கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகிவிட்டது. திடீரென்று மகளை இழந்த சோகம் பாவம் மூளையை பாதிக்கிறது, நான்கு நாட்கள் போனால் சரியாகிவிடும் என்று நினைத்தாலும், அன்று போலவே அடுத்தடுத்த நாட்களும் இரவு நேரங்களில் அந்தத் தாயின் செய்கையை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது. காலம் மட்டுமே இதற்கான தீர்வை அளிக்க முடியும் என்று பொறுமையாக இருந்தாலும் இது அப்படியான ஒரு பிரச்சனை அல்ல என்பது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபோதுதான் தெரிந்தது!
தாயைப் போலவே இளைய மகள் மஞ்சுவும் அன்று விடியலில் எழுந்து ”அக்கா தோட்டத்தில்தான் இருக்காளாம்….. வா அப்பத்தா போய் பார்க்கலாம். “ என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். பத்தாம் நாள் காரியங்கள் செய்து சாந்தி பூசை முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.
மறுநாள் விடியலில் “அப்பத்தா… அப்பத்தா… எழுந்திரு அப்பத்தா…. உனக்குக்கூடவா என்னைத் தெரியல…. “ என்று ஒயிலா முனகும் ஓசை கேட்டு எழுந்து உட்கார்ந்துன் கொண்டவர் சுற்றி பார்த்துவிட்டு, வெறும் பிரம்மைதான் என்று திரும்ப படுத்து உறங்க ஆரம்பித்த நேரம், ”அப்பத்தா, நான் நம்ம தோட்டத்திலேயேதானிருக்கேன். நாளைக்கு அண்ணன் என் பொறந்த நாளைக்காக வாங்கி வச்சிருக்கிற துணியை வேப்பமரத்தடி கன்னிமார் சாமியின் ஐந்தாவது சிலைக்கிட்ட வச்சி பூசை பண்ணுங்க. இனி நம்ம குடும்பத்துக்கு எந்த குறையும் வராம நான் காத்து நிப்பேன்..” என்று ஒயிலா பேசியது கனவு போல இருந்தாலும் தெள்ளத் தெளிவாக இருந்தது.
பத்தாம் நாள் வீடு வாசல் மெழுகி, சுண்ணாம்பு பூசி, வீடு முழுவதும் கோமியம் தெளித்து, படையல் போடுவதற்கான ஆயத்தங்கள் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்தது. பொதுவாக கன்னி கழியாமல் இறந்து போகும் பெண்களுக்கு பெரிய சாங்கியமெல்லாம் செய்ய மாட்டார்கள். பத்தாம் நாள் கன்னிமார் பூசை செய்து முடிப்பதோடு சரி.
ஒயிலா தங்களை விட்டுப்பிரிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது என்று நம்பவே முடியவில்லை. தாயும் மெல்ல தேறி வருகிற நேரம். அன்று மஞ்சு அப்பத்தாவிடம் வந்து அருகில் அமர்ந்து கொண்டு,
“அப்பத்தா… அக்கா நேத்தும் ராத்திரி வந்துது அப்பத்தா. “
“என்ன சொல்ற கண்ணு. அப்டீல்லாம் சொல்லக்கூடாது. சும்மா மனப்பிரமை அது. அக்கா நம்மளையெல்லாம் விட்டுப்போட்டு சாமிக்கிட்ட போயிட்டா. இனிமே வரவே மாட்டா….”
“இல்லை அப்பத்தா. அக்கா சொல்லிச்சு. அக்கா தோட்டத்துல கன்னிமார் சாமி இருக்குற இடம் இருக்குதுல்ல.. அங்கனதான் இனிமே எப்பவுமே இருக்குமாம். வேற எங்கியும் போவாதாம். சாமியா இருந்து நம்மையெல்லாம் நல்லா பார்த்துக்குறேன்னு சொல்லிச்சு….”
“ ஆமாம் அக்கா நமக்கெல்லாம் தெய்வமா நம்ம கூடத்தான் இருப்பா…”
“அக்கா தன்னோட ரூமில ஒரு டப்பாவுல பொன் வண்டு வச்சிருக்குதாம். அதைய எடுத்து வெளிய உடச் சொல்லிச்சு. மறந்தே போயிட்டேன் பாரு” என்று சொல்லிக் கொண்டே ஒயிலாவின் அறையை நோக்கி ஓடியவளின் பின்னால் அப்பத்தாவும் சென்றார். அங்கு சென்ற மஞ்சு நேரே சொல்லி வைத்தது போல ஒயிலாவின் புத்தக அலமாரியைத் திறந்து மூன்றாவது தட்டின், இடது மூளையில் இருந்த ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தாள். அதனுள் இருந்த பொன்வண்டு பளிச்சென்று வெளியே தெரிந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அந்தப் பொன் வண்டு உயிருடன் படபடத்துக் கொண்டிருந்தது.
“பாத்தியா.. அப்பத்தா. அக்கா வந்தான்னு சொன்னா நம்ப மாட்டீங்கறயே.. பார் அக்கா சொன்ன மாதிரியே இங்க டப்பாவுல பொன் வண்டு உசிரோட இருக்குது..” என்று சொல்லிக் கொண்டே அந்த டப்பாவைத் திறந்து பொன் வண்டை எடுத்து மெதுவாக மேசைமீது வைத்தாள். வைத்த அடுத்த நொடி அது விர்ரென்று வேகமாகப் பறந்து அவர்களை மூன்று முறை சுற்றி வலம் வந்து சிட்டாகப் பறந்து விட்டது. நொடியில் அனைத்தும் நடந்து போன ஆச்சரியத்திலிருந்து மீளவே இல்லை அப்பத்தா.
வீட்டில் படையல் போட்டு பூசை முடித்து, தோட்டத்தில் கன்னிமார் பூசை செய்வதற்காகச் சென்ற போது அங்கிருந்த ஒரு கன்னிமார் சிலையின் முன் ஒயிலாவின் கண்ணாடி வளையல்களும், அண்ணன் வாங்கிக் கொடுத்த க்கு மிகவும் பிடித்தமான கருகமணி மாலையும் இருந்தது. அது எப்படி அங்கு வந்திருக்கும் என்று ஒருவருக்கும் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ”ம்ம்ம்ம்ம்….. ச்ச்ச்ச்ச்….ம்ம்ம்….” என்று ரீங்காரமிட்டுக்கொண்டு அந்த கன்னிமார் சிலையைச் சுற்றி வரும் பொன் வண்டைப் பார்த்தவுடன் ஏனோ நிம்மதிப் பெருமூச்சும் வந்தது. அப்பத்தாவும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!
படங்களுக்கு நன்றி:
http://badorgood.com/foto/golden-bug-189543
http://www.photochopz.com/gallery/showphoto.php/photo/2411/ppuser/4224
http://www.crjayaprakash.com/photography/index.php/Insects/Pon-Vandu