மருத்துவன் எனும் மகத்துவன்
அருண் காந்தி
அவனது முனங்கலையும்
கோர முகத்தையும்
கண்ட அவன் பிள்ளை கூட
அருகே வரப் பயந்து தன்
தாயின் பின்னே சென்று
ஒளிந்துகொண்டது
மரணம் மாடிப் படியேறி
வந்து அவன் மண்டையைப்
பிடித்து இறுக்குகிறது
முந்தானையால் மூக்கைச் சிந்தியவள்
‘எங்கொல சாமி நீதான்
அவுகளக் காப்பாத்தனும்’ என்று
அவர் பாதத்தில் மண்டியிட்டு
மன்றாடுகிறாள், அந்தத் தாய்
நசுங்கிய தசையையும்
ஒடிந்த எலும்பையும்
அறுந்த நரம்பையும்
அதன் இடம் பொருத்தி
காக்கும் கடவுளாய்த் தன்னைக்
கருத்தில் கொண்டு நம்பிக்கையுடன்
மருந்திட்டு மருத்துவம் செய்கிறார் அவர்
தன்னை ஏய்த்து அவனிடமிருந்து
பிரிந்து செல்லவிருந்த உயிரை
இடைமறித்துப் போராடி
கட்டிலில் இழுத்துக் கட்டி
மருத்துவம் எனும் மகத்துவம் செய்கிறார்
அந்த மருத்துவன் எனும் மகத்துவன்.