சச்சிதானந்தம்

 

அரசாளும் வல்லமை இல்லாத அரசு,

விரசமாய் ஊழலை எங்கெங்கும் விதைத்து,

உரசல்கள் நாடெங்கும் உண்டான போதும்,

விரிசல்கள் உண்டாகி இரண்டாகும் போதும்,

தரிசாகித் தாய்மண்ணின் தரம்தாழும் போதும்,

பரிசாக மௌனத்தை மட்டுமே தருமோ?

 

அண்டை நாடுகள் எல்லாம் துணிந்து,

சண்டை நாடுகள் ஆகின்ற போதும்,

இண்டைபோல் இதழ் இளித்துக் காட்டிப்பூச்,

செண்டைக் கொடுத்துக் கைகுலுக் குவதேன்?

 

ஊக்கம் தொலைக்கும் வேகத்துடன், பண

வீக்கம் தொடர்ந்து ஏறும் போதும்,

தேக்கம் அடைந்து பொருளா தாரம்,

தூக்கம் அழிக்கும் போதும், ஆளும்

நோக்கம் மறந்து நொண்டிச் சாக்குகள்,

பூக்கும் அரசின் பொல்லா வாயில்!

ஆக்கம் நிறைந்த அறிவிப் புகளை,

வாக்காய்க் கொடுத்து வாக்குகள் பெற்று,

ஏக்கம் மட்டும் கொடுக்கிறதே நம்மரசு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *