ஆவுடை நாயகம்

 voc

சமுக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு சுதந்திரமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் எத்தனை தியாகம், நேர்மை ,ஆற்றல் காலம் சென்று இருக்கிறது தெரியுமா? உங்கள் குழந்தைகள் எல்லோரையும் பணக்கார பொறியாளனாக, மருத்துவனாக ,அரசியல்வாதியாக, தொழில் அதிபராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள உங்களுக்கு சுதந்திரத் தியாகிகளை காலம் சென்றாலும் வாழும் காந்தியாகவோ, “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடிய மகாகவி பாரதி, வீரபாண்டிய கட்டபொம்பன், உமறுப் புலவர் போல வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து உள்ளதா? அதுகூட வேண்டாம் அவர்களின் தியாகத்தை, வீரத்தை என்றாவது உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறீர்களா? இன்று யார் பிறந்தநாள் தெரியுமா?  சினிமா நடிகர்  பிறந்த நாளாகவோ, இல்லை கிரிக்கெட் வீரர் பிறந்த நாளாகவோ இருந்திருந்தால் தெரிந்து இருக்கும் நீங்கள் நலமாக வாழ, பணக்காரனாக, வழக்கறிஞராக  வாழ வேண்டியவர் தமிழ்,சுதேசியம்,  என்ற அரசியல் கோட்பாட்டை ஏந்தி வந்தவனை தேசத்தாய் தாங்கிக் கொண்ட தினம் .ஆம் , “கப்பலோடு வருவேன் இல்லை கடலில் விழுந்து சாவேன் ” என்ற கப்பலோட்டிய தமிழன் , செக்கு இழுத்த செம்மல், வழக்கறிஞர் வ உ சிதம்பரத்தின் 142வது  பிறந்த தினம்.

ரூபாய் இருவது லட்சம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற ஆங்கில அரசின் சூழ்ச்சியை பாலகங்காதர திலகர் துணை கொண்டு வென்று தமிழனின் நேர்மையும், வீரத்தையும்  பறைசாற்றி பட்டொளி வீசி வங்கக் கடலில் சிங்கம் ஒரு கப்பலில் வந்தது கடல் மூலமாக வணிகம் செய்ய வந்தவர்களை திருப்பிக் கடல் வணிகத்தால் கலங்க வைத்த ஒரே தலைவன் , உன் பாட்டன் கப்பலோட்டிய  தமிழன் வ. உ.சிதம்பரம். சுதேசி கப்பலில் பயணிகள் நிரம்பினாலும் காத்திருந்து முதலில் ஆங்கிலேயர் கப்பல் சென்ற பிறகுதான் சுதேசி கப்பல் செல்ல வேண்டும் என்ற உத்தரவை நீதியின் துணை கொண்டு வீழ்த்தி சுதேசி கப்பல் சென்றது அப்படிப்பட்ட மாபெரும் வழக்கறிஞர் வ. உ.சிதம்பரம். கப்பலில் செல்லப் பயணிகள் கட்டணம் இலவசம், சரக்குக் கட்டணம் இலவசம் என்று கூறிய ஆங்கில அரசின் வியாபார தந்திரத்தையும், அரசியல் சூழ்ச்சியையும் கவனித்த சிதம்பரம் இலவசம்! இலவசம்  இது நம்மை விலைக்கு வாங்கும் முயற்சி.  எம்  மக்களே இலவசத்தை நம்பாதீர்கள் என்று இன்றைய இலவச அரசியல்  நிலையை அன்றே எடுத்து உரைத்தவன் கப்பலோட்டிய  தமிழன் வ. உ.சிதம்பரம்.

இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது.  

வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள்.வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். ஆங்கிலேயர்கள் பயந்து தூத்துக்குடி கடலில் உள்ள குட்டி, குட்டித் தீவுகளில் இரவுப் பொழுதைக் கழித்தார்கள்.

 சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது. மரணத்தின் மடியில் வ உ சிதம்பரம் இருக்கும் போது கடைசியாய் தன் மனைவியைத் தமிழ் பாடச் சொல்லியிருக்கிறார். ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் “. செவிகள் பாரதியின் வரிகளைத் தாங்கியபடி,  காலம் அவர் உடலை மட்டும் எடுத்துச் சென்றது. வரலாறு அவர் பெயரை எடுத்துக் கொண்டது!

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on "’கப்பலோட்டிய தமிழனின்’ 142வது பிறந்த தினம்!"

  1. ஆஹா! எப்படியாப்பட்ட தீர்க்க தரிசி நம் கப்பலோட்டிய தமிழன். ஆங்கிலேயன் செய்த இலவசம் என்னும் சூழ்ச்சியை வீழ்ச்சி அடையச் செய்தார் அன்று வ.வு.சி. ஆனால் இன்றைய இலவச சூழ்ச்சியை முறியடிக்கத் தெரியாமல் இந்திய ஜனநாயகம் திணறிக் கொண்டிருப்பதை காணும் பொழுது மனம் வேதனையில் அழுகின்றது. இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் இந்த இலவசம் என்னும் தந்திரப் புற்றுநோயை அறிவு என்னும் ஆயுதம் வைத்தே வேரறுக்க வேண்டும். வேரறுப்போம்.!

  2. சுதந்திரத்திற்காக நடந்த போராட்டங்களைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் வீறு கொண்டு எழுகிறது. நானும் ஒரு தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்தவளே!. கப்பலோட்டிய தமிழனின் பிறந்த தினத்தில் தியாகிகள் அனைவரையுமே நினைவு கூர்ந்து வணங்குவோம்.   

    திரு.சச்சிதானந்தம் சொல்வது போல் அறிவு என்னும் ஆயுதம் கொண்டே, இலவசம் என்னும் இந்தத் தந்திரப் புற்று நோயை வேரறுக்க வேண்டும்.   அற்புதமான பகிர்வுக்கு மிக்க நன்றி!

  3. இது தீரர் கூட்டம் நாங்கள் உயரிய செயல்களைச் செய்யும் தமிழர் கூட்டமென்று தமிழன் என்ற உயர்தனி அடையாளத்தை தரணி எலாம் பரப்பியத் தன்னகரில்லாத் தானைத் தமிழன் எங்கள் அண்ணல் வ.உ.சி. அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்பொன்றை அதுவும் மகாகவியோடு கூடிய முதல் சந்திப்பை இங்கே  அனைவரும் அறியத் தர சரியானத் தருணம்…

    மகாகவி உயிரினும் மேலாக மதித்த தமிழகத் தலைவர் வ.உ.சிதம்பரனார் பிள்ளை. இருவரும் ஒரேப் பகுதியான திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள், பிள்ளை அவர்கள் தூத்துக்குடியிலும், பாரதி எட்டயபுரத்திலும் அருகருகே இருந்தவர்கள் எனினும் பாரதியும் வ.உ.சியும் முதன் முதலில் சந்தித்தது சென்னையில் தான். 

    பாரதி ‘இந்தியா’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், சென்னை வந்த வ.உ.சி. பாரதியைச் சந்திக்க இந்தியா பத்திரிகை அலுவலகம் சென்றார். அங்கு சென்று பாரதியைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல, பத்திரிகாதிபர் மண்டயம் திருமலாச்சாரியார் பாரதியை விளித்து, “பாரதி! உன்னைப் பார்க்க உங்கள் ஊர்க் காரர் ஒருவர் வந்திருக்கிறார்” என்றார். 

    பாரதியும் கீழே இறங்கி வந்து தன்னைக் காண வந்திருக்கும் வ.உ.சியைப் பார்த்து யாரென வினவ, தான் ஒட்டப்பிடாரம் உலகநாத பிள்ளையின் குமாரர் சிதம்பரம் என்று சொல்ல, “ஓ! அப்படியா, உங்கள் தகப்பனாரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மகனா நீங்கள் உங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை, வாருங்கள் பேசிக் கொண்டேப் போகலாம்” என்று இருவரும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். ………

    – பாரதி போற்றிய பெரியோர்கள்.
    – திருவாளர் தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து.   (பக்கம் 61-62)

    இன்னொரு ரசிக்கும் படியான ஒரு செய்தி…. அதே புத்தகம் பக்கம் 65 ல்.

    வ.உ.சி அவர்கள் மகாகவி பாரதியை மாமா என்றே மரியாதையுடன் அழைப்பார்.

    அவர்கள் இருவரும் மாமா, மாப்பிள்ளை உறவு கொண்டு பழகினார்கள் என்றால் அவர்களின் நெருக்கத்தை பறை சாற்ற வேறொரு சான்றும் வேண்டுமோ!

    வாழ்க வளர்க வ.உ.சியின் புகழ். 

  4. /// “சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”///

    என்று அயல்நாட்டு நீதிபதி ஃபின்ஹே உணர்ந்ததை, இலவசத்திற்காக கப்பலுடன் வ.உ.சி. யின் கப்பல் தொழிலையும் சேர்த்தே கவிழ்த்த நம் மக்களால் ஏனோ புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று. இறக்கும் தருவாயில் “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” என்ற பாடல் வரிகளைக் கேட்டு என்னமாய் வ.வு.சி. வருந்தியிருப்பாரோ தெரியவில்லை. மனதைத் தொட்ட பதிவு, நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  5. மனதை வீறுகொள்ள வைத்த பதிவு. முதல் பாராவில் பெற்றோரையும் அடுத்தடுத்த பாராவில் பொதுமக்களையும் திருந்தசெய்யும் பதிவு. தஞ்சை கோபாலன் ஐயா அவர்களின் புத்தகத்திலிருந்து நண்பர் ஆலாசியம் கொடுத்த தகவலும் நன்று.

    செக்கிழுத்த செம்மலுக்கு சூட்ட இந்த சிறப்பு பதிவை தந்த ஆவுடை நாயம் அவர்களுக்கும் நன்றிகள்.

  6. தூத்துக்குடி வக்கீல் வ.உ.சிதம்பரம் பிள்ளையை “கப்பலோட்டிய தமிழன்” எனும் அடைமொழி கொடுத்து பெருமைப் படுத்தியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள். கெளரவமான குடும்பத்தில் பிறந்து, தேசபக்தி மிகுதியால் சுப்பிரமணிய சிவாவுடன் சுதேசிப் பிரச்சாரம் செய்து ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, காந்திய சகாப்தம் இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பாக தென்னாட்டில் குரல் கொடுத்தவர் அவர். நாற்பதாண்டு சிறைவாசம் என கோர்ட் தீர்ப்பளித்ததைக் கேட்டு மனம் பேதலித்த தன்னுடைய இளைய சகோதரர், வருமானம் இழந்து, தான் தொடங்கிய கப்பல் கம்பெனியை எதிரிகளிடமே விற்ற கொடுமை, சிறையில் தாங்கொணா கொடுமைகள், செக்கிழுத்தது போன்றவைகள் அவர் மன வலிமையைச் சோதித்து விட்டது. தண்டனை காலம் மேல் முறையீட்டில் குறைக்கப்பட்டாலும், அவர் விடுதலை அடைந்து வெளியே வந்தபோது அவரை கண்டுகொள்ள நாதியில்லாமல் போய்விட்டது. பொதுமக்களை விடுங்கள் அவர் இணைந்து பாடுபட்ட காங்கிரஸ் இயக்கம் கூட இவரை கண்டுகொள்ள வில்லை; காரணம் காங்கிரஸ் அப்போது மிதவாதிகளின் கரங்களில் சிக்கிக் கிடந்தது. காங்கிரசில் இருந்த மிதவாதிகள் (இவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்) இவரை மதிக்காமையும் இவர் அப்போது துவங்கியிருந்த ‘பிராமணரல்லாத’ இயக்கத்தின் பால் ஈடுபாடு கொள்ள வைத்தது. காந்தி சகாப்தம் வந்தபோது கையாளப்பட்ட அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற போராட்ட முறைகள், திலகர் கால புரட்சிக்காரரான வ.உ.சிக்கு ஏற்புடையதாக இல்லை. தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் இவரது வறுமையைக் கருத்தில் கொண்டு இவருக்காக திரட்டிய பணமும் இவர் கைக்கு வந்து சேரவில்லை. அது குறித்து இவர் எழுதிய கடிதத்துக்கு அப்போது இவருக்குச் சொல்லப்பட்ட பதில் இவருக்கு வெறுப்பையே அதிகரித்தது. வீறுகொண்டெழுந்த வ.உ.சியின் தேசபக்தக் கனல் வலிய சொந்த நாட்டுச் சீமான்களால் நீர் ஊற்றி அணைக்கப்பட்டது. புகழின் உச்சிக்குச் சென்று, திலகரின் அபிமானத்துக்கு உள்ளாகி தென்னகத்தின் தலைசிறந்த தலைவராக விளங்கிய வ.உ.சி. ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு, மிகச் சாதாரணமான மனிதராக உயிரை விட நேர்ந்தது. இவரை தமிழ்நாட்டில் எவரும் நினைவில் கொள்ளாமல் இருந்த காலத்தில்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. இந்த தமிழக வீரபுருஷனின் வாழ்க்கை வரலாற்றை “கப்பலோட்டிய தமிழன்” என்று விருது கொடுத்து எழுதி வெளியிட்டார். பி.ஆர்.பந்துலு இவர் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்து வெளியிட்டு மூலை முடுக்குகளில் எல்லாம் இவரது பெருமையைப் பரப்பினார். அப்படிப்பட்ட பந்துலுவின் நூற்றாண்டுவிழா ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது அதைக் கொண்டாட தமிழகத்தில் நாதி இல்லாமல் போய்விட்டது. வ.உ.சியைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது, வல்லமையில் வெளியான வ.உ.சி பற்றிய செய்திகள். வல்லமைக்கு நன்றி.
    தஞ்சை வெ.கோபாலன்

  7. இந்திய விடுதலைக்காக அயராது உழைத்த அந்தக் ’கப்பலோட்டிய தமிழன்’ , ‘தன்மானச் சிங்கம்’ சிறைசென்று வெளியே வந்தபோது அவரை வரவேற்க ‘சுப்பிரமணிய சிவா’வைத் தவிர ஒருவருமே செல்லவில்லையாம்.

    தமிழர்களுக்கு எப்போதுமே ‘selective amnesia’ தான் போலிருக்கிறது. அதனால்தான் தியாகிகளையும், அவர்கள் செய்த உண்மையான தியாகங்களையும் உடனேயே மறந்துவிடுகின்றோம்; நடிகர்களையும் அவர்கள் வெள்ளித்திரையில் நாட்டிற்காகச் செய்யும் (2 மணி நேரத்) தியாகத்தையும் என்றும் மறவாது அவர்களுக்கு நாடாளும் வாய்ப்பை வழங்கி கௌரவப்படுத்திவிடுகின்றோம். வாழ்க நம் நாட்டுப்பற்று!

    வ.உ.சி.யின் பிறந்தநாளில் அவரையும், அவரின் தன்னலமற்ற தியாகத்தையும் நினைவுகூரவைத்த கட்டுரையாசிரியருக்கு உளம்நிறைந்த பாராட்டுக்கள்!!

  8. வல்லமை ஆசிரியர் 
    தஞ்சை  வெ கோபாலன் 
    தனுசு 
    மேகலா ராமமூர்த்தி 
    தேமொழி 
    பார்வதி ராமசந்திரன் 
    சச்சிதானந்தம் 
    அலசியம் 
    அனைவருக்கும் என் சிரம் தாழந்த நன்றிகள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.