இன்னம்பூரான்

windowslivewriter8cae7123c029-14583india-electricity-shortage10என்றோ ஒரு நாள், ஜம்பூத்வீபத்தின் தென் பிராந்தியத்தில் சடுகுடு சாம்ராஜ்யத்தை ‘ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர தைர்ய மதன காம மஹராஜா’ எனப்படும் மைனர் பையன் கிச்சு கிடுக்கிப்பிடி நிர்வாஹம் செய்து கொண்டிருந்தான். அந்தப்புரத்து அந்தரங்கத்தில் அடாவடி செய்யுமவன், அமைச்சர் அறிவுரையை அறவே அழிப்பதில் குறியாக இருப்பான். கேளிக்கை என்று இறங்கி விட்டால், இஞ்சி தின்றவுடன் தேறல் குடித்த குரங்கு மாதிரி தொம் தொம் என்று குதிப்பான். அவனுடைய துள்ளலோசை உலகெங்கும் எதிரொலிக்கும். எதிராளி போர்க்கொடிதூக்கினால், ஓடி ஒளிவான், அந்த பயந்தாங்கொள்ளி. அவனது நிர்வாகத்திறனின்மை பகிங்கிர ரஹஸ்யம் என்றாலும், அதை பற்றிய விமர்சனம் மட்டுறுத்தல் செய்ய்ப்பட்டிருந்தது. இத்தனைக்கும் மேதாவிலாச ராஜ்யபாரம் வகித்த அவனுடைய அப்பன் நிஜமாகவே ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர ‘வாகை சூடி’ மஹராஜா தமிழரசர். எதுவும் மிதம் அவருக்கு. ஜனோபகாரம் தான் அவருக்கு இலக்கு. அதனால் தான் தாராளமாகவே ராஜ்ய பரிபாலனம் பற்றிய செய்திகளை, ஆணைகளை, அவற்றின் பின்னணி, பிரதிபலன்களை கோட்டை வாசல் ராஜபேரிகை மூலம் ஒலிக்கவேண்டும்; ஒளிவு, மறைவு கூடாது; தர்பார் ஹாலில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டிருந்தார். வரலாற்றை போற்றி பணிந்து பின்பற்றும் பாரதவர்ஷத்தில், அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று மார் தட்டிக்கொள்கிறார்கள், தற்கால சாணக்கியர்கள். கறுப்புப்பணாதிபதிகள், லஞ்ச வாவண்ய பிரபுகள், ஹாய் ஹவாலா ஹைஸ்ட்ரீட் கொள்ளையர், பினாமி சுனாமிகள் ஆகியோரின் பட்டியல் கேட்டாலே, கோபாவேசத்தில் ரோமம் சிலிர்த்து, முகம் சிவந்து, கண் துடிக்க, செவி மடங்க, உதடுகள் ஆட, தகவல் மறுக்கும் Official Secreteers ஆகிவிடுகிறார்கள் மேலாண்மை பிரமுகர்கள்.

இப்போது அந்த black listல் சேர்ந்து விட்டது தமிழ்நாட்டு மின்சார வாரியம். தமிழரசரை உதறிவிட்டு கிச்சு பரமஹம்சாதிபதியின் சிஷ்யகோடி ஆயினர் தமிழ்நாட்டு மின்சார வாரியம்.

Point at issue: மின்சாரம் திருடுபவர்களின் பட்டியல். வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி, வருடாவருடம் மின் திருடுகள் அதிகரித்து வருகின்றன. 2007-8ல் 3746 திருட்டுகள்; 2012-13ல் 8166. ஏப்ரல் 2013: 699. பேஷ். கெடுவுக்குள் மின்கட்டணம் கட்டத்தவறிய மின்வெட்டு பலியாடுகள் ஆகிய சராசரி சிறு நுகர்வோர்களுக்கு கணிசமான கறார் அபராதம். திருடனுக்கு மறைமுக ஆதரவா? அதனால் அந்த அபராதிகளின் பட்டியல் தர மறுக்கிறார்களோ?

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) என்ற குடையின் கீழ் குளிர் காயும் மின்வாரியம் அந்த பட்டியல் அளிக்க மறுப்பது ஜனநாயக்கு முரண். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) பட்டியல்தாரர்களுக்கு அபாயமோ அல்லது விசாரணைக்குத் தடங்கல் ஆக இருந்தால் தான் உகந்த  வழிமுறை. அதன்படி விவரம் அளிக்க மறுப்பது பிணம் தின்னும் சாத்திரம் போல்.உண்மை யாதெனில், பரம்பரை மின் திருடர்கள் அரசியல் கட்சிகள். கோடிக்கணக்கில் கந்து வசூல் செய்து, அலங்கார பந்தல் போடும் அரசியல் கட்சிகள் ஒளி திருட தயங்குவதில்லை. அவர்களை காட்டிக்கொடுக்க அஞ்சுகிறது மின் வாரியம். அப்படியானால், கோடிக்கணக்கான அந்த செலவை ஏற்றுக்கொளவது, வோட்டுப்போடும் மக்கள்.

மின் வாரியம் மக்களுடன் தம் பிடித்து பளிஞ்சாடிரடி குடு குடு… விளையாடுகிறது, கிச்சுவின் கேளிக்கைப் போல. உருப்பட்டமாதிரி தான்!

Image Credit: Google

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பளிஞ்சாடிரடி குடு குடு…

  1. கொக்கியைப் போட்டு திருடுற கூட்டம்,

    திருடிக் கொண்டே இருக்குது, கேட்க

    வக்கில்லாம வாரியம் வாலை,

    சுருட்டிச் சுகமாத் தூங்குது!

  2. வக்கு எங்கே போச்சு? தட்டிக்கேட்கவேண்டிய மக்கள் உறங்கிகொண்டே இருப்பதால் தான், இந்த வினை.
    இன்னம்பூரான்

  3. சில பத்திரிக்கைகள் கொள்ளையர்களை காட்டிக் கொடுதாலும் பலனில்லாமலே காலம் ஓடுகிறது. நீதிமன்றங்களும் இழுத்தடிக்கின்றன. 
    வேறு தீர்வு உண்டா  இன்னம்பூரான் ஐயா? மின்வாரியத்தை தனியார்மயமாக்கினால் பலனளிக்குமோ தெரியவில்லையே. 

    அன்புடன்
    ….. தேமொழி 

  4. மின்சார வாரியம் என்பது அரசியல் வாதிகளுக்கு மின்சாரம் வாரி கொடுக்கும் இலகாதான். ஆளும் கட்சியை விடுங்கள், வேறு எதிர் கட்சிகள் ஏதாவது இதுவரை இந்த மின்சார இலாகவுக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறதா. ஏழைகளுக்கு ஆதரவாக, மருத்துவதுறைக்கு எதிராக, கல்விதுறைக்கு எதிராக களம் இறங்கும் இந்த எதிர் கட்சிகள் இதுவரை மின்சார இலாகவுக்கு எதிராக ஏதாவது செய்துள்ளார்களா, கம்யுனிஸ்டுகள்கூட மின்வாரியத்திற்கு எதிராக் போராட்டம் நடத்தியதில்லை.ஏன் என்றால் அத்தனை கட்சிகளும் கொக்கி போடுவது இந்த இடம், அவர்களை எதிர்த்தால் இவர்கள் கொக்கி போட முடியாது.

    தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார் எனும் நிலையில் தான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் ஒருவர் வன இலாகவுக்கு
    பணம் கட்டி கேட்ட தகவல்களுக்கு அவர்கள் 170 பக்கங்கள் பதில் அனுப்பினார்கள் , அதில் இருந்த தகவல்கள் பெரும் அதிர்சியை தந்தது. அப்படி அதில் என்னதான் இருந்தது என்றால் அத்தனையும் வெறும் வெள்ளை பேப்பர்கள்.

    இனி அந்த கமிஷன் என்ன செய்கிறது என அறிய பணம் கட்டி தகவல் அறியவேண்டியதுதான்.

  5. கருத்துக்களுக்கு நன்றி. நான் சொல்ல வந்த விஷயம் இதை எல்லாம் விட ஆழத்தில் உள்ளது. திரு.சச்சிதானந்தம் இயலாமையை பகிர்ந்து கொண்டார். தேமொழி தீர்வு கேட்கிறார். தனுசு அரசியலுடன் இணைக்கிறார்.

    என் பதில்:
    கண்ணுக்கு எதிரே கொலை நடந்தால், கண்டு கொள்ளாமல் இருப்பது கொலைக்கு ஆதரவு. மதுரையில் நகராட்சியே மின் திருடல் செய்ததாக செய்தி. மின் திருடல் பல வருடங்களாக நடந்து வருகிறது, பொது மக்களின் ஆதரவுடன். சான்றாக ‘ஒரு பல்பு’ இலவச ஒளி கொடுத்தால், அதிலிருந்து சிறு தொழில் நடத்துவது மக்கள். அரசியல் மீட்டிங்குக்கு மின்சாரம் லவட்டினால், மக்கள் பிரிதிநிதிகள் அதை நாடுகிறார்கள். கம்பேனிகள் லஞ்சம் கொடுத்து திருடுகிறார்கள். தணிக்கைத்துறை நாற்பது வருடங்களாக, கரடியாகக் கத்தினாலும், செவி சாய்ப்போர் இல்லை.
    தீர்வு: மக்கள் எழுச்சியுடன் இதை எதிர்க்கவேண்டும். தனுசு சொல்வது ஒரு நிகழ்வாக இருக்கலாம். தகவல் உரிக்கும் சட்டம் செம்மையாகவும்/சில சமயம் அசட்டையுடன் பணி செய்வதால், நாம் தளர்ச்சி அடையக்கூடாது. மின் திருட்டுக்கு மக்கள் அதரவை முதலில் ஒழியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *