ஷஹான் நூர்

அன்பு, பாசம், பிணைப்பு, நேசம் இவை போன்ற உணர்வுகளின் ஒரு கவர்ச்சிகரச் சொல்லாடலே காதல் எனப்படுவது. இந்த அளவுகோலில் இருந்துதான் காதலை நாம் நோக்க வேண்டும்.

“காதல் எங்கு இருக்கிறதோ, அங்குதான் வாழ்க்கை இருக்கிறது” என்று கூறினார் அண்ணல் காந்தி அவர்கள்.

“காதல் பேய் மாதிரி, எல்லோரும் அதைப் பற்றி பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்” என்று ஒரு வரைவிலக்கணம் தருகிறார், திரு.லே-ரோச்சி ஃபோகால்ட்.

இப்படித்தான் நாம் காதலைப் பார்க்க வேண்டியுள்ளது. அன்பு என்பதின் ஆகச்சிறந்த பரிணாமமே காதல். இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அத்துனை உயிர்களும் காதலால் பிணையப்பட்டுள்ளவைகளே. பரந்து விரிந்த இப்பூமியில் எங்கும் வியாபித்துள்ளது காதல். நமக்கெல்லாம் அநேகமாக இது மனித இனத்திற்க்குண்டான ஒரு சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இது முற்றிலும் அறிவுக்கு ஒவ்வாத ஒரு பார்வை. காதலானது, பூக்கும் மலருக்கும், செடிக்கும் இடையில் உள்ளது. ஒரு பறவைக்கும் அதன் குஞ்சுக்கும், முளைக்கும் தாவரத்திற்க்கும், மண்ணிற்க்கும், இப்படித்தான் இன்ன பிற விலங்குகளுக்குமாக காதல் ஊன்றி இருக்கிறது. காதல் என்பது வெறும் ஊடல் சார்ந்த நிகழ்வல்ல, அது உயிரின் நுட்பம்.

பலரும் இவைகளை மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். இளம் பருவ, இரு பாலினர்களுக்கிடையே உருவெடுக்கிற சில அற்பத் தேடல்களுக்குக் கூட இங்கு காதல் ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. ஆனால் ஒரு தாய்க்கும், சேய்க்குமான பாசமோ, சகோதரர்களுக்கிடையேயான பந்தமோ, நல்ல நட்புகளுக்கு இடைப்பட்ட உறவோ இங்கு அவ்வாறாகப் பார்க்கப்படுவதில்லை, குறிப்பாகக் காட்டப்படுவதில்லை.

காதல் எனும் ஒரு இயற்கை உணர்வை, ஆபாசமாகச் சித்தரிப்பதில் பெரும்பாலும் இன்று ஊடகங்கள் முன்னனியில் உள்ளன. அதன் அசுர வளர்ச்சியில் இருக்கும் சினிமா இன்றியமையாதப் பங்கினை ஆற்றுகிறது. திரைப்படங்கள் யாவுமே இலக்கியங்களின் பிரதிபலிப்புகளே. இலக்கியங்கள் யாவும் வாழ்வின் பிரதிபலிப்புகளே. ஆனால் அவ்விலக்கியங்கள் எடுத்து இயம்புகின்ற நற்க்-காதல் உறவுகளை ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு பெரும் கலாச்சார, நாகரீக அழிவுகளுக்கு வித்திடும் மேலை நாடுகளின் கவர்ச்சிகள் இங்கு காதலாகப் பிண்ணப்படுகிறது.

பிப்ரவரி-14 என்கிற தினமே கூட காதலை முன்னிலைப்படுத்தும் நிகழ்வாக இல்லை. காதலுக்கு என்று எந்த தினமும் கிடையாது, அது தேவையுமற்றது. ‘வெலடைன்ஸ் டே’ என்பது முழுக்க, முழுக்க வணிகப் படுத்தும், வாழ்த்து அட்டைகளை சந்தைப் படுத்தும் ஒரு இலாப நோக்குடன் பரப்பப்பட்ட ஒன்றே. உலகில் கிருஸ்த்துமஸ் பண்டிகைகளுக்கு, அடுத்தாக வாழ்த்து அட்டைகள் அதிகம் விநியோகம் ஆவது பிப்ரவரி14 நிகழ்வில்தான் என்று, அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு அறிக்கை கொடுக்கிறது. இங்கு சமூக அமைப்பு அப்படி கட்டமைக்கப்பட்டுவிட்டது. இதில் ஆளும் அரசுகளின் பெரும் சதிகள் பொதிந்துள்ளது என்பது அரசியல். இங்கு இவ்வளவான விசயங்களுக்குள் நுழையத் தேவையில்லை. கிடைப்புகளிலே காதல் ஒரு அழகான கிடைப்பு.

நான் மேற்க்கூறியது போன்று, காதல் என்பது பருவம் எட்டிய ஆண்,பெண் இருபாலருக்கு இடையேயான மோகமாகச் சித்தரிக்கப்படுவிட்டது. ஆனால் அது ஒரு காதலின் வகையே அன்றி. அதுவே காதல் அல்ல, மேலும், அப்படியான காதல் வகையிலே, இங்கு அது அதன் அளவீடுகளைக் கடந்துதான் பயணிக்கிறது, இளைய வட்டங்களின் மத்தியில்.

“மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுதும், மாறாதிருப்பதுதான் காதல்” என்கிறார், ஷேக்ஸ்ஃபியர்.

“என்றும் மாறாத காதல், பார்த்ததும் வருவதில்லை” என்கிறார் கிறிஸ்டோபர் மார்லோவ்.

“கடுகளவு நம்பிக்கையே, காதல் பிறப்பதற்க்கு போதுமானது” என்கிறார், ஸ்டென்தாஸ்.

இவைகள்தான் வயது வந்த பருவத்தினருக்கு இடையே மலரும், மனம் மாற்றி, திருமணம் முடித்து வாழ முற்பட எண்ணி நிகழும் உயிர் கலப்புச் சம்பவமான காதலின் ஒரு வகை. மேற்ச் சொன்னவர்கள் சிறந்த தத்துவியலாளர்கள், இவர்களின் கூற்றும் காதலை இப்படித்தான் சித்தரிக்கின்றது. ஆனால் இன்றுள்ள காதல் என்பது இப்படியானதாகவா உள்ளது என்பதனை நான் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. அதே சமயம் மேற்க்கூறியவைகளைத் தவிர்த்து, வெறுமனே உடல் உராய்வுகளில் தொடர்வது காதலல்ல. காமத்தின் தொடக்க நிலைகளை காதல் என்று அறிந்து வைத்திருக்கும் மடமை. அதேசமயம் காமம் அற்று காதலில்லை. காமம் மட்டுமே காதலுமில்லை. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது காமம் என்ற சொல்லாடல் என்பது ஒருவகையான இன மோகம். இது காதல் இல்லாதவனிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காமம் மட்டும் தேடி அலையும் மாந்தரிடத்திலோ, அற்ப பொருள்களுக்காக உடல் விற்க்கும் மாந்தரிடத்திலோ காதல் ஒரு நாளும் வராது, இருப்பதில்லை, என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் காதல் புனிதப்படுகின்றது.

திருமண பந்தத்திற்க்குப் பிறகு நிகழ வேண்டிய பலவும், காதல் என்கிற பெயராலே பரிமாற்றிக் கொள்வதன் விளைவு, திருமணத்திற்குப் பிறகு அவைகளெல்லாம் சலிப்படைந்துவிடுகிறது. சதை, சரும ஈர்ப்புகளால் கொள்ளப்படும் காதலானது, அதன் தேவை முடிந்தவுடன், கலங்கப்பட்ட காதலும் முடிந்துவிடுகிறது. மேற்ச்சொன்ன கிறிஸ்டோபர் மார்லோவின் கருத்தினை நான் மீண்டும் நினைவு படுத்துகிறேன். அநேகப் பேரின் காதல்கள் பார்த்த மாத்திரத்தில் வந்து விடுகின்றது. இது அப்பட்டமாக வயதின் ஈர்ப்பே அன்றி வேறில்லை. அதேசமயம் மணவாழ்வு சிறக்க வேண்டுமெனில் இரு உள்ளங்களும், தங்களின் எதிர்பார்ப்புகளைக் கொண்டே துணை அமைக்க வேண்டும். அதில் வெறுமனே உடல் கட்டமைப்பு, அழகு, வெளுப்பு போன்றவைகளை எதிர்நோக்கும் அதே நேரம் குணம் என்ற ஒன்றையும் சேர்த்தே நோக்க வேண்டும். இவைகளில்தான் மரணிக்கும் வரையில் அப்பந்தமானது நீடிக்க வழி வகுக்கும். அதே சமயம் இரு மனங்களும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர்களின் முடிவுப்படி தலையசைப்பது, எதிர்காலத்தில் ஆழ்பெரும் இன்னல்களை உருவாக்கிக் கொடுக்கும். காதல் காலத்தில் காமம் தவறு, திறுமணத்திற்க்குப் பிறகு காமம் மட்டுமே தவறு.

இறுதியாக காதலைப் பற்றி ஷேக்ஸ்ஃபியரின் இந்தக் கூற்றை வைக்கிறேன்.

“காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை. தங்கள் காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இதுதான் உண்மை, காதல் அப்படி எங்கும் எவரிடத்திலும், எதன் மீதும் பற்றி வியாபித்திருக்கிறது. வயது எய்திய பாலினருக்கு இடையே மலர்வது மட்டுமல்லக் காதல், அது ஒவ்வோர் வயதினரிடத்தும், பிறப்புகளினிடத்தும், தோன்றிய ஓர் உடன் பிறப்பு. அதில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகையே நாமெல்லாம் பேசிக் கொள்கிற ஆண்,பெண் உறவான காதலென்பது. இறைவனைக் கண்ணால் காணாமல் நாம் வைக்கின்ற நம்பிக்கையில் இருப்பதும் கூட ஒரு வகையான காதலே.

ஆக இப்படியாக, காதல் எனும் ஓர் அழகிய இயற்கை வரத்தினை வகைப்படுத்தலாம். இன்னும் நீளமாகச் செல்லவோ, விரிவாகச் சொல்லவோ நிறைய இருந்தாலும், காதலை அனுபவித்தவர்களுக்கு, நுகர்ந்தவர்களுக்கு இச்சிறு எழுத்துக் கோர்வைகளே ஓர் விளங்கியல் உணர்வை தருமென கருதுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *