பெருகிய சாம்பல் காட்டில்……..

 
எஸ் வி வேணுகோபாலன்

 

வெறும் ஊரொன்றின்
பெயரல்ல வெண்மணி
ஒரு கோர நிகழ்வொன்றின்
வலி மட்டிலுமல்ல அது

உள்ளே கனன்று கொண்டிருக்கும்
நெருப்பை
தலைமுறைகளுக்குப்
பற்ற வைத்துக் கொண்டிருக்கும்
சாம்பல் மேட்டின் கதை அது

ஒற்றை அராஜக பழிவாங்குதலின்
நினைவு மட்டுமல்ல வெண்மணி
வர்க்க மேலாதிக்க
வன்மத்தின் உருவகக் காட்சி அது

நொறுங்கிய வளையல்களுக்குள்
குழந்தைகளின் கடைசி கதறலும்
சிதறிய எலும்புகளில்
களையெடுத்த பெண்களின் காறித் துப்பலுமாய்ப்
பெருகிய சாம்பல் காட்டில்
பயிராகிக் கொண்டிருக்கிறது
கால காலத்திற்குமான வர்க்க பாடம்

அமைதியான சூழலென்று
அடிமைத்தனத்திற்குப் பெயரிடும் சமூகம்
கலகம் என்று அரற்றுகிறது
உரிமைகளுக்கான எழுச்சியை

உயிர்கள் பற்றி எறிவதன்
வேதனைக் கூச்சல்கள்
செவிகளில் விழமறுத்த
நீதி தேவதையின்
மூடப் பட்டிருந்த கண்களுக்கு
செல்வாக்கு மிக்க கனவான்களது
கார் தெரிந்தது புதிய சாட்சியம்

ஆத்திரத் தீயின் ஆறாத சாம்பல்
சோக நெடுங்கதையின்
கண்ணீரைக் குடித்தும்
கனன்றபடி காத்திருக்கிறது

எழுதப்பட வேண்டிய இறுதித் தீர்ப்பு
இன்னும் மீதம் இருக்கவே செய்கிறது….

**********

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *