வெறும் ஊரொன்றின் பெயரல்ல வெண்மணி ஒரு கோர நிகழ்வொன்றின் வலி மட்டிலுமல்ல அது
உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பை தலைமுறைகளுக்குப் பற்ற வைத்துக் கொண்டிருக்கும் சாம்பல் மேட்டின் கதை அது
ஒற்றை அராஜக பழிவாங்குதலின் நினைவு மட்டுமல்ல வெண்மணி வர்க்க மேலாதிக்க வன்மத்தின் உருவகக் காட்சி அது
நொறுங்கிய வளையல்களுக்குள் குழந்தைகளின் கடைசி கதறலும் சிதறிய எலும்புகளில் களையெடுத்த பெண்களின் காறித் துப்பலுமாய்ப் பெருகிய சாம்பல் காட்டில் பயிராகிக் கொண்டிருக்கிறது கால காலத்திற்குமான வர்க்க பாடம்
அமைதியான சூழலென்று அடிமைத்தனத்திற்குப் பெயரிடும் சமூகம் கலகம் என்று அரற்றுகிறது உரிமைகளுக்கான எழுச்சியை
உயிர்கள் பற்றி எறிவதன் வேதனைக் கூச்சல்கள் செவிகளில் விழமறுத்த நீதி தேவதையின் மூடப் பட்டிருந்த கண்களுக்கு செல்வாக்கு மிக்க கனவான்களது கார் தெரிந்தது புதிய சாட்சியம்
ஆத்திரத் தீயின் ஆறாத சாம்பல் சோக நெடுங்கதையின் கண்ணீரைக் குடித்தும் கனன்றபடி காத்திருக்கிறது
எழுதப்பட வேண்டிய இறுதித் தீர்ப்பு இன்னும் மீதம் இருக்கவே செய்கிறது….
ஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி.
வங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல்.
அற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம், கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது.
படைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்….அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது…