சிறுகை அளாவிய கூழ் – 12
இவள் பாரதி
அறையெனும் பூமிப்பந்தில் உறங்கும்
குட்டிச் சூரியனே
நீ விழித்ததும்
விடிகிறதெனக்கு
————————–
குழந்தைக்கு
ஊர்கண் பட்டிருக்கும்
சுத்திப் போடு என்கிறார்கள்
உன்னை அணுஅணுவாய் ரசிக்கும்
என் கண்ணும்பட்டிருக்கும்
என் காலடிமண்ணை
எடுத்துத்தர சம்மதம்தான்
இந்த சிமென்ட் பூச்சுத் தரைகளில்
எப்படி எடுப்பது நகத்தளவு மண்ணை
தெருமுனைக்குச் சென்று
தானே வளர்ந்திருந்த செடிக்கருகிலிருந்து
சிறிதுமண்ணை எடுத்து வந்து
அதன்மீது நடந்து தந்துவிட்டேன் உன் பாட்டியிடம்
இனி உனக்குக் காய்ச்சல் அடிக்காது கண்ணே..
————-
