திருமால் திருப்புகழ் (80)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்….
————————————————

’’கண்ணன் அந்தாதி’’
———————————————

உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்….(6)
விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….(7)
துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
பாரா திருப்பதேன் பகர்….(8)
பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
நரஹரியே மோனத்தூ ணாக்கு….(9)
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….(10)
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2013_05_01_archive.html

கிரேசி ஐயாவிற்கு,
வணக்கம்.
//பாரா திருப்பதேன் பகர்….(8)// என்னும் வரிகளில் “இருப்பதேன் பகர்” என்னுமிடத்தில் தளை தட்டுகிறது.
உங்கள் எழுத்தின் இரசிகனாய்,
பிரசாத் வேணுகோபால்.