நாதமெனும் கோவிலிலே – கண்ணதாசனின் தத்துவ தரிசனம்
நாதமெனும் கோவிலிலே
கவிஞர் காவிரி மைந்தன்
மெல்லிசை மன்னர் வழங்கியிருக்கும் இசைக்கட்டோடு கண்ணதாசனின் தத்துவ தரிசனத்தில் திரைப்பாடல் கூட திருக்கோயில் போல காட்சியளிக்கிறது பாருங்கள்! பாலச்சந்தரின் மன்மதலீலையில் வாணிஜெயராம் அவர்களின் குரலில் வெளிப்படும் ஞானரதத் தேரோட்டம்!!
ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் பிரகாசங்கள்.. ஒளி உமிழ.. நம் உள்ளங்களில் அந்தப் பிரதிபலிப்பு கிடைத்திடும் உணருங்கள்!
நொடிக்கு 72 முறை இதயம் துடிதுடிக்க..
படபடப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை!
இன்பதுன்பங்களின் கூட்டுக்கலவை வாழ்க்கை!
என்கிற பட்சத்தில் மனதுக்கு தூக்கமில்லை!
அடுத்த காட்சி என்னவென்று தெரியாத
அதிசய நாடகம் இந்த வாழ்க்கை!
அதில்தான் ரசமிருக்கிறது! சுவையிருக்கிறது.. தேடலிருக்கிறது!
எடுத்த காரியம் நடந்து முடிவதற்குள் என்னவாகுமோ என்கிற
கவலையை மனிதனை கரைத்துவிடுகிறது!
சற்றே அமைதியுற கண்களை மூடுகிறான்.. தூக்கம் மட்டும் வந்துவிட்டால் பராவாயில்லை! கனவிலும் துரத்திவரும் கவலைகள் எத்தனை? அத்தனைக்கும் ஆண்டவனின் சன்னிதானம் நிம்மதி தருகிறது என்கிற நம்பிக்கையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் ஆலயங்கள்! அங்கே ஒற்றைத் திசைநோக்கி ஆயிரமாயிரம் விளக்குகள் பிரகாசிக்கின்றன! அந்த வெளிச்சத்தில்தான் மனிதனின் மனதிற்குள் ஞானதீபம் ஏற்றப்படுகிறது! அந்த ஞானவிளக்கிற்கு சாட்சி சொல்ல வரும் பாடல்.. நாதமெனும் கோவிலிலே..
நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்…..
நாதமெனும் கோவிலிலே ……..
இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் – நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
[நாதமெனும்…]
விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே – நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
[நாதமெனும்…]
இறைவன் என ஒருவன் எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் – இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்
[நாதமெனும்…]
படம்: மன்மதலீலை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்