வணக்கம்.

இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது. 2014 – 15 கல்வியாண்டில் நான் நடத்தும் முதல் பயிலரங்கு இதுவாகும். இராணிப்பேட்டைக்கு என் மகன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் அவர்களை அணுகி என்னுடைய தன்னார்வப் பணி குறித்து அறிமுகம் செய்துகொண்டேன். தலைமை ஆசிரியை திருமதி சந்தானம் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தார். வாய்ப்பில்லாத அரசுப் பள்ளி மாணவர்க்கு மிகத் தேவையான பயிற்சி எனப் பாராட்டினார்.
உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட காந்தி சிலை என்ற குறிப்புள்ளது.
பயிலரங்கு கற்றல், நினைவாற்றல் பெருக்கல் (Registration,Retention,Recall), குறிக்கோள் உணர்தல், குறிக்கோளை நிர்ணயித்தல், அடைதல், காலம் போற்றல், பெரியாரைப் பேணிக்கொளல், மனித உறவுகள் வளர்த்தல் என்ற வகையில் திருக்குறள், சிறுசெய்முறைகள், கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், வாழ்வியல்நெறி முறைகள் வழி அமைந்தது. பெற்ற தாய்க்கும், பிறந்த பொன்னாட்டிற்கும், வளர்த்த நூற்றாண்டு காணப்போகும் பள்ளிக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை மாணவர்க்கு உணர்த்தினேன்.
வகுப்பறை 130 மாணவர் அமர்வதற்குச் சிறிய இடம் என்ற குறையன்றி நிறைவாகப் பயிலரங்கு அமைந்திருந்தது என்பது மாணவர்கள் எழுதித் தந்த பயிற்சி குறித்த கருத்துப் படிவங்கள் (FEED BACK)மூலம் புலனாகி மனதிற்கு நிறைவு தந்தது.
நண்பர்கள் பார்வைக்குப் பள்ளி, பங்கேற்ற மாணவர், முதுநிலை ஆசிரியர் திரு சரவணன் படங்கள் பகிர்ந்துள்ளேன்.



Leave a Reply