திருவள்ளுவர்
-நாகினி
குறள் வெண்பாவில்
மருள் நீக்கிடும்
அருள் பாக்களை
முப்பாலில் இலக்கியச்சுவை
குன்றா நயமோடு வழங்கியோன்…!
கல்வி கேள்விகளில்
கருத்தாய்ச் சிறந்து
கண்ணியமுடன் அரசு
கடமை ஆற்றும் பண்பைக்
கல்லில் எழுத்தெனப் பதித்தோன்…!
களவு கற்பு எனத்
திருமணவாழ்வுக்கு முன் பின்
காதல் உணர்வைத்
தரமான சொற்கோ(ர்)வையால்
களங்கமற்ற பாமாலையாக்கிக்
கபடறியா உண்மைக் காதலைத்
தரணிக்கு உணர்த்தியோன்…!
பாரில் மனிதம் நிலைக்க,
பகுத்தறிவு மனிதர் நற்பண்புகளைப்
பாங்குடன் கடைப்பிடிக்கவே
பக்குவமாய் நல்நெறிகளைப்
பசுமரத்தாணியென அறைந்தோன் …!
அறம்பொருள்இன்பம் எனும் முப்பாலை
133 அதிகாரம் என வகுத்து
ஒவ்வொன்றிலும் 10 பாக்கள் கூட்டி
1330 குறட்பாக்களாகப் பெருக்கெடுத்து
உலகோர் மனதில் குடிகொண்டுள்ள
பெருந்தகை திருவள்ளுவர் பதம் நினைந்து
நாளும் திருக்குறள் படித்து
நலமாய் வாழ்வில் உயர்ந்திடு தம்பி…!!