சு.கோதண்டராமன்.

அச்வின்கள்

Ashvin-Twins

அச்வின்கள் எனப்படுவோர் இருவர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயரோ தனித் தன்மையோ கிடையாது. ஒரு பறவையின் இரு இறக்கைகள் போல இருப்பவர்கள் என்று சொல்லப்படும் அவர்கள், எப்பொழுதும் சேர்த்தே பேசப்படுகிறார்கள். இவர்கள் வேறு வேறு வகையில் பிறந்தவர்கள் என்கிறது ரிக் (5.73.4). பிறந்தது வேறு வேறு வகையானாலும் செயல் திறமையினால் ஒன்றானவர்கள் என அறியலாம்.

இவர்கள் யார்? நிருக்தக்காரர் கூறுவது போல  விண்ணும் மண்ணுமா, இரவும் பகலுமா, சூரிய சந்திரர்களா, இதிஹாஸக் காரர்கள் கூறுவது போல, இரண்டு நேர்மையான இளவரசர்களா, சாயணர் சொல்வது போல இந்திரன் அக்னியா – ரிக் மந்திரங்களிலிருந்து இதை அறிய முடியவில்லை.

இவர்களுக்கு நாஸத்யா என்ற பெயரும் உண்டு. இதற்கு ந அஸத்யா என்று பிரித்து பொய்யில்லாதவர்கள் என்று ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. நாஸத்ய என்பது நாஸிகா ப்ரபவ- (மூக்கில் தோன்றியவர்கள்), அதாவது மூச்சுக் காற்று என்ற கருத்தும் உண்டு (8.5.23க்கு சாயணர் உரை).

அஹர்விதா (பகலை அறிந்தவர்கள்) என்று போற்றப்படும் இவர்களுடைய தேரில் சூர்யா (சூரியனின் மகள்) விரும்பி ஏறுகிறாள் என்றும், இவர்கள் உஷஸுடனும் சூர்யனுடனும் சேர்ந்து வருபவர்கள் என்றும் கூறப்படுவதால் இவர்கள் ஒளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது அறியப்படுகிறது.  இவர்களது செயல் திறமைகளைப் பார்த்தால் இதிகாசக்காரர்கள் சொல்வது போல, பரோபகார சிந்தையுள்ள, திறமையுள்ள இரு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.

மற்ற தேவர்களைப் போல அச்வின்களும் நரா (மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அச்வின்களுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனிதருடன் பழமையான தோழமை கொண்டவர்கள் என்றும் மனிதருடன் பொதுவான மூதாதையர் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மனிதராக இருந்து  தங்கள் அருஞ் செயல்களால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (4.44.2).

அச்வின்களின் சாதனைகள் பல. அவர்களால் உதவப்பட்டோரின் பட்டியல் நீளமானது, இது ஆங்காங்குப் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேவருக்கும் உதவி பெற்றோர் பட்டியல் இவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படவில்லை.

Guru_Bhakat_Upamanyuமீட்பு – ரேபன் மற்றும் வந்தனன் ஆகியோரைக் கிணற்றிலிருந்து மீட்டனர். அத்ரி என்பவரைக் குகையிலிருந்து மீட்டனர், அவரது உடல் வெப்பத்தைக் குறைத்தனர். புஜ்யு என்பவரைக் கடலிலிருந்து மீட்டனர். விச்வகனுக்குக் காணாமல் போன மகன் விஷ்ணாபுவை மீட்டுக் கொடுத்தனர். வர்த்திக என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து மீட்டனர். ஜாஹுஷன் என்பவர் எதிரிகளிடம் சிக்கியபோது அவரைக் கடத்திக் கொண்டு வந்து மீட்டனர். ஆழத்தில் மூழ்க இருந்த அந்தகனைக் காப்பாற்றினர். த்ரிசோகன் என்பவரின் களவு போன மாடுகளை மீட்டுத் தந்தனர். குதிரையை இழந்த ப்ருதிக்கு அதை மீட்டுக் கொடுத்தனர்.

பொறியியல்– தாகத்தால் வருந்திய கோதமருக்குக் கிணறு ஒன்றைச் சீரமைத்துக் கொடுத்தனர். சரன் என்பவருடைய கிணற்றில் நீர் மட்டம் உயரச் செய்தனர்.  வணிகன் தீர்க்கச்ரவஸுக்கு இனிய நீர் கிடைக்கச் செய்தனர். வறண்ட ஆற்றில் மீண்டும் நீர் பெருகச் செய்தனர். சுசந்தி என்பவருக்கும் அத்ரிக்கும் வீடு அமைத்துக் கொடுத்தனர்.

மருத்துவம்– இவர்கள் சிறந்த மருத்துவர்கள். தண்ணீரிலும், செடிகளிலும், மரங்களிலும் உள்ள மருந்துகளை அறிந்து வைத்திருக்கிறார்கள், கர்ப்பத்தைத் தாங்குகிறார்கள் என்கிறது வேதம். கண்வருக்குக் கண் பார்வை தந்தனர். தந்தையால் கண் குருடாக்கப்பட்ட ரிஜ்ராச்வன் என்பவருக்குக் கண் பார்வை தந்தனர். ச்யாவன் என்பவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டார். இவர்கள் அவரை மீண்டும் நல்ல நிலைமைக்குக்  கொண்டு வந்தனர். கால் வெட்டுப்பட்ட விச்பலா என்ற பெண்ணுக்கு இரும்புக்கால் அமைத்துக் கொடுத்தனர்,  காலில்லாத பராவ்ரஜனை நடக்க வைத்தனர். ச்யவனரின் பழைய தோலைக் கவசம் போல் கழற்றிவிட்டுப் புதிய தோல் வளரச்செய்து, மீண்டும் இளமையாக்கினர். ருதுஸ்துபருக்கு சத்துணவு தந்தனர். மிகுதியாகக் குடித்த வம்ரனை அவனது நோயிலிருந்து மீட்டனர். தத்யங் என்பவருக்குக் குதிரைத் தலை அமைத்துக் கொடுத்து அவரிடமிருந்து த்வஷ்டாவின் வித்தையைக் கற்றனர்.

வத்ரிமதியின் கணவனுக்கு வைத்தியம் செய்து பிள்ளை பாக்கியம் ஏற்படுத்திக் கொடுத்தனர், ச்யாவன் என்பவருக்கு நோயை நீக்கி மனைவி கிடைக்கச் செய்தனர். கோஷா என்பவள் வயதாகியும், நோயின் காரணமாகத் திருமணம் ஆகாமல் தந்தை வீட்டில் இருந்த போது அவளது நோயை நீக்கி திருமணம் நடக்கச் செய்தனர். மனைவியை அடைந்த கலி என்பவர் இளமையாக்கப்பட்டு ஆயுள் நீட்டிக்கப்பட்டார்.

அச்வின்களின் மருத்துவம் மனிதர்க்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் பயன்பட்டது. ஷயு என்பவரின் மரத்துப் போன பசு மீண்டும் பால் கொடுக்க வைத்தனர். தேனீக்கள் இனிய தேன் தரச் செய்தனர்,  இவை இவர்களது மருத்துவ சாதனைகள்.

பிற உதவிகள்– விமதன் என்பவர் புருமித்ரனின் மகளை மணந்து கொள்ள உதவினர். பேது என்பவருக்கு வெள்ளைக் குதிரை ஒன்றைத் தந்து அவர் வெற்றி பெற உதவினர். கக்ஷிவான் என்பவருக்காகத் தங்களது குதிரைக் குளம்பிலிருந்து 100 ஜாடி மது பெருகச் செய்தனர். வசன் என்பவர் தினமும் நிறைய செல்வம் பெற வழி செய்தனர். ஸுதாஸன், திவோதாஸன் என்போருக்கு செல்வ உதவி செய்தனர்.

போர்– சர்யாதன், புருகுத்ஸர், க்ருசானு, பத்தர்வா ஆகியோருக்குப் போர்க்களத்தில் வெற்றி பெற உதவினர்.

அத்ரிகு, பக்தன், பப்ரு, உபஸ்துத, கர்க்கந்து, குத்ஸர், ச்ருதர்யன், மேதாதிதி, வசன், தசவ்ரஜன், சிஞ்ஜாரன்,   துர்வீதி, தபீதி, த்வஸந்தி,  ப்ரியமேத, பரத்வாஜன், ப்ருச்னிகு, மந்தாதா, வய்யன், ச்யூமரச்மி என்போரும் இவர்களிடமிருந்து உதவி பெற்றவர்களில் அடங்குவர். இவை எத்தகைய உதவிகள் என்பது குறிப்பிடப்படவில்லை.

குதிரை இல்லாத தேர் ஓட்டினர். சூரியனை வலம்வந்தனர். பஞ்சம், நோய் இவற்றை நீக்கினர். மனுவுக்கு உணவு தந்தனர் (விவசாய முறையைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறார் சாயணர்). கிணறு தோண்டினர், மகிழ்ச்சி தருபவர் என்ற பொருளில் மயோபூ, சம்பு என அழைக்கப்படுகிறார்கள். மாத்வீ (இனிமையானவர்கள்), புரணா (போஷிப்பவர்கள்), ஸுப்ரணீதி (நல்ல வழி காட்டுபவர்கள்) என்ற சிறப்புகளும் இவர்களுக்கு உண்டு.

பிரார்த்தனை செய்தால் இவர்கள் உதவிக்கு வருவார்கள். மனோ வேகத்தில் வருகிறார்கள் (மனோஜுவா). வேதம் இவர்களை விட இவர்களது ரதத்தைத்தான் வெகுவாகப் புகழ்கிறது. அது க்ருதவர்த்தனி (நீர் வழியிலும் போகக்கூடியது), ஹிரண்யவர்த்தனீ (ஒளியுள்ள பாதையை உடையது), மூன்று தூண், மூன்று சக்கரம் கொண்டது, முக்கோண வடிவம் உடையது. எளிதில் இயங்குவது. மனத்தினால் பூட்டப்படும் குதிரைகளைக் கொண்டது (மனோயுஜாச்வாஸா). இது ரிபுக்களால் உருவாக்கப்பட்டது.

மழையும் வலிமையும் ஒளியும் இவர்களது செல்வமாகக் கூறப்படுகிறது. அதை ஒட்டி இவர்களுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள்- வ்ருஷண்வஸு, வாஜினீவஸு, ஸூர்யாவஸு.

மற்ற தேவர்களுடன் இவர்களது உறவு சிறப்பாகப் போற்றப்படுகிறது. இந்திரனோடு சவாரி செய்பவர்கள், வாயுவுடன் வாசம் செய்பவர்கள், ரிபுக்களுடனும் ஆதித்யர்களுடனும் மகிழ்பவர்கள், விஷ்ணுவுடன் பயணம் செய்பவர் என்று கூறப்படுகிறது. உஷாவுக்கு முன் வருபவர்கள் என்றும் சூரியனைத் தன் தேரில் சுமந்து வருபவர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.

தேவர்கள் தனி்த்தனியாகப் போற்றப்பட்டாலும் ரிஷிகளின் ஒரு மன நிலையில் இந்த வேறுபாடு மறைந்து போகிறது. அதன்படி அச்வின்களும் மருத்துகளைப் போல ருத்ரனின் மக்களாகக் கூறப்படுகிறார்கள்.

மற்ற தேவர்களைப் போல இவர்களும் ருதத்தை அனுசரிப்பவர்கள், ருதத்தைக் காப்பவர்கள். உஷஸைப் போல, இந்திரனைப் போல அச்வினின் குதிரைகளும் ருதத்தால் பூட்டப்பட்டவை. இவர்களும் வ்ருத்ரஹந்தமா (விருத்திரனைக் கொல்வதில் சிற்தவர்கள்).

எல்லா வேள்விகளிலும் அச்வின்களுக்குச் சிறப்பிடம் உண்டு. இவர்கள் காலையில் பிழிந்து எடுக்கப்படும் ஸோம பானத்திற்கு உரியவர்களாகக் கூறப்-படுகிறார்கள். வேறு எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4)  என்பது மற்ற தேவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு. அச்வின்கள் தாஸர்களின் உணவை அனுபவிக்கிறார்கள் (8.5.31) என்பதால் இவர்கள் எல்லோருக்கும் இனியவர்கள் என்பது தெரிகிறது.

படம் உதவி: http://totreat.blogspot.com/2012/10/ashvins-ayurveda-flying-doctor-family.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 23

  1. I can understand the credibility of Vedas and wonder all scientific achievements.  of these days HV taken place already that too million years ago.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.