நவராத்திரி
ரா.பார்த்தசாரதி
நங்கையருக்காகக் கொண்டாடும் ஒன்பதுநாள் ராத்திரி
பெண்களை மதித்துக் கொண்டாடும் ராத்திரி,
சிறு பெண்களையும், மற்ற பெண்களையும் போற்றும் ராத்திரி,
பொம்மைகளை வைத்துக் கொண்டாடும் ராத்திரி!
முதல் நாள் நவராத்திரி பூசை சிறுமியர்களுக்கே உரியதாம்,
சுவாசினி எனும் மூத்த சுமங்கலிக்கும் உரியதாம்
கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றின் தலைவிகளாம்
கலைமகள், அலைமகள், மலைமகள் எனும் தெய்வங்களாம்!
பெண்ணே உலகில் சக்தியின் வடிவமாகும்
நாட்டையும், வீட்டையும், காக்கும் தெய்வமாகும்
சக்திக்கு இடப்பக்கம் அளித்தவர் அர்த்தனாரீஸ்வரராகும்
பெண் தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடுவதே நவராத்திரியாகும்!
நவராத்திரி என்றாலே எல்லாப் பெண்டிருக்கும் ஓர் சுப ராத்திரி
அலங்காரங்களும், பாட்டும், கேளிக்கையும் நிறைந்த ராத்திரி
தொன்றுதொட்டுப் பெண்களுக்காகவே நடத்தப்படும் விழா
பெண்மைக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்கட்டுமே இந்நவராத்திரி விழா!