தேடல்
-மணிமுத்து
மாலை வேளையில்
மனமோ எதிலும் ஒன்றாமல் போக,
நொடிகளை நெட்டித்தள்ள
புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன்… 
எழுத்துக்களின் சுவாரசியத்தில்
என்னை மறந்து
பக்கங்களைத் திருப்பினேன்
ஒன்றன்பின் ஒன்றாக!
நானும் அதில் ஒன்றிப்போனேன்
ஒரு பக்கமாக!
பக்கங்கள் பாதி திரும்பிய நிலையில்,
மீதி பக்கத்திற்கான தெரியாத முடிவுகளும்,
அடுத்த பக்கத்திற்கான தேடல்களும் ஒருபுறம் இருக்க –
கடிகாரம் மணி பன்னிரெண்டைக் காட்டியது!
வலுக்கட்டாயமாக இரவு உறக்கத்திற்குச் செல்லத் திரும்பினேன்…
பாதி படித்த நிலையில்
திறந்த பக்கங்கள் அப்படியே இருக்க!
சிறிது தூரம் சென்றபின் – திரும்பியபோது,
மின்விசிறியின் காற்றில்
படிக்காத பக்கங்கள் மட்டும் வேகமாகத் திரும்பியது
“என்னை ஒதுக்கிவிட்டுச் செல்லாதே என்று கூச்சலிடுவதைப் போல!”
மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன் விட்ட இடத்திலிருந்து
தூக்கம் எங்கோ தொலைந்துபோக!
இப்படித்தான்!
ஒவ்வொருவரின் வாழ்க்கையும்
ஒவ்வொரு கதையாய்!
புரட்டப் புரட்ட எல்லாப் பக்கங்களும்
சுவாரசியமானவைகளாய்!
ஒவ்வொரு பக்கமும் தேடல்கள் நிரம்பியதாய்
கதைக்குத் தகுந்தாற் போல!
எல்லாத் தேடல்களுக்கும் பதில் அடுத்த பக்கத்தில்!
பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் புரட்டுபவனுக்கோ
ஒவ்வொரு நாளும் சுவாரசியமான தேடல்களாய்,
நேற்றைய தேடலின் பதிலாய் அமைந்துவிடுகிறது!
தேடல் இல்லாதவனோ
விடை தெரியாத கேள்வியாகவே மடிந்துவிடுகிறான்!
