சிலவரிக் கவிதைகள்!
-பத்மநாபபுரம் அரவிந்தன்
பறவைகளின் உடல்
மறைக்கும் உடைத்
தூவல்கள்…
எப்பொழுது வரவேண்டுமென்று
மயிலிடம் கேட்கிறது
மழைக்குமுன் சிறு தூவல்…
சேவலே கூவிவிடாதே
இன்னமும் நேரமிருக்கிறதென்கிறது
விடியலுக்கு முன்பான இருட்டு…
உனக்காகத்தானே
இத்தனை நாட்கள்
காத்துக் கிடந்தேனென்று
ஓடி வந்துக் கலக்கிறது
குட்டையில் மழைநீர்…
பொறுத்திரு சிலநாட்கள்
முழுமையாய் வருகிறேன்
மேகத்திடம் சொல்கிறது
வளர் பிறை…
தலை சுற்றச் சுற்ற
காற்றள்ளி வீசுகிறது
மின் விசிறி…
தொலைதூரம் ஓடிவந்து
படுக்கையில் கிடக்கிறது
கனவு…
உதடும் கோப்பையும்
உரசிக்கொள்ளக்
கள்வெறி கொள்கிறது
மது…