உடலியல் உளவியல் அராஜக அரசியல்
— எஸ். வி. வேணுகோபாலன்.
யோகாவை முன்னெடுக்கும்
உடலியல் உளவியல் அராஜக அரசியல்
உடலினை உறுதி செய் என்றார் மகாகவி பாரதி. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற சித்த மரபில் அவரது புதிய ஆத்திச்சூடியில் வந்து விழுந்த வாக்கு அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது காது அறுந்து விழும் வண்ணம் பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றது. நாம் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துக் கொண்டிருப்பது. உடற்பயிற்சி என்பது தொடக்கநிலை பள்ளிக்கூடங்களிலிருந்தே சொல்லித் தரப்படும் ஒரு முக்கியமான வளர்ச்சி சூத்திரம்.
எல்லாவற்றையும் விற்பனைப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் நவீன தாராளமய பொருளாதாரத்தின் காலத்தில், குழந்தைகளே, நமது அடுத்த பாடம், யோகா என்று கரும்பலகையில் எழுதிப் போடுகிறார் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. உடனே அமைச்சரவை, அதிகார வர்க்கம், தொடர்புள்ள மற்றும் தொடர்பே இல்லாத துறைகள், ஊடக அலைவரிசைகள், வரிசையில் நிற்கும் ஊதுகுழல்கள் எல்லாம் மைதானத்திற்கு விரட்டுகின்றனர் மக்களை.
தலைநகரில் நீண்டகாலம் தடை செய்து வைத்திருந்த ராஜ்பாத் எனப்படும் ராஜபாட்டையில் ஜூன் 21 அன்று காட்சிப்படுத்தப் படுகிறது யோகா பயிற்சி. ‘நமது பாரம்பரியக் கலை, நமது ஆன்மிக மரபு, நமது புனித பயிற்சி, இதோ, சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது’ என்ற உற்சாகக் கூச்சல்களோடு திரை விழுகிறது. எல்லாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம் என்று வழக்கம்போல் மீள்கிறது எதையோ தேடிப்போன சமூகம்.
யோகாவுக்கு இப்போது என்ன வேலை என்று ஒருவர் கேட்டல், ஏன், யோகா செய்தால் உடம்புக்கு லாபம்தானே எதற்கு விதண்டாவாதம் என்கிறது வேறொரு குரல். யோகாவை மதக் கண்ணோட்டத்தில் நாங்கள் அறிமுகப் படுத்துவோம், மதக் கண்ணோட்டம் இன்றிப் பார்க்க உங்களுக்கு அறிவில்லையா என்றும் கேட்கப்படுகிறது.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல என்பதை, யோகா நிபுணர்களே உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யோகாவின் அடிப்படைக் கூறுகளாகப் பேசப்படும் எட்டு அம்சங்களில் ஒன்றுதான் உடற்பயிற்சி. அதையும் இப்படி ஊரைக் கூட்டிவைத்துக் கொண்டு மேடையில் இருந்து கற்பித்துப் பயிற்சி கொடுப்பது அதன் இயங்கியல் விதிக்கே புறம்பானது என்ற அவர்களது கூற்றும், ஜூன் 21 எழுப்பப்பட்ட கூச்சலில் அமுங்கிப் போனது.
நாம், யோகாவைப் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. அதை நிபுணர்கள் பார்த்துக் கொள்ளட்டும். யோகா கலையைக் குறித்தோ, உடற்பயிற்சி குறித்தோ பொதுவாக யாரும் மாறுபட்டுப் பேசப் போவதுமில்லை. சங் பரிவாரத்தின் நோக்கமும் யோகா இல்லை. இன்று காவிக் கூடாரம் கையில் எடுத்திருக்கும் உடலியல் உளவியல் அரசியல் விஷயங்களைத் தான் நாம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.
அதற்குமுன் வரலாற்றின் இரண்டு முக்கிய செய்திகளைப் பார்ப்போம். ஒன்று சர்வாதிகாரி இட்லர் தொடர்பானது. இரண்டாவது, முசோலினி குறித்தது. அழித்தொழிப்பு கொள்கையையும், கோட்பாட்டையும் தனது அடிப்படை இயக்குவிசையாகக் கொண்டிருப்பது ஆர் எஸ் எஸ். இந்த அமைப்பை நிறுவியவர்கள், வளர்த்தெடுத்தவர்கள் ஆகியோர், வரலாற்றில் படு பயங்கரங்களை நிகழ்த்தியவர்களாக பேசப்படும் இந்த இரண்டு பேரின் தத்துவங்களால், நடைமுறை அரசியலால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை பல அறிஞர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளனர்.
ஜெர்மனியில் நாசிசத்தைப் பரப்பிய இட்லர், சாதாரண மக்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கக் கையாண்ட அம்சம், உடற்பயிற்சி. உடற்பயிற்சியின் வேகக் கற்பித்தலின் ஒரு கட்டத்தில், இளைஞர்களிடையே இனவாத நஞ்சைக் கலந்து ஊட்டினான் இட்லர். இனவெறிக்கு அவர்களைத் தூண்டினான். யூதர்களுக்கு எதிராக இரத்த அணுக்களே கொதித்தெழும் வண்ணம் ஜெர்மானிய இளைஞர்களைத் திரட்டியது நாஜிக் கொள்கை. இட்லரின் சின்னம் தங்களது ஸ்வஸ்திகா சின்னத்தை ஒட்டியது என்று பேசிக் கொள்ளும் சங் பரிவாரம், இட்லர் வைத்த வணக்கம் போன்றே தங்களது வணக்கம் வைக்கும் முறையையும் வைத்திருக்கிறது. ஆரிய இரத்தம், ஆரிய இனம் இவையே தூய்மையானது என்று இவற்றின் பெருமையைத் தாங்களும் கொண்டாடிக் கொள்ளும் வழக்கத்தை ஆர் எஸ் எஸ் கைக்கொள்கிறது.
இத்தாலியின் ஃபாசிசக் கொள்கையாளன் முசோலினியும் உடற்பயிற்சியைத் தான் முன்னெடுத்தான். ஆர் எஸ் எஸ் இயக்கத்தை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவாருடைய நெருங்கிய நண்பர் பி எஸ் மூஞ்சே, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார். மார்ச் 19, 1931 அன்று நேரடியாக முசோலினியை சந்தித்து உரையாடியதைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். தங்களது தேசத்தில் இப்படியான ஒரு இராணுவப் பயிற்சி முறையைத் தங்களது தொண்டர்களுக்குத் தர இருப்பதாக அவரிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். மூஞ்சே என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் ஏ ஜி நூரானி.
உடற்பயிற்சி என்பது இங்கே உடலைப் பேணிக் காத்தல் என்பதைக் கடந்து ஓர் அணிதிரட்டலைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எந்த மாதிரியான நோக்கத்தைக் கொண்டது இந்த அணிதிரட்டல் என்பதைத் தனியே விளக்க வேண்டியதில்லை.
உடற்பயிற்சியை ஏற்கெனவே தங்களது ஷாகா (ஷாகா என்றால் கிளை) நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும் ஆர் எஸ் எஸ், இப்போது யோகா என்ற பெயரில் ஒரு சமூக அங்கீகாரத்தோடு இந்த அணி திரட்டலுக்கான ஒத்திகை பார்க்கிறது. ஆன்மீக அடிப்படையைச் சொல்லி அதை அரங்கேற்றும் இந்த வேலையில், இந்து மதத்தைச் சாராதவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை. வராது போனால், இன்னும் வசதி அவர்களுக்கு.
மதரீதியான ஒரு படையைத் திரட்டும் தங்களது உள்நோக்கத்திற்கு உகந்த முறையிலான ஒரு பயிற்சியை, மிக சாதுரியமான முறையில் சர்வதேச தினம் என்கிற கூச்சலை எழுப்பி நாடு முழுவதும் ஒரே நாளில் மக்களை இதில் ஈடுபடுத்தும் நோக்கத்தை பா ஜ க அனாயாசமான முறையில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
அடுத்து கவனிக்க வேண்டியது, வாழும் கலை, யோகா பயிற்சி என்று மிகப் பெரிய வர்த்தக உலகைக் கட்டியாளும் நபர்கள் திடீரென்று பன்மடங்கு உற்சாகத்தோடு சர்வதேச யோகா தினத்தையொட்டி தங்களது கடைகளை விரிக்கத் தொடங்கியதைப் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு யோகா தெரியுமா தெரியாதா என்ற சாதாரண கேள்விக்குப் பின்னால், கணக்கிட முடியாத அளவு காசுக்கான அடிக்கோல் இடப்படுகிறது. விலை போட்டு அறியாத படி கார்பொரேட் சாமியார்கள் தங்களது பரவசமிக்க யோகா முகாம்களை இதோ கடை விரிக்கத் தொடங்கிவிட்டனர்.
சர்வதேசக் கிளைகளை அவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பயிற்சிகளின் உடலியல், உளவியல் நோக்கம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். எதையும் கேள்விக்கு உட்படுத்தாதே, உன் வாழ்க்கையின் பிரச்சனைகள் உன்னிலிருந்து புறப்படுபவை, உன்னைத் திருத்திக் கொள், உனது எண்ணங்களே எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் என்று மெல்ல மெல்ல போதனைகளை பயிற்சிக்கு வருவோர் ஏற்கும் வண்ணம் மிக நுட்பமாக இந்த வேலைகள் கட்டமைக்கப்படுகின்றன.
நவீன தாராளமயம், மனிதர்களை ஒற்றை ஒற்றை ஆட்களாகப் பிரிக்கிறது என்கின்றனர் சமூக விஞ்ஞானிகள். இது குறித்து பொருளாதார மேதை பிரபாத் பட்நாயக் விரிவாக எடுத்துச் சொல்வதுண்டு. உலகமயத்தின் தீங்குகளுக்கு எதிராகத் திரண்டெழ வேண்டிய மனிதத் திரளை இப்படி மழுங்கடித்துத் தங்கள் விதியென்று எல்லாக் கொடுமைகளையும் தின்று செரிக்கப் பழக்கும் மோசடி ஏற்பாடுதான் இந்த ஜகஜ்ஜால கில்லாடி காவியுடை சாமியார்களது பயிற்சி மையங்கள்.
ஜூன் 21 கொண்டாட்டம், இத்தகைய தகிடுதத்த ஆசாமிகளுக்கு ஒரு சமூக மதிப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் சங் பரிவாரம் சர்வதேச தினமாக யோகா தினத்தை ஐ நா அவையில் தீர்மானம் நிறைவேற்ற வழிவகை செய்தார் என்று நரேந்திர மோடியைக் கொண்டாடுவதன்பின் இத்தனை அராஜக சிந்தனை இயங்குகிறது.
மூன்றாவது அம்சம் இன்னும் ஆபத்தானது. அதை, நரேந்திர மோடி அரசு மிகத் திறமையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதுதான் திசை திருப்புதல்.
ஒரு பக்கம் மோடியின் ஓராண்டு ஆட்சியை எடை போட்டு எழுதிக் கொண்டிருந்த ஊடகங்கள், கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்குக் கை கழுவப்பட்டன என்பதைப் பேசிக் கொண்டிருந்த பத்திரிகைகள் அந்த அலசலை அப்படியே ஓர் ஓரத்தில் எடுத்துப் போட்டுவிட்டு, ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டன. நீ யோகாவை ஆதரிக்கிறாயா, எதிர்க்கிறாயா இதுதான் இப்போதைய விவாதப் பொருள். யோகா ஆன்மிக விஷயமா, உடற்பயிற்சி விஷயமா இதுதான் இப்போதைய விவாதக் களம். யோகாவை மத ரீதியாகப் பார்ப்பது யார் – இந்துக்களா, இஸ்லாமியரா, கிறித்துவரா என்பதுதான் இப்போதைய ஊடக அலசல்.
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை, பொதுத் துறையைச் சீர்குலைக்கும் சீர்திருத்தங்களை, இயற்கை வளங்களை பன்னாட்டு மூலதனத்தின் வேட்டைக்குத் திறந்து கொடுக்கும் சட்ட திருத்தங்களை, தொழிலாளர் நலனை ஒட்டுமொத்தமாகக் காவு கொடுக்கத் துடிக்கும் திருவிளையாடல்களை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காட்டிலும் வேகமாக நிறைவேற்றி வருகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. தன்னை விட சிறந்த விற்பனை பிரதிநிதி நரேந்திர மோடி என்று மன்மோகன் சிங் மனதார வாழ்த்தி சான்றிதழ் வழங்கி இருப்பதைக் காட்டிலும் வேறென்ன ஆதாரம் வேண்டும்!
பகவத் கீதை தேச நூலாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்கிறார் அமைச்சர் ஒருவர். இந்துத் தாய்மார்கள் பத்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான் துறவி என்று சொல்லிக் கொள்பவன் ஒருவன். இந்த அராஜகத்தைக் கண்டிப்பதற்குப் பதில் அதன் மீது விவாத மேடை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். மாட்டுக் கறியைத் தடை செய்துவிட்டால், ஒரு மாதத்திற்கு அது சரியா, தவறா என்ற விவாதத்தைத் தேசம் முழுக்க நடத்தவிட்டுத் தடையை ஓசைப்படாமல் அமலாக்கிக் கொண்டிருக்கிறது மராட்டிய மாநில பா ஜ க – சிவசேனா அரசு. உயிர்க்காட்சி சாலையில் சிங்கங்களும், புலிகளும் கோழிக் கறியைக் கொத்தி உயிர் தரிக்க விடப்பட்டதை அதிகம் கண்டு கொள்ளவில்லை ஊடகங்கள். சாதாரண மக்களுக்கு மலிவான உணவு மாட்டுக்கறி என்பதை மத வெறியர்கள் வீதியில் பேசும் பொருள் ஆக்கிவிட்டுத் தங்கள் வேலைக்குப் போய்விட்டனர்.
இப்போதைய மிகப் பெரிய திசை திருப்பலாக யோகா எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு. அடுத்த மாதம் யோகாவை யாரும் கண்டு கொள்ளாமலும் போகலாம். அப்போது விவாதப் பொருளாக, வேறொரு விஷயத்தைத் தூக்கி எறிவார்கள் ஆட்சியில் இருப்பவர்கள். வெறும் திசை திருப்பல் மட்டுமல்ல, தொடர்புள்ள விஷயங்களைத் தமது நிகழ்ச்சி நிரல்படி நடைமுறைப் படுத்திக் கொண்டே செல்பவர்கள், இணை கோட்டில் இந்த விவாதங்களை யாரோ நடத்திக் கொண்டிருப்பதை ஓர் எள்ளல் புன்னகையோடு பார்த்தபடி தங்களது அடுத்தடுத்த அராஜக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
வயிற்றுக்குச் சோறிட வேணும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றான் மகாகவி. வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட அல்லது பறிகொடுத்த மக்கள் கோடிக்கணக்கில் உள்ள தேசத்தில், உடற்பயிற்சிக்கான தெம்பு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? அன்றாடப் பாட்டுக்கு அதிகாலையில் எழுந்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் சோர்ந்து திரும்பும் மாலைப் பொழுதின் இடையே எந்த நல்ல வேளையில் அவர்களது யோகப் பயிற்சி நடைபெறும்?
பசியோடிருக்கிறாயா, வேலை கிடைக்கவில்லையா, பிணி போட்டு வருத்துகிறதா, எல்லாவற்றுக்கும் யோகாவில் நிவாரணம் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வதைவிடவும் வன்முறை வேறு என்ன இருக்க முடியும்?
மனித வளர்ச்சிக் குறியீட்டில 187 நாடுகள் வரிசையில் 135வது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. பட்டினிக் குறியீட்டில் 76 நாடுகள் வரிசையில் இந்தியா 55வது இடத்தில் இருக்கிறது. வயிற்றுப் போக்கினால் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. 1000 குழந்தைகளுக்கு 388 குழந்தைகள் என்பது அந்த விகிதம். பிறந்த முதல் நாளே இறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம். அந்த எண்ணிக்கை மூன்று லட்சம்! தப்பி வாழ்கின்ற குழந்தைகளில் சரிபாதி எண்ணிக்கை ஊட்டச் சத்தற்றவர்கள்.
இதுதான் சுதந்திர இந்தியாவின் ராஜபாட்டை. இந்த ராஜபாட்டையில் நின்றுகொண்டு இந்த அவமானகரமான புள்ளிவிவரங்களைப் புரட்டிப் போடும்வண்ணம் மக்களுக்கான கொள்கைகளை வடிவமைக்க வேண்டியவர்கள், உணவு, உறைவிடம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் உறுதி செய்ய வேண்டியவர்கள் யோகா தினத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தியாவை உலக நாடுகள்முன் பெருமைக்குரியதாக ஆக்குவதாகக் கதை விடுவது, கதியற்ற குடிமக்களை இழிவு செய்வதன்றி வேறொன்றுமில்லை.
யோகா உடற்பயிற்சியில் ஒரு தவறுமில்லை. அதற்கான வலு உள்ளவர்கள் அதைச் செய்வதும், மேலும் வலுப் பெறுவதும் மறுக்கத் தக்க .விஷயமே இல்லை. ஆனால், யோகாவைத் தங்களது உடலியல் உளவியல் ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்துவோரை மன்னிப்பதற்கில்லை. அதன் ஆபத்தான உள்ளடக்கத்தை, அபாயகரமான வரலாற்று சாட்சியங்களை, அராஜகமான கட்டமைப்பை அம்பலப்படுத்தாமல் – எதிர்த்துக் குரல் கொடுக்காமல் கடந்து போவது நல்லதற்கில்லை.
நன்றி: செம்மலர்:ஜூலை 2015
யோகா விஷயத்தைத் தவிர்த்து, கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. எதையுமே அரசியலாக்காமல் நேர்மையாக மக்களுக்குத் தொண்டாற்றும் தேசிய வாதிகள் இன்று அபூர்வமாகிப் போனார்கள். இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நூறு சதவிகிதம் சம்பள உயர்வு அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய், அது தவிர மற்ற சௌகர்யங்கள். இது உடனேயே பாராளுமன்றத்தில் நிறைவேறவும் செய்யும். இன்றைய நாளில் பா.ஜா.க, காங்கிரஸ், திராவிடக் கட்சிகள், (கம்யூனிஸ்ட் இயக்கங்களில் கூட ) ,மாநிலக் காட்சிகளில் எல்லாமே சுயநலவாதிகள்தான் அதிகரித்து விட்டனர். திரு. நல்லகண்ணுவைப் போன்ற எளிமையானவர்களும், நேர்மையானவர்களும் அருகிப் போய்விட்டனர். காமராஜர் இருந்த பொழுது தூற்றித்தீர்த்த தி.மு.க. தலைவர் , அவர் இறந்த பின்பு இன்றுவரை ஏதோ தான் ஒருவர் தான் காமராஜருடன் நல்லுறவு வைத்தவர்போலும் பேசியும் எழுதியும் வருவதைக் கண்டிக்கும் மனோதைரியம் கூட இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை. இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் யாருமே “காமராஜர்” தொண்டர்களும் இல்லை. தேசிய வாதிகளும் இல்லை.தமிழகத்தை சுரண்டிய, சுரண்டிக் கொண்டிருக்கிற திராவிடக் கட்சிகளையும், குடிகாரக் கூட்டத்தினரையும் , ஒழுக்கக் குறைவானவர்களையுமே இன்று “தலைவர்” என்று கூறும் இழிநிலை உருவாகிவிட்டது.
இருந்தாலும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் தன்னலம் இல்லாத, விளம்பரம் தேடாத, தேசபக்தி உள்ள இளைஞர்களிடம் இருந்து எளிமையான, நேர்மையான தலைவர்கள் வருவார்கள். ஆன்மிகத்தோடு அனைத்து மக்களின் நன்மையை முன்னிலைப் படுத்தி “இந்தியா” உலக அரங்கில் முதன்மை பெரும்….
அன்பன்,
மீ.விசுவநாதன்
கட்டுரையாளர் தன்னை எளிமையான வாசகர், உணர்ச்சி ஜீவி என்ற சுயவிவரணை சரியாகத்தான் உள்ளது.எளிமையான என்பதை ஆங்கிலத்தில் simpleton எனவும் படிக்கலாம். தனக்கு பிடிக்கதவர்களை உடனே ஹிட்லர், நாஜிக்களுடன் உடன்படுத்தி பேசுவது, மற்றவர்களை உணர்ச்சி வயப்படுத்தி அதன் மூலம் ஒரு பிரச்சாரத்தை உண்டுபடுத்துவதே ஆகும். அல்லது ஆசிரியர் அந்தவித மூன்றாம்தர பிரச்சாரங்களுக்கு அடிமையாகி விட்டார்.
வ.கொ.விஜயராகவன் சர்வதேச யோக தினத்தை சற்று நிதானமாக பார்ப்போம். இந்திய அரசு (முதல் முறையாக) பெருமையுடன் யோகம் உலகிற்க்கு, உலகநலத்திற்க்கு இந்தியாவின் நல்ல பங்களிப்பு, அதை உலகளவில் கொண்டாட ஒரரு தினம் அனுஷ்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. ஏற்றுக் கொண்டது. அதனால் உலகெங்கிலும் யோக ஆர்வலர்களல் பல நகரெங்களில் கூட்ட யோகம் செய்யப்பட்டது. அதன் காரணகர்த்தாவான இந்திய அரசு அதை கொண்டாடுவதில் என்ன தவறை கண்டார் வேணுகோபாலன்.
யோகம் உலகிற்க்கு புதிதல்ல; கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவிக்கு வெளியில் லக்ஷக்கணகான பேர்கள் அதை அப்பியாசம் செய்து நல்ல பயன் அடைந்துள்ளனர். தற்போது மேற்கத்திய உலகில் உள்ள ஒவ்வொரு உடல்பயிற்ச்சி அரங்கமும் (ஜிம்) யோகாவை கற்றுத்தருகிரது. தற்போது உலகில் பரவி வரும் வன்முறை, போர்கள், தீவிரவாதம் இவற்றை யோக வழியினால் குறைக்கலாம் என பலர் ந்ம்புகின்றனர். யோகம் உடல், மன ஆரோக்யத்திற்க்கு உறுதுணை என உலகம் முழுவதும் பரவலாக நம்பப் படுகிறது .
முதல் முறையாக இந்திய அரசு இந்திய மரபின் ஒரு அம்சத்தை தான் மட்டுமின்றி, உலகளவில் கொண்டாட ஏதுவானது பலருக்கு பிடிக்காமல் போகலாம்; முக்கியமாக ஈ.வெ.ராமசாமியை பெரியார் என அழைப்பவர்கள் இந்தியன், ஹிந்து என்றால் தலை குனிந்து வெட்கம அடைய வேண்டும், இந்திய மரபுகள் காட்டுமிராண்டித்தம் என ஈ.வெ.ரா. பார்வையை கொண்டாடுபவர்களில் ஒருவராக வேணுகோபாலன் தெரிகிறார்
MV Diabetic Hospital மருத்துவ அதிகாரி அறிவியல் பூர்வமாக 200 பேரை பரிசோதனை செய்து யோகா செய்வதனால் டயாபடீஸ் குறையும் என்று அறிவித்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்த நண்பர் இரு வாரங்களாக காலை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு கிளம்பி 6 மணியில் இருந்து 2 மணி நேரம் யோகா பயிற்சி 15 பேருக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
என்னுடைய நெருங்கிய நண்பர், diabetes patient இருவாரமாக கற்றுக் கொள்கிறார்.
என் கண் எதிரில் 32 பேருக்கு சர்க்கரை எவ்வளவு அளவு என்று எடுத்து, அதை மாதாமாதம் நேஷனல் லெவலில் டேட்டா பேஸ் இல் போட்டு வைத்ததுக்கு இருக்கிறார்கள்.
இங்கே ஒருவர் மாட்டுக் கறிக்காக ஏங்கி யோகாவைத் திட்டுகிறார்…
இங்குநன்றாகத்தான் சொன்னார் நண்பர் வேணுகோபாலன். யோகா என்பது தெய்வீக அம்சம்.அதில் அரசியல் கலந்தால் படு நாசம். காமராமுன் ஒருநாள் யோகா செய்தால் போதுமா? உடல் உறுதியும் மனோ பலமும் கூடிவிடுமா? சிந்தியுங்கள். யான் இந்த அலை வரிசையில் உண்மையாக தேகமும் யோகமும் என்ற தலைப்பில் 11 பகுதிகள் கருத்தோடு, சுவாரஸ்யமாக எழுதினேன். ஒரு வாசகரும் படிக்கவில்லை. பின்னூட்டம் எழுதவில்லை. உடனே நிறுத்திவிட்டேன். காரணம்
யான் குறிப்பிட்ட தலைவர் மாதிரி தேசியக்கொடி நிறத்தில் துண்டு போட்டுக்கொண்டு சொல்லித்தரவில்லை. சரியா? என்னடா உலகம் இது, என நொந்துபோய்..
கவியோகி வேதம்