பவள சங்கரி
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!!
ஒரு காலத்தில், இந்தியா உள்பட தெற்காசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளை பிரிட்டன் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இன்று நிலைமையைப் பாருங்களேன்…. இதைச் சாத்தியமாக்கிய அத்துனை இந்தியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்!
இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனைத் துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனில் ஆடம்பர பங்களா வாங்குவதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது’ என, உலகின் முன்னணி வீடு மனை வர்த்தக நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசல்லா நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 7.3 சதவீதமாக உள்ளது. இதனால், புதிய பணக்காரர்கள் உருவாகி வருகின்றனர். உலகின் பெரும் கோடீசுவரர்கள் பட்டியலில் இந்தியாவின், இலண்டன்வாழ் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனை (ரியல் எஸ்டேட்) துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனின் லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடம்பர பங்களாக்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன்படி சராசரியாக, அடுத்த 10 ஆண்டுகளில் இதற்காக இந்தியர்கள் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட உள்ளது.
உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள்குறித்த விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது இடத்தில் இருந்த உருசியாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி உள்ளது. உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கோடீசுவரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக முதல் 3வது இடத்திற்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
“நம் நாட்டு அரசியலில் தற்போது பிரிட்டிஷ் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேலும் அதிக அளவில் நாடாளுமன்ற மேலவை, கீழவை ஆகியவற்றிலும் அரசிலும் இடம்பெறுவதைக் காண விரும்புகிறேன். பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்வோம். இது வலுவான உறவாகும். நமது பொருளாதார உறவுகள் குறித்து இரு தரப்பிலும் ஆர்வம் காணப்படுகிறது. இதர ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மேற்கொள்ளும் முதலீட்டை விட, பிரிட்டனில்தான் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்கிறது. அதே போல், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் 3 நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் விளங்குகிறது” – 2013 நவம்பரில் பிரிட்டன் பிரதமர் கேம்ரூன் அவர்களின் அறிக்கை இது.


Leave a Reply