-ஷகி, இலங்கை

குப்பைத் தொட்டில்களும்
ஈனுதொரு பிள்ளை – என்
கர்ப்பத் தொட்டிலுக்கோ
அந்த வரமில்லை
பத்துத் திங்கள் சுமக்கத்தான் நாதியில்லை
தசாப்தமாய் சுமக்கின்றேன்
கற்பனையில் ஓர் பிள்ளை!

பெற்றவளுக்குப் பிரசவ வலி ஒரு நாள்தான்
பெறாதவளுக்கோ பிறர்
தரும் வலி
தினம் தினம்தான்
முகம் பார்த்து முறுவலிப்பார்,
முன் நகர எள்ளி நகைப்பார்
மூதேவி இவள் மலடி என்றேதான்!

பணத்துக்கும் என்னிடம்
பஞ்சமில்லை
கணவன் பாசத்துக்கும்
என்றும் குறைவில்லை
கர்ப்பப் பைக்குள் முட்டைகள் முற்றவில்லை
கண்களில் முட்டும் கண்ணீரும் வற்றவில்லை

முன் வீட்டு முனிராவுக்கு
மூன்று பிள்ளை
பக்கத்து வீட்டு பவானியும்
முப்பது நாள் முழுகவில்லை
பின் வீட்டுக் குடிசைக்குள்ளும் சிணுங்குகிறாள் மழலை
பிச்சைக்காரி கைகளிலும்
அழுக்குப்பிள்ளை
குடிகாரப்பாவிகளுக்கும்
இதில் குறைச்சலில்லை
என் வீட்டிலேனோ குலவிளக்கின்னும் பிறக்கவில்லை!

முற்றத்து முருங்கையும்
பூவும் பிஞ்சுமா நெறஞ்சிருக்கு
கிணற்றடிக்  கதலியும்
பெரிய குலை தள்ளியிருக்கு
தோட்டத்துத் தென்னையிலும் பாளை வெடிச்சிருக்கு
நா வளர்த்த பூனையும்
பிள்ளைத்தாய்ச்சியா இருக்கு
என் நெஞ்சு மட்டும் பாலையாய்க் கொதிச்சிருக்கு!

மாமியார் என்னை வெறுத்தாச்சி
மதினியின் நாவிலும் குத்தல் பேச்சு
மாமனார் முகம் பார்த்து
நாளாச்சு
மச்சினனும் மதிக்க
மறந்தாச்சு
பரிகாரம் பார்த்தே
பணமும் கரைஞ்சாச்சு
வைத்தியர் மொழிவதோ
சாட்டுப்பேச்சு!

என் கொழுனன்
கொண்டபின்னே உறக்கம்
தலையணையிடம்
புலம்புவதே வழக்கம்
பிள்ளைக்காய் அவருக்குள்ளே ஏக்கம்
சொல்லாட்டியும்
இல்லாமலா இருக்கும்?

யாரை நொந்து என்ன
இலாபம்
இறைவா இவள்
உன் சன்னிதானம்
பாம்புக்கும் தாய்ப்பாசம்
வைத்தவன் நீ
பாறைக்குள்ளிருக்கும்
தேரைக்கும்
இரை அளிப்பவன் நீ
நிகரற்ற கிருபையாளன் நீ!

சிரம்தாழ்த்தித் தொழுகின்றேன்
கரம் ஏந்தி வேண்டுகிறேன்
என் வயிற்றில் ஓா்
உயிரை வளா்த்திடுவாய்…
பெண்மையினை
அன்னையாகப்
பரிணமிப்பாய்!
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.