வையவன்

அனகாபுத்தூருக்குப் போய் விலாசம் தேடி வீட்டிற்குள் நுழைந்தான் சிவா.
கூடத்திலிருந்து ஒரு பெரிய நிலைக்கண்ணாடி முன்னால் மூக்குத்தி மாட்டிக் கொண்டு நின்றாள் திஷ்யா.
“மார்வெலஸ்!” என்றான்.

அவன் வந்த ஓசை கேட்காமல் மூக்குத்தியில் லயித்திருந்த திஷ்யா சட்டென்று திரும்பினாள்.
கல் வைத்த மூக்குத்தியில் அவள் முகத்தில் ஒரு தனி சோபை கூடியிருந்தது. இத்தனை நாள் சிறு பெண்ணாயிருந்தவள் இன்றைக்குத் தான் முழு பெண்ணாக மாறிய மாதிரி ஒரு கம்பீரம்.

“அட… எப்ப வந்தே… வந்தீங்க?”
அவள் மூக்குத்தி திருகாணியை மாட்டிக் கொண்டிருந்தாள். அவனைப் பöர்த்த அவசரத்தில் அந்த வேலையை முழுக்க நிறைவேற்றுவாளோ இல்லை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவாளோ என்று தோன்றியது.

“திருகாணியை மாட்டிக்கிட்டே வா!”
அவள் சிரித்துக் கொண்டே அவசரமாக திருகாணியை மாட்டினாள். பின்பு உள்ளே போய் ஒரு மடக்கு நாற்காலியைக் கொண்டு வந்தாள்.

“பத்து நாள் கழிச்சு வர்ற மனுஷனுக்கு பத்து நிமிஷம் நிற்கிற தண்டனை தான் கொடுக்கணும்! போனாப் போவுதுண்ணு நாற்காலி கொண்டு வந்தேன்.”
“ஒன்பது நாள்தான் ஆகுது.வேணும்னா ஒன்பது நிமிஷம் நிண்ணுட்டு ஒக்கார்றேன்!”
அவன் நாற்காலியில் உட்காராமல் நின்றான்.

“உட்காருங்க… ஸிட்டவுன்” என்று சொன்னாள்.
“சரி டீச்சரம்மா! இனிமே லேட்டா வரல்லே” என்று சிவா உட்கார்ந்தான்.
வீடு அமைதியாக இருந்தது.

“எங்கே எந்த வாண்டுகளையும் காணோம்!”
“எல்லாம் ஸ்கூலுக்குப் போயிருக்கு? சின்னக்குழந்தை தூங்குது… அப்பா ஹாஸ்பிடலுக்குப் போயிருக்கார்.”
வீட்டைச் சுற்றிப் பார்வையை ஓட்டினான்.

இரண்டு அறை… ஒரு கூடம்… ஒரு வாசல். கூடத்தில் நாற்பது பேர் படுக்கலாம் போல் அவ்வளவு விஸ்தாரம்.

“வெளியே பின்புறம் பாத்ரூம்… டாய்லெட் பக்கத்திலேயே கிணறு இருக்கு. கிணத்திலே தண்ணி இருக்கு. ஆனா உப்பு!”
“கச்சிதமா இருக்கு!”
“இன்னொரு பாராட்டு சொல்லணும்.”
“என்னது?”
“வீட்டுக்காரர் சிங்கப்பூர்லே இருக்கார். ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான் வருவார். அந்தத் தொந்தரவு இல்லே.”
“சபாஷ்… சபாஷ்.”
அவன் கையிலிருந்த பிளாஸ்டிக் பையைப் பார்த்தாள். சிவா அதை அப்படியே அவளிடம் நீட்டினான்.

“இது எதுக்கு… ஒன்பது நாள் கழிச்சு வரறதுக்க காம்பென்சேஷனா? இல்லே பெனால்டியா?”
“திஷ்யா, நான் வெற்றிவேல் பிரீதா மூணுபேரும் டில்லி… ஆக்ராண்ணு ஒரு ரவுண்டு போய் ரிஷிகேஷ் பார்த்துட்டு வந்தோம்.”
“ஈஸிட்….” அவள் கண்கள் வியப்பால் விரிந்தன.

மை பூசிய அந்த விழிகளின் கருமைக்கும் கல் மூக்குத்தியின் சுடருக்கும் ஏதோ ஒரு முரண்பாட்டின் கவர்ச்சி இருந்தது.
“எப்ப மூக்கு குத்திக்கிட்டே”
“நாலு நாளாச்சு. நல்லாருக்கா?”
“நீ முழுமையுற்ற மாதிரி இருக்கு”
“அவள் முகம் மின்னயது.

“காதிலேயும் மூக்கிலேயும் துவாம் பண்ணி அங்கங்கே தங்கத்தை வச்சு அடைச்சாத்தான் ஆம்பிளைகளுக்கு பொம்பிளையின் முழுமை தெரியும் இல்லே?”

“அப்ப ஏன் மாட்டிக்கிட்டே? ஃபெமினிஸ்ட் மாதிரி பேசறவ எல்லாத்தையும் எதிர்த்து உடைச்சிருக்க வேண்டாமோ!”
“என்னமோ ஒரு கிறுக்கு…தோணிச்சு…இப்ப ஏண்டா குத்திக்கிட்டோம்ணு தோணறது.”

“அற்புதமா இருக்கு” என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்… பருகிக் கொண்டிருந்தான்… விழுங்கிக் கொண்டிருந்தான்…
“சிவா…”
“ம்ம்ம்”
“பார்வை நல்லா இல்லியே!”

“எதிராளி மொகம் என்னத்தைத் தூண்டுமோ பார்வையும் அந்த மாதிரி மாறிப் போகும். ஆக்ஷன்… ரியாக்ஷன்.”
“என்ன இப்படி ஒரு ஞானம் ரிஷிகேஷ்லே பிடிச்சுட்டு வந்தியா?”
“ஒன்கிட்டே கூட அடக்க ஒடுக்கமா ஒழுங்கா சாதுவா இருந்து நல்லபேர் வேறு வாங்கணும் போலிருக்கு!”
திஷ்யா கலீரென்று சிரித்துவிட்டாள்.

கூடத்தின் நடுவிலிருந்த பெரிய மேஜை மீது பிளாஸ்டிக் பையை வைத்துவிட்டு “பேசிக்கிட்டே நிக்கிறேன்… இரு போய் காப்பி கொண்டு வர்றேன்!” என்று சொல்லிவிட்டு எதிர்ப்புறமாக இருந்த சமையலறைக்குப் போனாள்.

கூடத்திலிருந்த மேஜை பெரிய மேஜை. காப்பிக் கொட்டை அளக்கிற மாதிரி ஒரு சின்ன எடை மெஷின் எவர்சில்வர் தட்டுடன் காணப்பட்டது.

ஒரு பக்கம் வரிசையாக சின்னச் சின்ன யுத்த வீரர்கள் மாதிரி விரல் நீளத்துக்கு ஏதோ பொட்டலங்கள் இருந்தன. எண்ணினால் நூறுக்கு மேல் போகும்.
ஒன்றை எடுத்துப் பார்த்தான்.

எப்ஸம் ஸால்ட்… பேதி உப்பு,
பேதி உப்பு தயார் செய்கிறாளா?
அதற்குள் உள்ளேயிருந்து திஷ்யா ஒரு டம்ளரை ஆற்றிக் கொண்டே நடந்து வந்தாள்.

“நான் காப்பிண்ணு சொன்னேனே… நீ ஏன் வாயை மூடிக்கிட்டு இருந்ததே?”
“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நனி நாகரிகர்!”
‘நனி நாகரிகரே… இது நஞ்சு அல்ல, நல்ல மோர்!”
“உப்பு போட்டிருக்கியா?”
“ஏன்… ஒனக்கு போடப்படாதோ?”
“சாதா உப்புண்ணா பரவால்லே. எப்ஸம் ஸால்ட்னா தான் யோசிக்கணும். எப்பவோ சின்ன வயசிலே சாப்பிட்டது?”
அவன் கண்டுபிடித்து நறுக்கென்று விஷயத்துக்கு, வந்ததை மனசிற்குள் மெச்சிக் கொண்டாள்.

அவள் நீட்டிய மோரை வாங்கிக் கொண்டான்.
“ஒன்பது நாளைக்கு முன்னாலே இதுக்கு ஒரு ஐடியா கேக்கத்தான் வரச் சொன்னேன்?”
“இது என்ன ஐடியா? சொல்லு.”

“நீ வரலே… சரி தயங்கித் தயங்கி குழம்பறதை விட குளத்திலே குதிச்சுடறதுண்ணு எறங்கிட்டேன். எப்ஸம் ஸால்ட்டை அப்பா மொத்தமா வாங்கிட்டு வந்து கொடுத்துடறார். நூறு கிராம் ஐம்பது கிராமா பொட்டலத்திலே பாக் பண்ணி வச்சுடறோம். பல்லாவரத்திலேருந்து ஒரு மருந்துக் கடைக்காரர் சைக்கிள்ளே பையனை விட்டு அனுப்பிச்சிடறார். கொடுத்தனுப்பிடறோம்.”
“என்ன பணம் கெடைக்கிறது?”

“அஞ்சு நாளா வேலை செஞ்சதிலே நூத்தம்பது ரூபா கெடைச்சுது. அதுலே தான் இது!” என்று மூக்குத்தியைத் தொட்டுக் காட்டினாள்.
“இதற்கு என் ஐடியா ஏன் கேக்கணும்னு நெனச்சே?”
“இதுக்கெல்லாம் வேற யாருகிட்டே ஐடியா கேக்கட்டும்?”

அப்படி ஒன்றும் உன்னை விட்டு விடத் தயாரில்லை என்று தப்பிக்க விடாமல் பிடிக்கிற மாதிரி சிவாவைப் பார்த்தாள்.
அவன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வை கொண்டாடுகிற உரிமையின் பிணைப்பில், இருமை அழிந்து ஒன்றுடன் ஒன்று சந்தித்து உண்டாகும் ஒரு மின்சார ஓட்டத்தின் சக்திப் பிரவாகத்தில் அவன் சற்று நேரம் சஞ்சரித்தான்.
“மோரைக் குடிங்க!” என்று அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

“ஆமாம்… மோர் கொடுத்தே இல்லே?”
அவன் மோரைக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தான்.
“நல்ல ஐடியா தான்! வீட்டிலே இருந்தபடியே ஒரு தொழில் செய்யறது நல்லது தான்”
“அது மட்டும் நோக்கமில்லே சிவா!”
“வேறே?”

“இந்தப் பசங்களுக்கு வீடு எப்படி நடந்துகிட்டிருக்கு? இங்கே அவங்களுக்கு என்ன ரோல்ணு தெரியணும். ஒழைக்கிற எண்ணம் உண்டாகணும். அவங்களை பிஸியா வச்சிருக்கணும். இதான் என் நோக்கம். இவங்கள்ளாம் அப்பா சம்பளத்தை நம்பியே யாரோ சம்பாதிச்சா நாம சௌக்கியமா இருந்துடலாம்ணு நம்பியே வளர்ந்துடு வாங்களோண்ணு எனக்கு ஒரு பயம் வந்துட்டது.”

திஷ்யாவிடம் அந்தக் குடும்பத்தின் கண்ட்ரோல் இருப்பதற்கு அவன் உள்ளூர மகிழ்ந்தான்.
“இப்பதான் ஒரு வழி கெடைச்சது. ரொம்ப சின்ன வழிதான். இந்த லைன்லேயே போய்ப் பார்த்தா அப்புறமா வெளிச்சம் தெரியலாம்.”

“ஆரம்பம் எளிமையா இருக்கறது நல்லது! கங்கை உற்பத்தியாகிற கங்கோத்ரி கூட சின்னது தான்”
“என்ன பேரு அது?”
“கங்கோத்ரி…”

“கங்கோத்ரி… கங்கோத்ரி… பேரு ரொம்ப நல்லா இருக்கு. அப்பா வெறும் பேப்பர்லே இதைப் பாக் பண்ண வேண்டாம். மேலே அச்சடிச்சு ஒரு மருந்து கம்பெனி பேரு வச்சு அடிக்கலாம்ணு சொன்னார்.”
“மறுபடியும் அவருடைய ‘ஆம்பிஷன்’ வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சா?”

“ஆனா… இந்த ஆம்பிஷனுக்கு கால்கள் உண்டு. அது மெதுவா நடந்து தட்டுத் தடுமாறி புவியீர்ப்பை விட்டு விடாமத்தான் ஓடும்.”
“குட்… அப்ப எனக்கு ராயல்டி கொடுக்கணும்!”
“எதுக்கு?”
“பேரு வச்சேனே அதுக்கு?”
“என்ன பேரு வச்சிட்டே… என்ன ராயல்டி கேக்கிறே?”
“கங்கோத்ரி பார்மசூடிகல்ஸ்”

“கம்பீரமாத்தான் இருக்கு. ஆனா எதுவோ கொஞ்சம் பெரிய எடம்ணு மிரட்டுது… இங்கே வந்து பார்த்தா பொசுக்குணு இருக்கும். நான் எப்ஸம்ஸால்ட்டை அளந்து அளந்து போட… கொழந்தைகள் பொட்டலத்தை ஒட்டிக்கிட்டிருக்கும்.”
“கங்கோத்ரி கூட அப்படித்தான் இருக்கு. ஆடு கூட தாண்டிடுமாம் அதை?”
“சரி… அதே பெயரை கன்பர்ம் பண்ணிக்கிட்டேன்.”
“ராயல்டி?”
அவன் பார்வையையும் உதட்டையும் பார்த்துவிட்டு “ஸ்ஸ்ஸு” என்று அதட்டினாள் திஷ்யா.

“பிளாஸ்டிக் பையை வச்சுட்டு நிக்கிறயே… நான் ஒனக்காக என்ன வாங்கி வந்திருக்கேன்னு பார்க்க அக்கறையில்லே?”
“அதெல்லாம் பொருள்கள் தானே! ஆளே வந்திருக்கும் போது அது செகண்டரி.”

அவன் மேலே உயரத்திற்குச் சென்றதை உணர்ந்தான் சிவா. எடுத்துப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.
“நாளைக்கு மறுநாள் நான் ஊருக்குப் போகப் போறேன். அம்மாவை அழைச்சுட்டு வந்துடலாம்னு நெனக்கிறேன்.”
“வீடு பார்த்துட்டியா?”
“இல்லே”
“பின்னே?”
“பிரீதா க்வார்ட்டர்ஸ். அவங்க ரொம்ப கட்டாயப்படுத்தறாங்க.”

“எனக்குப் பிடிக்கலே”
“எனக்கும்தான். ஆனா பிரீதா ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுது!”
“உன் இஷ்டம்.”

“நான் பொறப்படறேண்ணு சொன்னப்பா பிரீதாவும் இதையே தான் சொல்லுச்சு!”
“பண்ணுது, சொல்லிச்சு… என்ன அஃறிணையிலே அவளை ரெபர் பண்றே?”
“அவள்ணு சொல்லப் பிடிக்கலே. அவங்கண்ணா ஓவர் மரியாதையாத் தோணுது.”
“ஜாக்ரதையாயிரு”

பளிச்சென்று அவன் மனசில் ஒரு சிவப்பு விளக்கு விழுந்தது. சிவா அவளை அலசுவது போலப் பார்த்தான்.
“இது சந்தேகமா… பொறாமையா?”
“ரெண்டுமில்லே. நான் பெண். அவளும் பெண்.”

“இது சுவாரஸ்யமான திருப்பம்! ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு.”
திஷ்யாவுக்கு முகம் புறுபுறுவென்று மாறி மூக்கு துடித்தது.
“ஆஹா ஓஹோன்னு பெஃமினிஸம் பேச வேண்டியது. இன்னொரு பெண் குறுக்கிட்டா சடக்ணு சராசரிக்குக் கீழே போயிட வேண்டியதா?”

“நான் ஃபெமினிஸ்ட்டுண்ணு ஒங்ககிட்டே கொடி தூக்கிட்டு வந்து நிக்கலே.”
“பைத்தியம்! இந்த சிவாவை இன்னும் நீ புரிஞ்சுக்கணும். இவன் பசிபிக்!”
“போதும்… ஒங்க சுய தம்பட்டம்! எனக்குப் பிடிக்கலே”
“பிரீதா தாமுவுக்கு வாழ்க்கைப்பட இருந்தவள். வேறு சுய தம்பட்டமில்லேண்ணாலும் இந்த ‘வால்யூ’ ஒண்ணு போதும். நான் திடமானவனாய் நிற்க.”
அவள் முகம் சகஜமாயிற்று.

“என்ன செய்யப் போறே! பழைய வேலையா?”
“எது?”
“வேலை தேடற வேலை”
அவன் அலட்சியமாகச் சிரித்தான்.

“பொறுத்திருந்து பார்”
“ஒருத்தர் வீட்டிலே தங்கறப்போ…” என்று அவள் பேசு முன்பு குறுக்கிட்டான்.
“அங்கே ஒரு பாரம் மாதிரி ஒண்ணுக்கு ரெண்டு சுமையோட ஒக்காந்துக்குவேண்ணு நெனக்கிறியா?”
“வேற…”
“ஸீ”
“எழுதுவே இல்லே? ஆனா அது நிரந்தர வேலையில்லையே!”
“நான் அப்பறமா வர்றேன். வீட்டிலே எல்லாரும் இருக்கறப்ப அப்ப வந்து என் ராயல்டியை வாங்கிக்கறேன்.”
அவள் முகம் சிவந்தது.

“அந்தக் கதையெல்லாம் வேண்டாம். என் கேள்விக்கு பதில் சொல்லு!”

“இப்ப வாங்கிகிட்டா ஏதோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிற கோழைத்தனம் மாதிரி தோணுது. எல்லாரும் இருக்கறப்ப ஒரு சந்தர்ப்பத்தை கண்டுபிடிச்சா அதிலே ஒரு த்ரில் இருக்கும்”

அவள் மேஜை மீதிருந்த செய்தித் தாளை மடித்து அவன் தோளின் மீது செல்லமாக அடித்தாள்.
“நான் வர்றேன்” சிவா எழுந்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *