-சேது சுப்ரமணியம்

பாரறியாதிருந்த  எட்டையபுரந்தன்னைப்
பாரறியச் செய்தான் சுப்ரமணிய
பாரதி என்னும் மகா கவிஞன் –   கலைவாணி
பாரதி அருள் பெற்ற கலைஞன்                                        bharathi
பாரதிரச் செய்த சுதந்திர வேட்கைப்
பாடல்கள் புனைந்திட்ட இளைஞன்!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று கலங்கி நின்ற கவிஞன்
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எழுதி
நெஞ்சம் கலங்க வைத்த கவிஞன்!

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமென்பதில்லை என்று முழங்கினான்!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று
உளமார வாழ்த்திய போதிலே – வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோமென்று
வெகுண்டு வெறுப்பினைக் காட்டினான்!
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்று
நதிநீர் இணைப்பே நாட்டின் வளர்ச்சிக்குக்
கதியாகும் என்றவன் கூறினான்!

புதுமைப் பெண்களைப் போற்றினான் – அவர்
புவியாள வேண்டியே ஏற்றினான்
ஓடி விளையாடு பாப்பா என்று
குழந்தைகளுக் கறிவுரை கூறினான்!
பாஞ்சாலி சபதம் இயற்றியே – மகா
பாரதத்தின் புகழ் பரப்பினான்
பாரத மாதாவைப் போற்றியே அவன்
வந்தே மாதரம் பாடினான்!

பக்தியுடன் சக்தியைப் பாடினான் – தேச
பக்தியின் சிறப்பையும் பாடினான்
கண்ணனைக் கண்ணம்மா ஆக்கியே – பல
பொன்னான பாடல்கள் பாடினான்!
புதிய ஆத்திசூடி இயற்றினான் – மனதில்
பதியும்படி எளிமையாக்கினான்
குயில் பாட்டின் மூலம் காதல் கதையொன்று
நெடுங்கவிதையாகவே நல்கினான்
சாதிக்  கொடுமைகளைச் சாடினான் – சம
நீதி  கிடைக்க வழி தேடினான்!

’வாழ்க நீ எம்மான்!’ என்று காந்தியைப் போற்றினான்
வஞ்சக எண்ணம் கொண்டோரைத் தூற்றினான்
பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பற்றியும்
புரட்சிகள் பற்றியும் கூறினான்!
கவிதைகள் கட்டுரைகள் கருத்துப் படங்களால்
சுதந்திர வேட்கையைத் தூண்டினான்
வறுமையில் தவித்த போதிலும் – தலை
வணங்காது வாழ்ந்து காட்டினான்
வெள்ளையர் விரட்டிய போதிலும் – மனம்
எள்ளளவும் கலங்காது நின்றவன்!
பாரதத்தாயின் விலங்கினை  உடைத்து
சுதந்திரத் தாயாய்க் காண நினைத்தவன்
பார்த்தசாரதி கோயில் யானையால்
பரமனடியினைச் சேர்ந்தான்
பாரதத்தாய் மனம் சோர்ந்தாள்!

பாரதியின் புகழ்  பாடிடுவோம்
பாரதியாரின் வழி நடப்போம்
பாரத தேசத்தின் பெருமைதனைப்
பாரது உணரச் செய்திடுவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.