சிவபிரதோஷம்
-மீ.விசுவநாதன்
கங்கைதனைக் காவிரியைக் கவிபாடும் நல்ல
-கற்கண்டுப் பொருநைநதி நர்மதையும் என்றும்
பொங்கிவரும் யமுனையுடன் துங்கபத்ரா பண்பும்
-பூரித்து ஒன்றாகப் பூகோளம் போற்ற
சங்கமிக்கும் காலத்தைச் சாத்தியமாய் ஈசா
-சடக்கென்று செய்வாயே! சரித்திரத்தில் நற்பேர்
தங்கிடவே வேண்டாமா! தரணிக்கே தண்ணீர்
-தந்தவனாய் நீயிருக்கும் தருணமிது ஐயா!
திங்களினைச் சுமந்தவனே! தீகண்ணில் வைத்துத்
-தீயகாம எண்ணத்தை எரிப்பவனே! உன்னை
எங்களிலே ஒருவனாக எண்ணித்தான் பூமி
-இனிதாக இளமையுடன் எப்போதும் வாழப்
பங்குனதைக் கேட்கின்றேன்! பசுமைக்கு வித்தே!
-பாமரனின் நற்சொத்தே! பரமசிவ வெள்ளம்
எங்குமின்று ஒளிவீசி ஏகாந்தம் காணும்
-இன்பத்தை நீயின்றி எவர்தருவார் சொல்லு ?
(எண்சீர் விருத்தம் – அரையடி வாய்பாடு: காய்,காய்,காய், தேமா)