ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 25
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இயற்கையும், மனிதனும்
______________
“நேற்று காலத்தைப் பற்றிப் புகார் செய்தோம். அது விளைவித்த கொடுஞ் செயல்களை எண்ணி நாம் நடுநடுங்கினோம். ஆனால் இன்று நாமதை விரும்பி மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். ஏனெனில் இப்போது அதன் நோக்கம், இயற்கைப் பண்பாடு, ரகசியம், மர்மம் அனைத்தும் நமக்குப் புரிகின்றன.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
______________
இயற்கையும், மனிதனும்
______________
பொழுது புலர்ந்ததும்
புல்வெளியில் அமர்ந்தேன்
இயற்கை யோடு உரையாட !
மனிதன் அமைதி யாய்த்
தூக்க
மயக்கத்தில் கிடந்தான் !
மனத்தை ஒருமைப் படுத்திச்
சிந்தித்ததில்
வினா ஒன்று எழுந்தது :
“சத்தியம் என்பது
அழகுத் துவமா ? அல்லது
அழகுத்துவம் என்பது
சத்தியமா ?”
______________
சிந்தனை எனைத் தூக்கிச்
சென்றது
மனித இனத்துக் கப்பால் !
என் தனித்துவ உள் ஒளியைப்
போர்த்தி யுள்ள துணியை
நீக்கியது என்
கற்பனை !
என் ஆத்மா விரிந்தது !
இயற்கையின் நெருக்கத்தில் நான்
பெயர்ந்தேன் ! அதன்
மர்மத்தில் மலர்ந்தேன் !
செவிகள் திறந்தன
இயற்கையின்
வியப்புக்களை வரவேற்க !
______________
சிந்தனையில் ஆழ்ந்திருந்த
தருணம்
மரக் கிளைகள் ஊடே
தென்றல் வீசியதை
உணர்ந்தேன் !
காதில் விழுந்தது
திரியுமோர் அனாதை விடும்
வேதனை மூச்சு !
“பெரு மூச்சு விடுவதேன்
தென்றலே”
என்று நான் வினவினேன் !
தென்றல் சொன்னது :
“பரிதிக் கனல் மிகுந்த
நகரை விட்டு
நான் வருகிறேன்;
நோயும் நாற்றமும் தீண்டிய
வாயுக்கள்
ஒட்டுமென் ஆடையில் !
அதனால்
அழுதிடும் என்மேல் நீ
பழி சுமத்து வாயா ?”
______________