பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

 

பழமொழி: யாரானும் சொற் சோராதாரோ இலர்

நற்பால கற்றாரு நாடாது சொல்லுவ
ரிற்பால ரல்லா ரியல்பின்மை நோவதென்?
கற்பா லிலங்கருவி நாடமற் றியாரானுஞ்
சொற்சோர் விலாதாரோ வில்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 
பதம் பிரித்து:
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்;
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?
கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோர்விலாதாரோ இல்.

பொருள் விளக்கம்:
நல்ல குடியில் பிறந்த கற்றறிந்தவரும் (சில நேரங்களில்) ஆராயாமல் தவறானவற்றைச் சொல்வதுண்டு; (அவ்வாறிருக்க) நற்குடியில் பிறவாதவர் அவரது இயல்பாக இன்னாதவை கூறுவதை எண்ணி வருந்துவதில் என்ன பயன்? மலைப்பாறைகளின் இடையே வீழும் அருவி உள்ள நாட்டைச் சேர்ந்தவரே! யாராக இருப்பினும் சொல் குற்றம் செய்யாதவர் இல்லை.

பழமொழி சொல்லும் பாடம்: நற்குடியில் பிறந்த, நற்பண்புகள் கொண்ட கற்றறிந்த சான்றோரும் கூட சிலநேரங்களில் கூறத் தகாத தவறான சொற்களை சிந்தித்துப் பார்க்காமல் சொல்லிவிடுவதுண்டு. இக்கருத்தை வள்ளுவர்,

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. (குறள்: 503)

அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த, குற்றமற்ற ஆன்றோரை ஆராய்ந்து பார்த்தால், அவர்களிடமும் அறியாமை என்ற குற்றம் இருப்பது தெரியவரும் என்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *