நவீன முறையில் பொம்மலாட்ட வழிக்கல்வி
— தாமஸ் ஆண்டனி.
கடந்த 2004 ம் ஆண்டு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியேற்றுக் கொண்டது முதல் மாணவ, மாணவியரிடையே நல்லொழுக்க பண்புகளை வளர்த்து வருகிறேன். சமுதாய அக்கறையுடன், ஊர் பொதுமக்களும், சமுதாயத்தினரும் போற்றத்தக்க வகையில் மாபெரும் அறிவியல் கண்காட்சி, முதியவர்களுக்கு உதவிப் பொருட்கள் அளித்தல், பெண் குழந்தைக் கல்வி மற்றும் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, தூய்மை பாரத திட்டப்பணி, பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்குதல், பல்வேறு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு திருக்குறள் நடனம் ஆடிக் கற்பித்தல் பயிற்சி, கைவண்ண பொருட்கள் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்குக் கொடுத்து ஊக்குவித்து வருகிறேன்.
மேலும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் எமது பள்ளியில் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து பிரசுரம் செய்து எங்கள் பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன. ”தினத்தந்தி” தமிழ் நாளிதழில் திங்கள் கிழமை தோறும் வெளிவரும் மாணவர் ஸ்பெசல் கட்டுரைப் பகுதியில் தமிழ் அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சாதனையாளர்கள், வரலாற்று வீரர்கள் என இது வரை 44 கட்டுரைகள் எழுதி சாதனைப் படைத்துள்ளனர் எமது பள்ளி மாணவர்கள். கடந்த 2013 முதல் எனது பள்ளி மாணவர்களுக்கு இக்கட்டுரைகளுக்குக் குறிப்பு கொடுத்து எழுதப் பயிற்சி அளித்து வருகிறேன். இக்கட்டுரைகள் குறித்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பாராட்டுகள் கிடைத்துள்ளன.
நாம் மறந்துவிட்ட பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. அதை மீட்டெடுத்து பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தல் உரமூட்டி வருகிறேன். ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில்படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து படிக்க வருபவர்கள். சிலரது பெற்றோர்கள் நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருப்பதால் தங்கள் குழந்தைகளைக் கவனிக்க முடியாதவர்கள். இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் கவனத்தைப் பொம்மலாட்டம் மூலமாகக் கவர்ந்து பாடம் நடத்த முடிவு செய்தேன்.
நான் சின்ன வயதில் இருந்தே பல குரல்களில் மிமிக்ரி செய்வேன், நான் பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் சென்னைக்கு வந்து எனது சொந்த செலவில் பொம்மைகள் வாங்கினேன். பொம்மலாட்ட திரைச் சீலை நானே வடிவமைத்தேன். திரைச்சீலைக்குப் பின்னால் நின்றுக்கொண்டு பொம்மைகள் மட்டும் தோன்றுமாறு செய்து நான் முழுவதுமாக மறைந்து கொள்வேன். பாடங்களில் உள்ள பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவர்களின் பாடல்களை ஒரு சின்னக்குழந்தை பாடினால் எப்படி இருக்குமோ அப்படி எல்லாம் பொம்மைகள் பாடுவது மாதிரி பாடிக்காட்டுவேன். பெண்குரல், வயதானவர்கள், தடித்த அப்பாவின் குரல், பிரபல நடிகர்களின் குரல் என எட்டுக்கும் மேற்பட்ட குரல்களில் மாற்றி மாற்றிப் பேசி பாடத்தை மனதில் பதிய வைப்பதுடன் உற்சாகம் குறையாமலும் பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தெரியாதவாறு பொம்மைகள் உயர்த்திப் பிடித்தவாறு பாடம் நடத்துவதால் பயங்கரமாக கைகள் வலிக்கும். ஒரே சமயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை கைகளில் மாட்டிக்கொண்டு பாடத்திட்டங்களை பார்த்துப் படித்தல், பொம்மைகளை அசைத்தல், குரல்களை மாற்றி மாற்றிப் பேசுதல் என செய்து கொண்டே இருப்பது சவாலான விஷயம் தான். ஆனால் எனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது . ஆசிரியர் முன்னாள் இருந்தால் தப்பாகி விடுமோ, தண்டனை கிடைக்குமோ என்ற பயமும், தயக்கமும் இல்லாமல் பொம்மைகள் முன்பாக தங்கள் கருத்துகளை மாணவர்கள் இயல்பாக வெளிப்படுத்துகின்றனர். பலமுறை தங்கள் சந்தேகங்களை கேட்டுத் திருத்திக் கொள்கின்றனர். மாணவர், ஆசிரியர் இடையே இடைவெளி மறைந்துவிட்டது. இப்போது எந்தக் குழந்தைகளும் விடுமுறை எடுப்பதில்லை. குழந்தைகளின் நினைவாற்றல் திறன் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
ஒரே மாதிரியான பொம்மைகளை வைத்து பாடம் நடத்தினால் மாணவர்களுக்குப் அலுப்பு ஏற்படும் என்பதால் 2000 ரூபாய் செலவில் பெரிய குரங்கு பொம்மை வாங்கி வந்து அதன் மூலம் பாடம் நடத்துகிறேன். இந்தக் குரங்கு பொம்மை பெயர் டிங்கு, எனது இடுப்பில் உட்கார்ந்து இருக்கும். மாணவர்களிடமும் குரங்கு பொம்மையிடமும் நான் பேச வேண்டும். அதே நேரத்தில் பதிலுக்கு குரங்கு பொம்மை பேசுவதுபோல லிப் மூவ்மெண்டுடன் எனது கையை குரங்கு பொம்மைக்குள் விட்டு, குரங்கு பேசுவதுபோல மிமிக்கிரியும் செய்ய வேண்டும். அப்பொழுது எனது வாய் அசையக்கூடாது. அசைந்துவிட்டால் குரங்கு பேசவில்லை, நான்தான் பேசுகிறேன் என்று மாணவர்களுக்குத் தெரிந்துவிடும். இந்த முறைக்கு வெண்ட்ரிலோகிசம் என்று பெயர். இந்த முறையைக் கற்றுக்கொள்ள எனது சொந்த முயற்சியில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
இந்த டிங்கு மூலம் நீதிக்கதைகள், சிந்திக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள், அறிவூட்டும் பட்டிமன்றங்கள் எல்லாம் நடத்துவேன், டிங்குவை நடுவராக வைத்து பட்டிமன்றம் நடத்தினால் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்வர். இதனால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கற்கும் கல்வியானது மாணவர்களின் நினைவாற்றல் திறனை வளர்ப்பதற்கும், மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கும், வாழ்க்கை பாதையில் முன்னேற்றம் காண்பதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நவீன முறையில் பொம்மலாட்ட வழிக்கல்வி மூலம் கற்பித்தல் பணியைச் செய்து வருகிறேன். இந்தப் புதுமையான கற்பித்தல் பணி குறித்து பிரபல மாத இதழ்களான ”சுட்டி விகடன்” இதழின் “கனவு ஆசிரியர்” என்ற பகுதியில் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இடம் பெற்றுள்ளேன். மேலும் பிரபலமான கல்கி, புதிய தலைமுறைக் கல்வி, ஜன்னல், குங்குமம், பாவையர் மலர், கல்வி டுடே, புதிய ஆசிரியன், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி, தினமணி கதிர் போன்ற வார, மாத இதழிலும் என மொத்தம் 12 புத்தகங்களில் இடம் பெற்றுள்ளேன். எனது பொம்மலாட்ட வழிக்கல்வி குறித்த சிறப்புக் கட்டுரை பாரதி புத்தகாலயம் சார்பில் பேராசிரியர் நா. மணி அவர்கள் மீண்டெழும் அரசுப்பள்ளிகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாளிதழ்களான தினத்தந்தி ஞாயிறு மலர், தினமலர், தி இந்து [தமிழ் &ஆங்கிலம் ], தினகரன், காலைக்கதிர், தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் போன்ற பத்திரிகைகளில் தமிழக அளவில் எனது பொம்மலாட்ட வழிக் கல்வி குறித்த செய்திகளை வெளியிட்டு தொடக்கக் கல்வி துறைக்கும் ஈரோடு மாவட்டத்திற்கும், எனக்கும் பெருமையை தேடித் தந்துள்ளனர். இக்கல்வி முறைக்கு பல்வேறு கல்வித்துறை உயர் அதிகாரிகளும், ஆசிரியப் பெருமக்களும், பல்வேறு சமுதாய தன்னார்வ அமைப்பினரும் வெகுவாக பாராட்டி ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் என் கற்பித்தல் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு 6 விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கொடுத்துள்ளனர்.
கடந்த 07-07-2015 அன்று எனது பொம்மலாட்ட வழி கற்பித்தல் முறை குறித்து கோவையில் செயல்பட்டு வரும் “தூர்தர்சன் பொதிகை” தொலைக்காட்சியில் படப்பிடிப்பு நடைபெற்றது. 31-08-2015 அன்று தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில் சின்ன சின்ன நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியானது ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலேயே தொடக்கக் கல்வித் துறையில் முதன் முறையாக “தூர்தர்சன் பொதிகை” தொலைக்காட்சியில் இடம் பெற்றது. இன்னும் தொடரும் எனது கற்பித்தல் மற்றும் சமுதாய பணிகள்.
__________________________________________________________________________________________
தே. தாமஸ் ஆண்டனி, பி .ஏ .[ தமிழ் ] , பி .எட்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நாதகவுண்டன் பாளையம் , 638115
மொடக்குறிச்சி ஒன்றியம்
ஈரோடு மாவட்டம்
தொடர்பு எண் : 99769-71697
மின்னஞ்சல்: thomas1111981@gmail.com