பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.

 

பழமொழி: இறந்தது பேர்த்தறிவார் இல்

 

மறந்தானுந் தாமுடைய தாம்போற்றி னல்லாற்
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர் காலலைக்குங் கானலஞ் சேர்ப்ப!
விறந்தது பேர்த்தறிவா ரில்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
இறந்தது பேர்த்து அறிவார் இல்.

பொருள் விளக்கம்:
மறந்தும், (அறிவுடையவர்) தனது பொருளை தானே போற்றிப் பாதுகாப்பதைச் செய்யாமல், சிறந்த உறவினர் இவரென்று தகுதியற்ற ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டார். ஒலிக்கும் அலைகள் கொண்ட நீர்நிலைகளும், அதன்கண் அழகிய சோலைகளும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, கைநீங்கிய பொருளை மீட்டுத் தருவதை அறிந்தவர் இல்லை.

பழமொழி சொல்லும் பாடம்: நம்பிக்கைக்குரியவர் இவரென்ற எண்ணத்தில் பிறரிடம் தமது பொருளை ஒப்படைக்காமல் தாமே பாதுகாப்பதுதான் அறிவுடையவர் செயலாகும். நமது கையை விட்டு நீங்கிய பொருள் மீண்டும் கிடைக்கலாம் என்பதை உறுதியாகக் கூற இயலாது. நல்லவர் இவரென்று நம்பிச் செய்வதிலும் பிழை நேரக்கூடும் என்பதை வள்ளுவர்,

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

ஒருவருடைய பண்புகளை தெளிவாக அறியாமல், நல்ல செயல் என்று எண்ணிச் செய்யும் செயலிலும் பிழைகள் நேரும் என்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *