செண்பக ஜெகதீசன்

செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
யுட்பகை யுற்ற குடி. (திருக்குறள்-887: உட்பகை)

புதுக் கவிதையில்…

செப்பின் மூடிபோல்
செம்மையாய்ப் பொருந்தியிருந்தாலும்,
உட்பகை கொண்ட குடி

ஒருநாளும் ஒன்றுசேராது
உறுதியாக!

குறும்பாவில்… 

செப்பின் மூடியாய்ச் சேர்ந்திருந்தாலும்,
சேராது உண்மையில்

உட்பகை கொண்டோர் உறவு!

மரபுக் கவிதையில்… 

உடனிருந் தழித்திடும் உறவினையே
  உட்பகை யென்னும் நஞ்சதுவே,
அடைத்திடும் மூடியும் செப்பதிலே

  அழகாய்ப் பொருந்தித் தெரிவதுபோல்
கிடைத்திடும் உறவெலாம் அன்பினாலே
   கைகள் கோப்பதாய்த் தெரிந்தாலும்,
இடராம் உட்பகை உடனிருந்தால்

  என்றும் ஒன்றாய்ச் சேராதே!

லிமரைக்கூ… 

சேர்ந்திருக்கும் நன்றாய் செப்பதிலே மூடி,
உறவிதுபோல் சேர்ந்திருப்பதாய்த் தெரிந்தாலும்
சேராதென்றும் உட்பகை வந்தால் தேடி!

கிராமிய பாணியில்…

ஒண்ணுசேராது ஒண்ணுசேராது
ஒறவெல்லாம் ஒண்ணுசேராது,
உட்பகதான் வந்துசேந்தா
ஒருநாளும் ஒண்ணுசேராது…

செப்புலமூடி சேந்ததுபோல
ஒண்ணாஒறவு தெரிஞ்சாலும்,
உட்பகமட்டும் உள்ளவந்தா
ஒண்ணாச்சேர முடியாதே
ஒறவும்சரியா நெலைக்காதே…

ஒண்ணுசேராது ஒண்ணுசேராது
ஒறவெல்லாம் ஒண்ணுசேராது,
உட்பகதான் வந்துசேந்தா
ஒருநாளும் ஒண்ணுசேராது…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.