சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே …

0

— வைதேகி ரமணன்.

எனக்கு இரண்டு மருமகள்கள்.

மூத்தவனுக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பதாலும்; வெளிநாட்டில் வாழ்வதால் உதவிக்கு ஆள் இல்லை என்பதாலும் குழந்தைகள் (???) இருவருமே இயல்பாகவே விஷமம் அதிகம் என்பதாலும் எப்போதும் சண்டைதான்.

இரண்டாவது மகன் சென்னைவாசி. மனைவி இல்லத்தரசி. அவர்களுக்கு ஒரே மகள். பெற்றோரைப் போலவே நல்ல உயரமும் உடல்வாகும் கொண்டவள், அவளுக்கு 10 வயது முடியப் போகிறது.

பிரச்சனை என்னவென்றால் … புதிதாக ஒன்றும் இல்லை. உலகளவில் பேசப்படும் விஷயம்தான். ஒபீசிட்டி .. உடல்பருமன். 10 வயதிலேயே உடல் பருமனாகாமல் இருக்கச் சிலபல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. என்றாலும் எங்கு நோக்கினும் கிராண்ட் சுவீட்ஸ், ஆனந்தபவன், கிருஷ்ணா சுவீட்ஸ் … சென்னையின் மூளை முடுக்குகளில் எல்லாம் கடைகளும் கிடைகளும் தொடங்கியுள்ளன. எனவே பிரச்சனை பெரிய அளவில்தான்.

பேதாதற்கு ஜன்க்ஃபுட் ஆன மக்டானல்ட், கே எஃப் சி, ஹாட் சிப்ஸ் போன்ற பல வெளிநாட்டு இறக்குமதிகளும், பலவகையான ‘கோக் ஷாப்” போன்ற பேக்கரி , பாஸ்ட்ரி வகைகளும் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவதில்லை. எம் காலத்தில் ஒரு பொரிவிளங்காய் உருண்டையை ஒருவாரம் தின்றாலும் தீராது. இப்போதைய பிள்ளைகளுக்குச் சுலபமாக வாயில் போட்டதும் நழுவி வயிற்றில் போகும் பண்டங்கள்தான் பிடிக்கிறது என்ன செய்ய …

Arguingசொல்ல வந்ததே வேறு … நான் இப்போது வெளிநாட்டில் மூத்த மகனுடன் இருக்கிறேன். தினமும் ‘ஸ்கைப்பில்’ பேத்தியுடன் பேசுவேன். சின்னவன் தன மகளுக்கு முதல் தோசை தரும்போதே போதும்…போதும்… பருமனாகிவிடுவாய் என அச்சுறுத்தி 2 அல்லது 3 இல் எழுப்பிவிடுவான். அவன் சைசுக்கு அவன் சாப்பிடவே கூடாது. இருந்த போதும் மகள் மேல் அக்கறை அதைவிட எதிர்காலத்தில் அவள் அழகான உடைகள் அணிய வடிவம் அவசியம் என்ற கவலையும் ஒரு காரணம். நேற்றைய முன்தினம் பேத்தி கூப்பிட்டாள். வழக்கம் போல அம்மா அப்பா இருவரும் எதற்கெல்லாம் வாக்குவாதம் செய்தார்கள், ஆட்டம் டிராவில் முடித்ததா? யாருக்கு வெற்றி என்றெல்லாம் ஒலிபரப்பு செய்தாள். முத்தாய்ப்பாக இன்று இருவரின் சண்டையில் நான் நாலு தோசை சாப்பிட்டதை இருவருமே கவனிக்கவில்லை என்றாளே … பார்க்கலாம். சிரித்துச் சிரித்து வயிறுதான் வலித்தது.

இங்கோ நேற்றிரவு இட்லி சாம்பார். கடையில் வாங்கிய மாவுதான். குக்கர் தட்டு இட்லி வேறு. மகனும் பேரனும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சுடச்சுட இட்லியும் சாம்பாரும் நல்ல மணத்துடன் வந்தன.

மகன் டயட்டில் இருப்பதாக அடிக்கடி சொல்லிக்கொண்டே தட்டில் நாலு இட்லி வைத்தான். அம்மாவோ மகனுக்கு 6 இட்லி வைத்தாள்.

உடனே பேரனுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. “நான் பருமனாகி கேலிக்கு உள்ளாக்கப் பட வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமா? எடுங்கள் 4 போதும்” என்று கத்தினான்…

மருமகளோ “பரவாயில்லை இன்று ஒருநாள் சாப்பிடு” என்றாள் …

மகனுக்கு வந்ததே கோபம். “அதெப்படி நீ அப்படிச் செய்ய முடியும். அவனே வேண்டாம் என்று கூறும்போது” என்று வாக்குவாதத்தைத் தொடக்கி வைத்தான்.

இருவருமே பேசுவதில் குறைந்தவர்கள் அல்லர். தொடர்ந்தது சண்டை… குரலும் உயர்ந்தது… இதற்கிடையில் பேரனோ 6 இட்லியும் முடித்துவிட்டு எழுந்துவிட்டான்.

இரண்டும் அடுத்தடுத்து நடக்கவே எனக்குச் சிரிப்பிற்குத் தடைபோட முடியலை. சண்டை போட திருமணம் செய்தார்களா? அல்லது திருமணம் செய்ததால் சண்டை போட்டார்களா என்று தெரியலை…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *