புத்தாண்டுக்கான புதுக்குறள்
-முனைவர் து. சந்தானலெட்சுமி
உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,
அ .வ .அ. கல்லூரி,
மன்னம்பந்தல், மயிலாடுதுறை.
இனிமை நிறைந்து இயற்கை செழித்து
மனிதம் நிலைக்கச்
செய்!
அதிக வளமும் அளவாய் மழையும்
எதிலும் நிறைவும் கொடு!
சிறந்த மனமும் செறிந்த குணமும்
நிறைந்த மனமும் அருள்!
மடமை அகற்றி மனிதம் போற்றி
இடரைக் களைந்துவிடு!
கொடுமை அகன்று
குடிகள் தழைக்க
இடும்பை ஒழித்துவிடு!
நடுநிலை நற்செயல்
நற்பண்பு நாட்டில்
குடிகொள வேண்டும் இன்று!
நன்மையும் உண்மையும்
நேர்மையும் செம்மையும்
தண்மையும் வேண்டும் எமக்கு!
லஞ்சமில்லா நாட்டில்
நலமுடன் வாழ்ந்திட
லஞ்சமென்ன வேண்டும் உனக்கு?
இயற்கையைக் காத்து
இடரின்றி வாழ
முயற்சியை மேற்கொளச் செய்!
உழைப்பால் உயர்ந்து
சிறப்பாய்த் திகழ
அழைப்பாய் உலகை அணைத்து!