க. பாலசுப்பிரமணியன்

தவழ்தல் – மூளையின் வளர்ச்சிக்கு முதல் படி

education1

வளரும் குழந்தைகளின்  மனத்தில் கற்றலின் வித்துகள் பதிந்து இருக்கின்றன. ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அதைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் உள் மனத்தில் வேரூன்றுகிறது. அதைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதனை உணந்து பார்க்கவும்  மனம் விழைகின்றது. இதனால் ஏற்படும் ஊக்கத்தால் அதன் கை மற்றும் கண்ணசைவுகள்  அந்தப் பொருளை நோக்கிச் செல்கின்றன. கூடிய விரைவில் அந்தப் பொருளை நோக்கிச் செல்ல மனத்தில் தூண்டுதல் ஏற்படுவதால்  அந்தக் குழந்தையின் உடல் அசைவுகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

குழந்தை மன இயலையும் நலத்தையும் ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள் அவர்களின்  மன  மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு இந்தப் பருவத்தை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர்.  எப்படி கண்ணோடு கண் நோக்குதல் உறவுகளுக்கும்  புரிதலுக்கும் இன்றியமையாததோ அதுபோன்று கண்ணும்- கைகளும் சேர்ந்து உறவாடுதல் (eye – hand coordination ) மிக முக்கியமான செயல். ஒரு குழந்தையை உன்னிப்பாகக் கவனித்தால் எந்தப் பொருளிடம் நாட்டம் இருக்கின்றதோ அதை நோக்கி கை காட்டுதல், கைகளை ஆட்டுதல், கால்களை நீட்டுதல் போன்ற சில  செயல்களைக் காணலாம்.

கண்-கைகளின் உறவாடுதல் வளர்ச்சியில் பிற்காலத்தில் திறன்களை வளர்க்கவும் (Skill Development ), பார்வை சார்ந்த திறன்கள் (visual skills ) மற்றும் கைத்திறன்களையும் நகர்வு சார்ந்த கலைகள்( Kinesthetic Skills )

மற்றும் திறன்களையும் வளர்ப்பதற்கு அடிவகுக்கும். ஆகவே குழந்தைகள் ஒரு பொருளை பிடித்தல், நகர்த்துதல், ஆட்டுதல், உடைத்தல், மற்றும் கிழித்தல் போன்ற செயல்களை வெறும் விளையாட்டாகக் கருதாமல் அதன் கற்றலின் உள்நோக்கங்களை அறிந்து பெற்றோர்கள் அதற்கு துணையாக இருத்தல் அவசியம். பொதுவாக மழலையர் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது  இது போன்ற திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்தத் திறன்கள் மழலைப் பருவத்தில் பிறந்த சில மாதங்களிலேயே வெளிப்படத் துவங்குகின்றன.

வளரும் பாதையில் அடுத்த முக்கியமான நிகழ்வு குழந்தை தவழும் போது உருவாகின்றது. பொதுவாக வீடுகளில் குழந்தை தவழுவதை ஒரு மகிழ்சிகரமான செயலாக நாம் பார்க்கிறோம். சில நேரங்களில் அவை தவழ்ந்து சென்று ஏதாவது பொருளை எடுத்துவிடுமோ அல்லது உடைத்து விடுமோ என்ற பயமும், பாதுக்காப்பற்ற சூழ்நிலைகளில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களையும், விபத்துக்களையும் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் தவழ்தல் என்ற ஒரு நிகழ்வு அந்தக் குழந்தையின் மன வளர்ச்சிக்கும் மன நலத்திற்கும் முக்கியமானதாக  மேலை நாட்டு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில்  வலது மற்றும் இடது பக்கத்தில் இருக்கின்ற பகுதிகள் ( left and right lobes)  மூளையின் பல வித செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. பொதுவாக இடது பக்கத்து மூளை உடலின் வலது பாகத்தையும் வலது பக்கத்து மூளை இடது பாகத்தையும் கட்டுபடுத்துவதாகக் கூறுகின்றனர். ஆகவே குழந்தை தவழும் பொழுது  அந்த நகர்வுகள் வலது மற்றும் இடது பக்க மூளைகளை வலுப்படுத்த உதவும்.

வாழ்க்கையின் பின் பகுதிகளில் இந்த இடது-வலது சமன்பாடு (left -right coordination ) உடலின் பல பகுதிகளின் வேலைப்பாடுகளுக்கும் நலனுக்கும் அவசியம் தேவை. சில உடல் மற்றும் மன நல வல்லுனர்கள் இந்தத் தவழும் செயலை  வயது முதிர்ந்தவர்களுக்கும் ஒரு பயிற்சியாகச் செய்ய ஆலோசனை அளிக்கின்றனர். இது பார்கின்சன் மற்றும் மூப்பு சார்ந்த பல நோய்களைத் தவிர்ப்பதற்கு உதவுவதாகப் பரவலான கருத்து நிலவுகின்றது.

ஆகவே, உங்கள் குழந்தைகளோடு நீங்களும் கொஞ்சம் தவழ்ந்து பார்க்கலாமே ! !

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.