அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 59

0

பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம், தமிழ்நாடு

முனைவர்.சுபாஷிணி

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே

இளம் வயதில் என் தாயார் தமிழ்ப்பாடம் போதித்த போது இப்பாடலையும் சொல்லக் கேட்டு வளர்ந்தேன். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் இருப்பவை தனித்தனி சொற்கள் தாம் என்றாலும் அவை ஒன்றாக இணைந்து முழு வடிவம் பெற்று இவ்வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளும் அதனால் என் உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கம் என்பதும் மிக ஆழமானது; அர்த்தம் நிறைந்தது.

தமிழ் இலக்கியச் சுவையை விரும்புவோராகட்டும், நாட்டின் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், தனி மனித சிந்தனைச் சுதந்திரத்தை விரும்புவோராகட்டும், மத நல்லிணக்கத்தை விழைவோராகட்டும், பெண் சமூகத்தின் விடுதலைக்கு உழைப்பவர்களாகட்டும், சமய சிந்தனைகளில் திளைப்போராகட்டும், சாதிக் கொடுமைகளை எதிர்ப்போராகட்டும்.. இவர்கள் அத்துணை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் பாரதியின் செய்யுள் வரிகளோ, விரிவான கட்டுரைகளோ, கார்ட்டூன் வரைப்படச் சித்திரங்களோ, நாளிதழ் செய்திகளோ கைகொடுத்துத் துணையாக நிற்கின்றன.

பாரதி வாழ்ந்த காலம் இந்திய தேசமே சுதந்திர தாகம் கொண்டு எழுச்சியுடன் இருந்த ஒரு காலகட்டம். தன்னலம் கருதா சுதந்திர தியாகிகள், சிந்தனையாலும், உடலாலும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியை எதிர்த்து தனியாகவோ, குழுக்களாகவோ ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டிய காலகட்டம் அது. இந்த எதிர்ப்புகள் சுவரொட்டிகளாகவும். கையெழுத்துப் பிரதிகளாகவும், நாளேடுகளாகவும், திறந்த வெளி பிரச்சாரப் பேச்சுக்களாகவும், வெளிப்பட்டு மக்கள் மனதில் தோன்றிய சுதந்திர தாகத்திற்கு மேலும் எழுச்சியை ஊட்டின. அப்படி சுதந்திர தாகத்துடன் நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் மனதிலே ஆழப்பதிந்திருக்கும் மூடச்சிந்தனைகள், சமூக உயர்வு தாழ்வுகள் ஆகியனவற்றைக் களைந்து அதற்கும் விடுதலை வேண்டி செயல்பட்டவர்களில் பாரதியார் தனித்துவம் மிக்கவராகத் திகழ்கின்றார். சாகாவரம் பெற்ற அவரது சிந்தனையின் எழுத்து வடிவங்கள் வாசிப்போர் மனதில் இன்றும் அதே அதிர்வினை ஏற்படுத்துவதை புறக்கணித்து விடமுடியாது.

தமிழகத்தின் கடந்த நூற்றாண்டில் தோன்றி வாழ்ந்து மறைந்த முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் திகழும் சுப்ரமணிய பாரதியார் பிறந்தது தமிழகத்தின் எட்டயபுரம் என்ற ஒரு சிற்றூரில். அந்தச் சிற்றூரில் அவர் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இல்லம் தற்சமயம் பாரதியார் நினைவு இல்லம் ஒரு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சிகயத்திற்குத்தான் இன்றைய பதிவின் வழி நாம் செல்லவிருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளுக்காக தமிழகத்தின் தென்பகுதிக்குச் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரத்து ஜமீந்தாரின் அரண்மனை தொடர்பான தகவல்களைப் பதிவாக்கும் பணி மையப்பணியாக எனது திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அப்பணியின் போது எட்டயபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

நான் தங்கியிருந்த வீடு இப்போது பாரதியார் பிறந்த இல்ல அருங்காட்சியகமாக இருக்கின்ற பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீடு!

bharathy

நான் என் பயண ஏற்பாடுகளைச் செய்த போது இது எனக்குத் தெரியாது. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த அனுபவம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி எட்டயபுரம் சென்ற எனக்கு நான் அங்கு சென்ற பிறகு தான் பாரதி பிறந்து வளர்ந்து ஆடி ஓடி விளையாடிய வீட்டின் பக்கத்து வீட்டில் இரண்டு நாட்கள் தங்கப் போகின்றோம் என்ற விடயம் தெரிந்தது.

b1

பாரதியார் பிறந்த இல்லத்தின் பக்கத்து வீட்டு வாசலில் திரு.இளசை மணியன் மற்றும் நண்பர்களுடன்

பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது. வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது. நுழை வாசலிலேயே வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு அது. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. அப்பகுதியில் வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.

b2
பாரதியார் பிறந்த இடம் எனக் குறிக்கப்படும் பகுதி

தொடர்ந்து வாருங்கள். உள்ளே சென்று இந்தபாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகத்தில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வோம்.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.