குறளின் கதிர்களாய்…(116)
–செண்பக ஜெகதீசன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (திருக்குறள் -80:அன்புடைமை)
புதுக் கவிதையில்…
அன்பு காட்டி வாழ்வோர்
உடல்தான்
உயிரோடு இயங்குவது…
அன்பிலார் உடலது,
எலும்பில் தோல்போர்த்திய
வெற்றுடம்பே…!
குறும்பாவில்…
அன்புகொண்டோர் உடலதுதான்
உயிருள்ள உடல்,
வெறும் எலும்பும் தோலுமே, அல்லாதார்க்கு..!
மரபுக் கவிதையில்…
அடுத்தவர் மீதே அன்புகாட்டி
–அவரொடு சேர்ந்து வாழ்வோர்தான்,
எடுத்த உடம்பதில் உயிரோடு
–என்றும் வாழும் மனிதராவர்,
கொடுத்தே அன்புடன் ஒன்றாகக்
–கூடி வாழார் கொண்டவுடல்,
அடுக்கி வைத்த எலும்பின்மேல்
–ஆடைத் தோலது போர்த்தியதே…!
லிமரைக்கூ…
அன்புகாட்டில் அடுத்தவரைப் பார்த்து,
அவரதுதான் உயிருடம்பு, அல்லார்க்குளது
வெறுங்கூடு எலும்புதோல் சேர்த்து…!
கிராமிய பாணியில்…
அன்புகாட்டு அன்புகாட்டு
அடுத்தவர்கிட்ட அன்புகாட்டு,
அன்புகாட்டுற மனுசனுக்குத்தான்
ஆயுசுநெறஞ்ச உசிரொடம்பு,
அடுத்தவர்க்கொதவும் நல்லொடம்பு…
அன்புகாட்டத் தெரியாதவனெல்லாம்
கொண்டு அலைவது வெறும்ஒடம்பு,
எலும்பத் தோலால மூடிவச்ச
சீவனில்லா வெறும்ஒடம்பு…
அதால,
அன்புகாட்டு அன்புகாட்டு
அடுத்தவர்கிட்ட அன்புகாட்டு…!
