படக்கவிதைப் போட்டி … (59)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
ஆறுதல் அலை…
நீலக் கடலின் அலையெல்லாம்
நேரில் வந்து சேதிசொல்லும்,
வேலை செய்யும் வெளிநாட்டில்
விரும்பிச் சென்ற கணவன்நிலை,
கோல மயிலிவள் தனிமைத்துயர்க்
கண்ணீர் துடைக்க வந்ததுபோல்
ஓல மிட்டே அழுதுமீண்டும்
ஓடிச் செல்லும் அவனிடமே…!
-செண்பக ஜெகதீசன்…
விண்ணில் தெறிக்கும்
சூரியன் வரவில்
செலவானது எனது
காலைக் கடன்
கருணையுடன் முடித்து வைத்த
உணவுத்துறை
எழுச்சி முகமாய் தொடரும்
கல்விப் பணி
மாமியார் மருமகள்
கூட்டு முயற்சி
மாமனாரின் சமூகப் புரட்சி
அலுவலகப் பட்டி மன்றம்
ஆன் ஆதிக்கத்திலும் சிறு
அகிம்சை அன்பு
இதெல்லாம் முடித்தப் பின்
ஈவு மீதிக்கு எடுத்துச்
சென்றது …
மாலை நேர சுற்றுப் பயணம்
மதிமயக்கும் மல்லிகை வாசம்
சுட்டெரிக்கும் மணல் மேடு
கைம்மாறு கருதாமல்
கருங்கல்லை கட்டி அணைக்கும்
கடல் அலை
தும்பிக்கையாய் மாறி
நம்பிக்கை நீர் தெளிக்க
சுற்றத்தைவிட இன்பம்
வேறில்லை என்று
ஐயம் தெளிந்து
புன்னகைத்தாள் !
– ஹிஷாலி
படவரி 59
புத்திர சோகம்
என் பாலனை ஈவிரக்கமின்றி
”””’விழுங்கிய கடலே
என்னையும் விழுங்க மாட்டாயா
””””என்னையும் பயமுறுத்துகிறாயா
எத்தியெறியும்அலையே அறிவாயா
””””புத்திரசோகம் எப்டியென்பதை
சமீபத்தில் விவேக் அன்று
”””””சக்கரவர்த்தி தசரதன்!.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-4-2016
நீலக்கடல்தான்……எம்
கண்ணீர்த் துளிகளை விழுங்கிய
நீலக்கடல் தான்…..
கரையோரம் தவிக்கவிட்டுக்
கட்டுமரமேறி மீன்பிடிக்கச் சென்றவன்
கரைக்கு மீண்டுவருவானோ…இல்லை
கட்டுமரமிழந்து கயவர் வலையறுககக்
கைதாகிக் கண்ணீர்விட்டுக்கதறச்
சிறைக்குள் அடைபட்டிருப்பானோ….
சென்றவன் நடுக்கடலில்
சிறீலங்காக் குண்டடிபட்டு
செத்தவனாய் வருவானோ…
சிறுபேதை என்செய்வேன்…
வேதனைகள் தீர்க்கவும்
விரைந்து தீர்வைச் சேர்க்கவும்
யாரிங்கு வருவாரோ….
ஆறுதல் தான் தருவாரோ…..
கரைமேல் தவிக்கவும்
கண்ணீரில் குளிக்கவும்
நிலையாய் விதியெனவே
நீலக்கடல் படைத்ததுவோ….
கரையோரம் நிற்கும்
கதியற்ற பெண்ணுக்கு
கடல்தந்த பாடம் சீற்றந்தான்..
கடலலையின் சீற்றமல்ல….
கண்ணீர் அலைகளின் சீற்றந்தான்!
” இளவல் ” ஹரிஹரன், மதுரை.
அமுதென்று நினைத்து
நஞ்சை அருந்தினேன்
மலரென்று எண்ணி
முட்களை சூடினேன்
ஆசை அழைத்த வழி சென்றேன்
நேசமுடன் பேசிய காதலன்
பாதி வழியில் விட்டுப்போனான்
பாழும் மனது குழம்பி புலம்பி
பல நேரங்களில் சஞ்சலித்தது
என் காதல் ஜெயிக்காமல்
போனதற்கு காரணம் இறைவா நீ
இதோஇந்த அலைகள் ஓடி வந்து
பாறையில் மோதி சிதறியதுபோல்
என் ஆசைகளும் சிதறிப்போயின
கடற்கரையில் ஆரம்பித்த காதல்
கடற்கரையிலேயே கரைந்துபோனது
ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று
சரஸ்வதி ராசேந்திரன்