சலசலத்த மெளன மொழிக்குள் தாகம்

 

ராஜகவி ராகில் –

 

என் உடல் முழுதும் பரவியது
மலர் துப்பிய இனிப்பு எச்சில் சில துளி
உயிர் நுரைத்துக் கசிந்து போனது

தள்ளாடின கண்கள்
நரம்புகளில் கேட்டது புல்லாங்குழல் சத்தம்

வெளியே கோடைவெயில் எறித்தபோதும்
நான்
நனைந்து கொண்டிருந்தேன் மழையில்

என் குருதி பாலாகியதாய்
மூக்குத் துவாரம் நறுமணம் சாப்பிடுவதாய்
ஒரு மயக்க நோய்

தாகம் தீரலாம்
என் கடல்பிடித்து
காகிதமொன்றில் அலைகள் பரிமாறிடின்

போதை மயக்கம் தணியலாம்
அவிழ்ந்து சிரிக்கின்ற என் பூவாசம் கிள்ளியெடுத்து
மொழிக் கோப்பை ஊற்றிடின்

உன்னைப் பார்த்த என் எழுதுகோல் நீரோடை
சல சலத்தபோதுதான் புரிந்தது
காதல் மொழி மெளனமென

ஒரு பட்டாம் பூச்சி
என்னைக் கடந்து சென்ற கணத்தில் எதிரொலித்தது

மொழி தேவையில்லை
காதல் சொல்ல
போதும் உன்கண்கள் மட்டுமென .

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *