பிறப்பின் காரணம்?
வெ.ஜனனி
யாருக்காகப் பிறந்தோம்?
உணவு என்பதே கனவு எங்களுக்கு!
இதில் உரிமையைப் பற்றி நினைக்க நேரமெங்கே!
காலையும் இரவும் எங்கள் கண்களுக்கு ஒன்றுதான்!
இவை இரண்டிலுமே மறைந்திருக்கும் ஒளியைத்தான் தேடுகிறோம்!
நெஞ்சில் வலிகளைக்கூட சுமக்க முடியவில்லை!
மெலிந்த நெஞ்சில் எங்கு காண வலிமையை?
பசியால் ஓடும், வாடும் எங்களுக்கு
உணவுக்கான உத்தரவாதக் கனவே வானைத் தொடுவது போல…
தினம் தினம் மரணம், ஒப்பாரி ஒன்றும் புதிதல்ல!
முகாம்கள் என்னும் சிறைச்சாலையை விட மரணமே மேலோ?
பிணங்களுக்கு நடுவே வழியும் எங்கள் கண்ணீரைத் துடைக்க கைகள் நீளுமா?
ஏன் எங்களுக்கு இப்படி? பாவிகளா நாங்கள்?
படைத்த கடவுள்தான் சொல்ல வேண்டும்
எங்கள் பிறப்பின் ரகசியத்தை?