க. பாலசுப்பிரமணியன்

கற்றல் சிறப்புற  எவ்வளவு தூக்கம் தேவை ?

education

” வகுப்பில் தூங்கி வழியாதே. போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா…” என்று ஒரு முறையாவது மாணவர்களைப் பார்த்துக் கூறாத ஆசிரியர்களே இருக்க முடியாது. விருப்பமில்லாத பாடங்கள், சோர்வுற்ற மனநிலை, ஆசிரியர்களிடம் ஈடுபாடற்ற தன்மை, உடல் சோர்வு, உணவு வகைகள் மற்றும் உண்ணும்  முறைகளால்   தூக்க நிலை  ஊக்கப்படுத்தப்பட்டு கற்றலில் மற்றும்  கவனத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது .

நல்ல தூக்கமின்மை கற்றலை வெகுவாக பாதிக்கும் என்று  ஆராய்ச்சிகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சராசரியாக மூளை தொடர்ந்து 16  மணி நேரம் வேலைபார்த்தபின் களைப்புற்று தூக்கத்தைத் தழுவுகின்றது. சிலருக்கு தூக்கம் 6 அல்லது 7 மணி நேரம்  போதுமானதாக உள்ளது. இந்த நேரம் ஒரு தனி மனிதருடைய உடல்வாகு மற்றும்  பல பரிமாணங்களால் நிச்சயிக்கப் படுகின்றது. எனவே அனைவரையும்  ஒரே மாதிரியான நேரப் பரிமாணங்களில் கட்டுபடுத்துவதோ அல்லது வகைப் படுத்துதலோ  தவறாகின்றது.

“ஒரு மனிதனுக்குள்ளே தூக்கத்திற்கும் விழிப்பிற்க்கும் இடையே ஒரு மிகப்பெரிய போராட்டமே நடக்கிறது” என்று மூளை அறிவியல் நிபுணர் ஜான் மெடீனா என்பவர் கூறுகின்றார். ஒரு தனி மனிதனுக்கு தூக்கம் ஒரு நாள் நிறைவு பெறவில்லையென்றால் அதை  உடலும் மூளையும் “தூக்கக் கடன் “(sleep Debt) கணக்கில்  சேர்த்து விடுகின்றன. இந்தக் கடன் சுமை கற்றலை கிட்டத்தட்ட 30 விழுக்காடுகள் குறைக்கின்றன என்றும், இந்தச் சுமையின் அதிகரிப்பும் கற்றலும் எதிர் விகிதத்தில் இருப்பதாகவும்  காணப்பட்டுள்ளது. ஆகவே தூக்கத்தை விலக்கி அதிக நேரம் கண்விழித்துப் படிப்பது மூளையின் ஆரோக்கியத்திற்க்குக் கெடுதலாக இருப்பதோடு மட்டுமின்றி நல்ல நினைவின் அடித்தளங்களை ஆட்டிவிடுகின்றன.

“அன்றைய பாடங்களை அன்றே படி” என்று சொல்லப்படுவதும் “பாடங்களை  திரும்பத் திரும்பப் படி” என்று பல காலங்களாகக் கொடுக்கப்பட்ட அறிவுரை மூளையின் இயற்கையான குணங்களுக்கு ஏற்றதாக அமைந்ததாம்.

தூக்கம் பாதிக்கப்படும் நிலையில் கற்றலில் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன:

  1. கவனமின்மை
  2. நினைவுச் சிதறல்
  3. ஆர்வக் குறைவு
  4. மன அழுத்தம்
  5. அமைதியின்மை
  6. வெறுப்பு
  7. தேவையற்ற கோபம்
  8. கருத்து ஒருங்கிணைப்பின்மை
  9. செயலில் தாமதம்
  10. தளரும் புத்திகூர்மை

ஆகவே சரியான நிறைவான தூக்கம் எவ்வாறு கற்றலுக்குத் தேவைப் படுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். மேலும் நம்முடைய தூக்கத்திற்கான அட்டவணைகள் எப்படியிருந்தாலும் நமது உடல் தனக்கான அட்டவணையை தானே தயாரித்துக் கொள்கிறது. இதை உயிரி கடிகாரம் (Bio -clock ) என்று  அழைப்பார்கள். இந்த கடிகாரத்தை நாம் மாற்றி அமைக்க நினைக்கும் பொழுதில் அதனால் உடல் ஹார்மோன்களின் செயல்கள் பாதிக்கப்பட்டு பலவிதமாக உடல்நிலை மற்றும் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

தூக்க நேரங்களை மாற்றி அமைத்து கற்றலைத் தொடரும் நிலையில் மூளையில் அதற்க்கான வலைத்தளங்கள் வலுவாக அமைவதில்லை. மாற்றாக நல்ல தூக்கத்தின் போது மூளை பல வினாக்களுக்கு அமைதியாக பதிலைத் தேடி வைத்துக்கொள்வதாகவும் கருதப்படுகின்றது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டெலீவ் என்ற ஒரு வேதியல் ஆராய்ச்சியாளர் தன்னுடைய ஆராய்ச்சியின் வினாக்களுக்கு தூக்கத்தில் பதில் கண்டதாகக் கூறப்படுகின்றது. இதே போல கெகுலே என்ற விஞ்ஞானி தன் கண்டுபிடிப்பிற்கு தூக்கத்தில் கண்ட கனவே காரணம் என்று சொன்னதாக பரவலாகக் கூறப்படுகின்றது.

சிக்கல் தீர்த்தல் (Problem Solving ), நெருக்கடி மேலாண்மை (Crisis Management) போன்ற பல சீரிய அறிவுத்திறன்களுக்கு  நல்ல  தூக்கத்தின் தேவையை வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரத்திற்கு முன் அதிக நேரம் கண்விழித்து அலைபேசிகளில் பேசிக்கொண்டிருத்தலும், உரை செய்திகளை (Text message)  அனுப்புதலும் மூளையின் ஓய்வுக்கும் அமைதியான உறக்கத்திற்கும் ஏதுவானதாக இல்லை என்று உணரப்படுகிறது.  இதனால் தூங்கும் நேரத்தில் மூளையில் நினைவு அழுத்தங்கள் ஏற்பட்டு கற்றலின் ஆழத்தையும் திறனையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுவது மட்டுமின்றி மனநல வல்லுனர்களும்  கருதுகின்றனர்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.