இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 202 )

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வாரம் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் நிறைந்த வாரமாக இடம்பெறப் போகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னால் அடுக்கடுக்காய் வரும் சிறு அதிர்வுகளும் அவ்வதிர்வுகளினால் ஏற்படும் விளைவுகளும் சகஜம் என்பது போல ஜாரோப்பிய ஒன்றியத்தின் உள்ளேயா ? வெளியேயா ? என்பதற்காக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் அரசியல் அதிர்வின் விளைவுகள் இன்னும் விளைந்து கொண்டே இருக்கின்றன.

23853e20-b8a6-44db-9470-c068ca104c65கடந்த வியாழக்கிழமை 23ம்திகதி நடைபெற்ற இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா ? இல்லை தொடர்ந்து அங்கம் வகிப்பதா எனும் கேள்விக்கு இங்கிலாந்து மக்கள் 52% வெளியேற வேண்டும் என்றும் 48% அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதைற்கமைய இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பதை அரசாங்கம் மக்கள் ஆணையாக ஏற்று அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இம்முடிவு ஒரு அரசியல் அதிர்வாகவே அமைந்து விட்டது. இங்கிலாந்து அரசாங்கமும், பிரதமரும், எதிர்க்கட்சியும் இங்கிலாந்தின் தொடர்ந்த ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதை எனது கடந்தவார மடலில் தெரிவித்திருந்தேன். ஆனால் மக்களின் முடிவு அவர்கள் எதிர்பார்த்ததைப் போலல்லாது முக்கியமான அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணானதாக அமைந்து விட்டது.

தேர்தல் முடிவு வெளியான வெள்ளியன்று காலை பிரதமர் தனது உத்தியோக வாசஸ்தலத்திற்கு வெளியே பத்திரிகைகளுடனான ஒரு சந்திப்பை நடத்தி தான் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற தனது வேன்டுகோளை நிராகரித்த மக்களின் ஆணையை நிறைவேற்றும் தகமையைத் தான் இழந்து விட்டதாகக் கூறிய அவர் , இங்கிலாந்தை ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை புதிய பிரதமரும், புதிய அமைச்சரவையுமே கொன்டு செல்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றார் பிரதமர்.

ஆயினும் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படும் வரை தான் மூன்றுமாத காலத்திற்கு தொடர்ந்து நாட்டின் தலைமையை முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அரச அதிகாரத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தமக்கான புதிய தலைவரின் மூலம் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு செப்டெம்பர் 9ம் திகதி புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

சரி இனி இந்த முடிவு கிளப்பிய அடுத்த அதிர்வலையைப் பார்ப்போம். எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவரான ஜெர்மி கோர்பன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தலைவலி. ஜேர்மி கோர்பன் பலகாலமாகவே லேபர் கட்சியின் இடதுசார முன்றலில் நின்றவர், நிற்பவர் அவர் எப்போது ஜரோப்பிய ஒன்றியத்திற்கு முரணான கருத்தையே கொண்டிருந்தார் ஆனால் காலத்தின் கோலத்தால் லேபர் கட்சியின் தலைவராக்கப்பட்டார். லேபர் கட்சியின் பெரும்பான்மையினர் ஜரோப்பிய ஒன்றியத்திற்ல்கு சார்பான கொள்கை கொண்டிருந்ததால் அக்கட்சியின் கொள்கையாக ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் காரணமாக லேபர் கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் முழுமனதுடன் ஈடுபடவில்லை அதனால் லேபர் கட்சியை ஆதரிப்பவர்கள் மத்தியில் லேபர் கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி தெளிவான நிலை இருக்கவில்லை. விளைவு லேபர் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட இடங்களிலேயே ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான வாக்களிப்பே நிகழ்ந்தது.

தமது கட்சியின் தலைவர் கட்சியை வழிநடத்தும் தகமை அற்றவர். இவரின் தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் தமது கட்சி மூழ்கிப் போவது நிச்சயம் எனும் முடிவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் வந்தனர். ஒவ்வொருவராக ஏறக்குறைய 75% வீதமான நிழல் அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்தது மட்டுமன்றி தமது தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்திர்கு ஆதரவாக 172 உறுப்பினர்களும் எதிராக 40 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஜெர்மி கோர்பன் அவர்கள் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் அவரோ தன்னைத் தேர்ந்தெடுத்த சாதாரண உறுப்பினர்களின் நம்பிக்கையை தான் சிதறடிக்கப் போவதில்லை என்றும் தன்னைப் பதவியிலிருந்து இறக்க வேண்டுமானால் ஜனநாயக வழியில் தன்னை எதிர்த்து தலைமைப் பதவிக்கு போட்டியிடலம் என்றும் கூறியுள்ளார்.

சரி அடுத்த அதிர்வலைக்கு வருவோம். ஜக்கிய இராச்சியமானது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து எனும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாகும். நடந்த இந்த ஜரோப்பிய ஒன்ரியத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து நாட்டு மக்கள் 56% மானோர் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று வாக்களித்துள்ளனர். இதன் பிரகாரம் ஸ்கொட்லாந்து நாட்டின் சட்டசபையின் முதலமைச்சர் தமது நாட்டை தமது மக்களின் ஆணைக்குப் புறம்பாக ஜக்கிய இராச்சியத்தோடு இணைத்து வெளியே எடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனும் வாதத்தை முன்வைக்கிறார் . ஜக்கிய இராச்சியம் தமது விருப்பத்திற்கு எதிராக நடக்க முற்பட்டால் தாம் தமது நாடு ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்லும் மக்களின் அபிலாஷயை அறிந்து கொள்ள இரண்டாவது ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

அதேபோல் வட அயர்லாந்தும் தாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க விரும்புவதாக வாக்களித்துள்ளார்கள். அவர்களும் இதன் மூலம் தாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் ஜக்கிய இராச்சியத்தின் முடிவு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் தீர்வு பற்பல பிரச்சனைகளைக் கிளறி விட்டிருக்கிறது. இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன் பிரஸ்ஸல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்து இங்கிலாந்தின் முடிவைப் பற்றிய விளக்கத்தை மற்றைய ஜரோப்பிய தலைவர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளார். அவர்களோ ஜரோப்பிய ஒன்றியத்தின் சாசனத்தில் 50 வது ஷரத்தான விலகுதல் எனும் ஷரத்தை முடுக்கி விட்டால் ஒழிய எதுவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் நாம் இடமளிக்கவே மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்..

சரி இனி பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக மக்கள் வாக்களித்தது ஏன் ? முதலாவதாக மக்கள் இதுவரை நடந்த அரசியலை தூக்கி எறியும் வண்ணம் நடந்துள்ளார்கள் எனும் கருத்து நிலவுகிறது . அத்தோடு இங்கிலாந்துக்குள் நுழையும் அந்நியதேசத்தவரின் எண்ணிக்கையின் அளவு எதிர்பார்த்த அளவில் கட்டுப்படுத்தாது ஒரு காரணம். இக்காரணமே கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவெனில் இங்கிலாந்தின் பல்லினக் கலாச்சார மக்கள் வாழும் நகரமாகிய பேர்மிங்காம் நகர் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையேயாகும். பேர்மிங்காம் நகரம் நிச்சயமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ந்த அங்கத்துவத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றே அரசியல் அவதானிகளின் கருத்து அமைந்திருந்தது.

ஆனால் இந்த “வெளிநாட்டுக்காரரின் இங்கிலாந்து வருகை என்பதை முன்னிலைப்படுத்தி பல முன்னனி அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்தமையால் இங்கிலாந்து மக்களின் மனங்களில் என்றுமில்லாதவாறு நிறவெறி, இனவெறி என்பன தலைதூக்கப்பட்டு விட்டதோ எனும் அச்சம் பலர் மனதில் ஊசலாடுகிறது.

இனவெறி, நிறவெறி தொடர்பான குற்றச்செயல்கள் கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குப் பின்னர் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் சுனாமி அலை கொடுத்த அரசியல் அதிர்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று காலை அனைவராலும் அடுத்த பிரதமராவார் என்று எதிர் பார்த்திருந்த முன்னாள் லண்டன் மேயர் பொரிஸ் ஜான்சன் தான் டேவிட் கமரன் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக விண்ணப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்தது அனைவரின் மத்தியிலும் மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரி போனவாரம் நான் எவ்வாறு வாக்களித்தேன் என்று இந்தவாரம் சொல்கிறேன் என்று சொன்னதன் பிரகாரம் நான்,

“ஜரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டும்” என்றே வாக்களித்திருந்தேன். ஆனால் முடிவு எதிராக இருக்கிறது . எது எப்படி இருப்பினும் வருவதை எதிர்கொள்வதுதானே யதார்த்தம். காலம் தனது கைக்குள் என்ன வைத்திருக்கிறது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *