( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

 

வானம் மகிழ்வடைந்தால்

மழையினைத் தந்துவிடும்

பூமி மகிழ்வடைந்தால்

புதுவிளைச்சல் கொடுத்துவிடும்

சாமி மகிழ்வடைந்தால்

சகலதும் கிடைத்துவிடும்

ஆதலால் மகிழ்ச்சியினை

அகிலமெலாம் விரும்புறதே !

 

பூக்கொடுக்கும் மரங்களெல்லாம்

பூமிக்கு மகிழ்ச்சிதரும்

பழங்கொடுத்து மரங்களெல்லாம்

பலருக்கும் மகிழ்ச்சிதரும்

சினமகற்றி வாழ்ந்துவிடின்

தினமுமே மகிழ்ச்சிதான்

அதைமனதில் கொண்டுவிட்டால்

அகிலமே மகிழ்ச்சியுறும் !

 

பசித்தவர்க்கு உணவளித்தால்

பசிதீர மகிழ்ச்சிவரும்

அடித்தவரை அரவணைத்தால்

அவர்மனமும் மகிழ்ச்சியுறும்

பிடித்தமுடன் நடந்துகொள்ளின்

பெரும்பாலோர் மகிழ்வுறுவர்

அர்த்தமுடன் நாம்பழகி

அனைவருமே மகிழ்ந்திடுவோம் !

 

மற்றவரை மதித்துநின்றால்

மகிழ்வுந்தன் கூடவரும்

பெற்றவரை பேணிநின்றால்

பெருமகிழ்ச்சி பெருகிவரும்

கற்றவரைச் சேர்ந்துநின்றால்

காலமெல்லாம் மகிழ்ச்சிவரும்

கயவர்தமை ஒதுக்கிவிட்டால்

கண்டிடலாம் மனமகிழ்ச்சி !

 

நல்லநட்பு எப்போதும்

நல்மகிழ்ச்சி நல்கிநிற்கும்

பொல்லாத நட்பினால்

பொசுங்கிவிடும் மகிழ்ச்சியெலாம்

எல்லையில்லா மகிழ்ச்சிபெற

எல்லோரும் விரும்புகிறோம்

இறைவனிடம் சரணடைந்தால்

என்னாளும் மகிழ்ச்சியன்றோ !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "என்னாளும் மகிழ்ச்சியன்றோ !"

  1. புனைவதின் மகிழ்ச்சி தமிழோடு சேரும்
    பகிர்வதின் மகிழ்ச்சி கவியோடு சேரும்
    ரசிப்பதின் மகிழ்ச்சி ரசிகனைச் சேரும்
    பாரட்டும் மகிழ்ச்சி வல்லமைக்கு தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.