அமுதனார் கண்ட எம்பெருமானார்
தி விப்ரநாராயணன்
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்க ளெல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற் காயினரே
திருவரங்கநாதர் இராமானுசரிடம் கேட்டாராம்.” அதெப்படி நான் யுகந்தோறும் அவதரித்து அவர்களை ரக்ஷிக்கின்றேன். என்னால் அவர்களை என்னை உணரவைக்க முடியவில்லை. உன்னால் எப்படி இச்செயல் முடிந்தது. அறியேன் நான், எடுத்துரைப்பாய் நீ ”என்று வினவினாராம் அதற்கு எம்பெருமானார் , ” உன்பெருமையை நீ சொல்ல முடியுமா. அடியார்களாகிய நாங்கள்தானே சொல்ல வேண்டும்” என்றாராம். அண்ணல் இராமானுசன் தோன்றிய அப்போழுதே நாராயணன் பற்றிய ஞானம் மக்களுக்கு வந்துவிட்டது என்று அமுதனார் எம்பெருமானாரின் அரிய பெருமையை இப்பாடலின் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் 108 பாடல்கள் மூலம் தன் ஆச்சார்யரின் பெருமையை சொல்கிறார். ஒவ்வொரு பாடலையும் இராமானுசன் என்ற பெயர் வருமாறு பாடியிருக்கிறார்
இப்பாடல் தொகுதிக்கு இராமானுச நூற்றந்தாதி என்று பெயர்.. இப்பாடலாசிரியர் திருவரங்கத்தமுதனார் திருவரங்கத்தில் அரங்கநாதர் கோவில் பட்டராகவும் நிர்வாகத்தையும் கவனித்துவந்தார். இவர் போக்கு இராமானுசருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இவர் இராமானுசரை வெறுத்தார்.எப்படியாவது இவரை கோவில் காரியத்திலிருந்து விடுவித்துவிட எண்ணினார் இராமானுசர். ஆனால் தாயார் இவர் கனவில் வந்து ”அவன் என் பிள்ளை.அவனை அனுப்பிவிடாதே” என்றாராம். ஆகவேதான் காஞ்சிபுரம் சென்றுவிடலாம் என நினைத்து தன் சீடர் கூரத்தாழ்வானிடம் கூற அவரும் ”வேண்டாம், அமுதனாரை திருத்திப் பணிகொள்வோம்” என்றாராம். ”நீரே அக்காரியத்தைச் செய்யும் ” என்று கூறிவிட்டார் இராமானுசர். அமுதனார் கூரத்தாழ்வானின் சீடரானார். தக்க தருணத்தில் கோவில் காரியத்திலிருந்து அவரை விடுபட வைத்தார். ஆனால் அவருக்கு வேண்டிய கோவில் மரியாதைகள் பிறழாது நடக்க ஏற்பாடு செய்தார் இராமானுசர். தான் வெறுத்தும் தன்னிடம் அன்பு காட்டும் ஆச்சார்யரின் மனோபாவம் கண்டு வியந்தார். அவ்வியப்பே அந்தாதியாக உருவாயிற்று.
ஆச்சார்ய பரம்பரையில் ஆளவந்தாருக்குப்பின் அரியணையில் அமர்ந்தவர் இராமானுசர்தான். நம்மாழ்வாரால் இவர் வருகை முன்னரே உரைக்கப்பட்டு இவரின் திருவுருவச் சிலையை தாமிரபரணி நீரிலிருந்து மதுரகவி ஆழ்வாருக்குக் நம்மாழ்வார் கொடுத்தார். பின் தன் திருவுருவத்தைக் கொடுத்தார். நம்மாழ்வாரால் நாதமுனிகளுக்கும் இராமானுசரின் திருவுருவம் கொடுக்கப்பட்டது.அதை திருக்கோட்டியூர் நம்பிவரை ஆராதனம் செய்து வந்தனர்.மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு வரப்போகும் இராமானுசர் பற்றி உரைக்கவே அவரைக் காணவேண்டும் என்ற அவா ஆளவந்தாருக்கு மேலிட்டது. அதன்படி காஞ்சிக்கு வந்து இராமானுசரை அவர் அறியாது திருக்கச்சி நம்பி மூலம் பார்த்தார். உடனே இவர்தான் ”ஆம்முதல்வன்” என்று ஆனந்தித்துக் கூறினார். ஆகவே அத்தகைய பெருமை பெற்றவர் இராமானுசர். ஆதிசேஷன் அம்சமாக அவதரித்தவர்.
இராமானுசரின் பெருமைகளை அறிந்து அவற்றை அந்தாதி மூலம் நமக்கு அளித்துள்ளார் அமுதனார்”பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன்” என்றும்,”’ குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் ” என்றும் ”பூதத் திருவடித்தாள்கள் நெஞ்சத்துறைய வைத்தாளும் இராமானுசன்”என்றும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்” என்றும் ”அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்றும் ”தூயநெறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமானுசன்” என்றும் பலவாறு பாடுகிறார். அந்த அளவுக்கு ஆழ்ந்த பக்தி இராமானுசரிடத்தில் அவருக்கு. ”இராமானுசன் புகழன்றி யென்வாய் கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே” என்கிறார்.
எம்பெருமானாரைத் துதித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்கிறார் இந்தப் பாட்டில்
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வன்மையினால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே
கருணையின் உறைவிடம்
இராமானுசருக்கு பெற்றோர்கள் சூட்டிய திருநாமம் இளையாழ்வார் என்பதே. ஏனெனில் இவர் லக்ஷ்மணனின் அவதாரம்.இவர் திருப்புட்குழியில் அத்வைதியான யாதவப் பிரகாசரிடம் பாடம் கேட்டார். அவரின் அத்வைத விளக்கத்தை ஆட்சேபித்து பணிவுடன் விசிஷ்டாத்வைத விளக்கத்தைக் கொடுத்தார், அவருக்கு இது பிடிக்கவில்லை. குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கிறான் என்று அறிந்தவுடன் அவர் இளையாழ்வாரைக் கொல்ல சதி தீட்டினார். காஞ்சி வரதராசனே நேரில் வந்து காப்பாற்றினார்.. இருந்தும் தன் ஆசானிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கடைசியில் ஆசானையே ஆட்கொண்டு தம் சிடராக்கிய பெருந்தன்மை படைத்த பிரான் இராமானுசர் அவர்கள்,. அவர்தம் மனைவி தஞ்சமாம்பாள் அவர் ஆசான் பெரியநம்பியின் மனைவியை அவமதித்தாள்; அவரின் மற்றொரு ஆசான் திருக்கச்சிநம்பியையும் அவமதித்தாள். பசியென்று வந்த அந்தணர்கள் இருவருக்கு உணவில்லையென்று சொன்னாள். ஆனால் அவரைக் கடிந்து கொள்ளாது இத்தவற்றுக்கெல்லாம் தானே காரணம் என்று கருதி அவரின் மனைவிக்கு வேண்டிய வசதிகள் கொடுத்து பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்த, துறவறம் பூண்ட கருணைக்கடல் .
இராமானுசர் திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்தபோது கோவில் நிர்வாகத்தைச் சரிப்படுத்தினார். இவருடைய சீர்திருத்தங்கள் பிடிக்கவில்லை சில அந்தணர்களுக்கு.அதனால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முற்பட்டனர். ஒருநாள் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது ஒரு பிராமணப் பெண்மணி அவருடைய பாத்திரத்தில் சோறிட்டு அழுதுவிட்டாள். ஏனென்று கேட்கையில் அவள் கணவன் விஷம் கலந்து கொடுக்கசொன்னார் என்று கூறினாள்,அவளை மன்னித்து அன்றிலிருந்து உண்ணாவிரதமிருந்தார். இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பி அவரின் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தார். விஷம் கொடுத்த அந்தணர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கருணை வடிவினரான இராமானுசர். கூரத்தாழ்வானின் கண்பறித்த சோழனின் மகனுக்கு மனமிரங்கி ஆட்கொண்டது,வாதம்புரியவந்த யக்ஞமூர்த்தியை வென்று ஆட்கொண்டது ஊமைகள்முதலான ஊனமுற்றவர்களுக்கு அன்பு காட்டியது ,முக்தி அளித்தது குருமார்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட, ஊனமுற்ற ஹொய்சாலமன்னனான விட்டலதேவராயனின்பால் கருணைகாட்டி அவரை மன்னனாக்கியது, அரசனின் சித்திரவதைக்குட்பட்ட சமணர்களைக் காப்பாற்றி வைணவராக்கி ஆட்கொண்டது . முதலியன அவரின் கருணைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும் அதனால்தான் அமுதனார் இந்தப் பாடலை இயற்றினார் போலும்
காரேய் கருணை ராமானுசா இக்கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கின்று தித்திக்குமே
அனைவரும் ஓர்குலத்தார்
எட்டெழுத்து மந்திரத்தை ஒரு குருவிடமிருந்து உபதேசமாய்க் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது வைணவ மரபு. அதன்படி எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்றார்.அதற்காக திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு 18 முறை சென்றாரென்று கதைகள் மூலம் அறிகிறோம். அப்படிப் பெற்ற அம்மந்திரத்தை ஆசையுடையோரெல்லாம் கேட்டுப் பயனடையலாம் என்று திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி அம்மந்திரத்தைச் சொன்னார். இதையறிந்த ஆசான் கடிந்துகொண்டார். .இராமானுசர் சொன்னார்.”நான் ஒருவன் நரகம் புகுந்து எல்லோரும் சுவர்க்கம் புகுந்தால் எனக்கு ஆனந்தமே” என்று சொன்னவுடன் அவரை ஆசான் ஆரத்தழுவி அவருக்கு நீர்தான் ”எம்பெருமானார்”என்று பெயரைச் சூட்டினார்.
திருக்கச்சிநம்பி தாழ்குலத்தவர். அத்திகிரி அருளாளனுடன் உரையாடும் புண்ணியத்தைப் பெற்றவர் அவரை ஆசானாக அன்புடன் ஏற்றுக்கொண்டார். இராமானுசர் இளவயதிலிருந்தே அவரிடம் பக்தியுடன் பழகிவந்தார். தாழ்ந்தசாதியினரைத் ”திருக்குலத்தார் ” என்று அழைத்தார். ஊர்க்காரர்கள் எதிர்த்தாலும் தன்மனைவிக்குப் பிடிக்காவிட்டாலும் அவர் எப்போதுமே எக்குலத்தவரையும் மதிக்காமல் இருந்ததில்லை.மாறனேர் நம்பி என்பவர் நம்மாழ்வாரிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட கீழ்ச்சாதிக்காரர். அவரின் அந்திமக் கிரியைகளை அவரது ஆசான் பெரியநம்பி செய்தார். ஊரார் அவரை ஒதுக்கிவைத்தனர் . அவரை இராமானுசர் பெரிதும் மதித்தார். ஸ்ரீராமன் ஜடாயுவுக்கு கிரியைகள் செய்தார் தருமன் விதுரருக்கு செய்தான் குகனை தன் சகோதரனாகக் கொண்டார் ஸ்ரீராமன் என்றெல்லாம் பெரியநம்பி தன் சீடனுக்கு எடுத்துச்சொல்லி தன் செயலை நியாயப்படுத்தினார். திருவரங்கநாதனே அவர் செயலை அங்கிகரித்து அவரின் மதிப்பை உயாத்தினார் என்று கதைகள் கூறுகின்றன. இப்படி சீடனும் குருவும் சாதி வேறுபாட்டைக் களைவதில் முனைப்பாக இருந்தனர்.திருவரங்கத்தில் சோழமன்னனால் உடையவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தது. அதனால் தன்சீடர்களுடன் மைசூருக்கு சென்றார். அப்பொழுது வழியில் காடுகள் அதிகம். இரவில் தங்க இடம் தேடினர். சில வேடர்கள் இவரை வணங்கி அவர்கள் குடிசையில் தங்க வைத்தனர். அவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் கொடுத்த உணவை உண்டார் உடையவர். எங்கு சென்றாலும் வேறுபாடு பார்க்காது வேதம் கூறியதை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய வள்ளல்.
திருவரங்கத்தில் குளிக்கச் செல்லும்போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் அழைத்துச்செல்வது வழக்கம்..அப்பொழுது தன் இருகரங்களில் துணிவைத்து அதில் அவர்கள் கைகளைவைத்து அழைத்துச் செல்வார். ஆனால் நீராடிவிட்டு திரும்பிவரும்போது தாழ்குலத்தவனான உறங்காவில்லியின் தோளில் கைபோட்டுக்கொண்டு வருவாராம் மிக நெருங்கிய சீடர்களுக்கே இல்லாத மதிப்பை இந்த தாசருக்கு அளித்தார் இராமானுசர். ஏனெனில் இவர் மிக உயர்ந்த பக்தர் : இவர் மனைவி மிகச் சிறந்த பக்தை., திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதனே அழைப்பு விடுத்தார். பக்திதான் முதன்மையே தவிர குலம் இல்லை என்பதைச் சென்றவிடமெல்லாம் சொல்லிவந்தவர் இராமானுசர். காந்திஜியால் அரிஜனங்கள் என்று அழைக்கப்பட்டவர்களை இராமானுசர் திருக்குலத்தார் என்று அழைத்து அவர்களுக்கு ஆலயப் பிரவேசம் செய்து வைத்த முதல் சீர்திருத்தவாதியாவார்.மேல்கோட்டையில் இதை நிகழ்த்தினார்.
சுருங்கச் சொன்னால் தாழ்ந்தார் பொருட்டும்’ஐயோ” என்று முகங்காட்டி அன்புப்பணிகள் புரிந்த ராமானுசரின் சித்தசக்திதான் ,நன்னெஞ்சம்தான் ,மகாவிசுவாசம்தான் ‘அற்புதம்,அற்புதம்”. என்று பிரமிக்கத்தக்க செயற்கருஞ்செயல்களைச் செய்து முடித்து சித்தாந்தப் பெருங்கோயிலை ஆழ்ந்தகன்றதோர் அடிப்படையில் நிலைநிறுத்த உதவியிருக்க வேண்டும்.( ஸ்ரீராமானுஜர்-பக் 317 -பி ஸ்ரீ ஆச்சார்யா) ஒரு தொண்டர் குலத்தைத் தோற்றுவித்த அருமையான வைணவப் பண்ணை உருவாக வித்திட்ட பெருமகனார்.
இக்கருத்தை அமுதனார் ஒரு அழகான பாடலின்மூலம் தருகிறார்
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை * என் செய்வினையாம்
மெய்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவு நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே.
எத்தகைய மனிதர் என்று நாம் அறிந்துகொள்ள இப்பாடல் ஒன்றே போதுமே. அதனால்தான் வினோபா அவர்கள் துறவிகளில் சிறந்த துறவி என்று தமது உரையில் கூறுவார்
முக்திக்கு வழிகாட்டியவர்
“இந்த உலகில் உள்ள சரணாகதர்கள் அனைவருக்கும் ஸ்வாமியாக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். தன்னை அண்டியவர்களைக் காப்பதில் பெருமை ஏதும் இல்லை, தன்னை எளிதில் அண்டாமல் உள்ளவர்களையும் காத்தருளியவர் எம்பெருமானார் ஆவார். ஆகவே இனி உள்ள காலம் முழுவதும் நமது ஸித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள், அஹங்காரம் பற்றியவர்கள் ஆகியோருடைய நரகத்தின் வாயிலை ஒத்த அவர்களின் இருப்பிடத்தை நான் நாடமாட்டேன்; அவர்களை, மேகம் போன்று நவநிதியைப் பொழிவார்கள் என்று வாய்க்கு வந்தபடி துதிக்கமாட்டேன்; ஸம்ஸாரத்தில் உழல வைக்கும் இது போன்ற செயல்களில் இனி நான் ஈடுபடமாட்டேன்.” என்று எம்பெருமானார் தன்னை ஆட்கொண்ட விதத்தை இப்பாடலின் மூலம் தெரிவிக்கிறார் அமுதனார்
நிதியைப் பொழியும் முகில் என்று * நீசர் தம் வாசல் பற்றித்
துதிகற்று உலகில் துவள்கின்றிலேன் இனி * தூயநெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய * இராமானுசன் என்னைக் காத்தனனே.
மற்றொரு பாட்டினால் அவர்தம் பெருமையை எடுத்துக் கூறுகிறார் அமுதனார்.
கொள்ளக் குறைவு அற்று இலங்கி * கொழுந்துவிட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் *
வெள்ளைச் சுடர்விடும் உன் பெருமேன்மைக்கு இழுக்கு இதென்று
தள்ளுற்று இரங்கும் * இராமானுச என் தனி நெஞ்சமே.
மழை மேகம்போல் அள்ள அள்ளக் குறைவில்லாத செல்வத்தைக் கொடுத்தார் என்கிறார் அமுதனார். அப்படியென்ன செல்வத்தைக் கொடுத்தார். மற்ற சமயங்கள் தவறாக வேதத்தின் சாரத்தைக் கூறிவந்ததை மறுத்து அரிய க்ரந்தங்களையும் உரைகளையும் எழுதி மக்களை நல்வழிப் படுத்திய மேதையல்லவா அவர் நல்ல அரியதொரு ஆச்சார்ய பரம்பரையை உலகிற்கு ஈந்த வள்ளல்.அதனால் தான் இராமானுசரைத் தன் தனி நெஞ்சமே என்று விளிக்கிறார்.
எம்பெருமானார் தன்னை ஆட்கொண்டபின் தனக்கென்ன கவலை, வைகுண்டம் கிடைத்தாலும் துன்பம் சூழ்ந்த நரகம் கிடைத்தாலும் தான் கவலைப்படமாட்டேன் என்று கீழ்வரும் பாடலில் கூறுகிறார் அமுதனார்
இன்பம்தரு பெருவீடு வந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பம்தரு நிரயம்பல சூழிலென்? * தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் * இராமானுசன் என்னை ஆண்டனனே
தனக்கு எம்பெருமானார் கிட்டியபின் தான் எதற்கு மற்ற சாதனங்களை முக்திக்காக நாட வேண்டும் என்று அவர் உணர்வதை இவ்வரிகள்
கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கையற்றேன்
நமக்கு உணர்த்தும்.. வீடு விட்டு வீடு பெற காடு நோக்கிச் செல்லவேண்டாம் என்பது உடையவரின் அமுதவாக்கு. அதைத்தான் அமுதனார் இங்கு வலியுறுத்துகிறார்.
வைணவக் கொழுந்து
இராமானுசர் தான் தன் தெய்வம் என்று இப்பாடலில் குறிப்பிடுகிறார் அமுதனார்.
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவிபோற்றி செய்யேன் பொன் அரங்கமென்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?
எம்பெருமானார் எந்தவித கைம்மாறும் எதிர்பாராது தனது அளவற்ற கருணையினால் மிகவும் உயர்ந்த ஞானத்தை அளித்து களைகள் நீக்கி வைணவப் பயிரை வளர்த்தார் என்று இப்பாடலில் கூறுகிறார் நாங்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுத்த முனி என்று போற்றுகிறார் அமுதனார்
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழற்றது நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.
மெய்ஞ்ஞானியர் என்று அழைக்கப்பெறும் ஆழ்வார்களின் சிகரமாய் விளங்கிய நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் நறுமணத்தை பதிதொறும் எடுத்துச் சென்று பக்தி எனும் பயிரை வளர்த்த மாமுனி எம்பெருமானார்,வேருக்கு வெப்பம் கண்டால் கொழுந்து வாடுவதுபோல வைணவப் பயிருக்கு எந்த வாட்டமும் வராது காத்த வைணவக்குலக் கொழுந்து என்று இப்பாடலின் மூலம் போற்றுகிறார்.
உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகந்தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
புணர்ந்த பொன்மார்வன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எங்குலக் கொழுந்தே.
அற்புதம் நிகழ்த்திய அருந்தவச் செம்மல்
அற்புதம் செய்தார் ஆளவந்தாரின் சீடர் இராமானுசர் என்று பாராட்டுகிறார் அமுதனார். அப்படியென்ன அற்புதம் செய்துவிட்டார்,மிகவும் புரிந்துகொள்ள முடியாத கருத்தாகிய ”நாராயணனே அனைவர்க்கும் புகலிடம்’ என்பதை எளிதில் தன் உபதேசம் மூலம் புரியவைத்தார்.எப்போதும் இக்கருத்து நம்மனதில் நிலையாக இருக்கவே ஸ்ரீபாஷ்யம் என்ற நூலை உலகிற்கு அளித்தார். இக்கருத்தைத்தான் இப்பாடலில் குறிப்பிடுகிறார்
அற்புதம் செம்மை இராமானுசன் * என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் * கருதரிய
பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை * இந்நானிலத்தே வந்து நாட்டினனே
திருவடி பெருமை
எம்பெருமானாரின் அருள்பார்வையில் வீழ்ந்த அமுதனார் தனக்கு ஒன்றும் வேண்டாம், அவர்தம் உயர்ந்த திருவடி சரணமே போதும் என்கிறார்,ஏனென்றால் திருவேங்கட மலையும் ஸ்ரீவைகுண்டமாகிய திருநாடும் திருப்பாற்கடலும் தரக்கூடிய பேரானந்தத்தைத் அவர்தம் திருவடி தனக்கு அருளும் என்றுமன உறுதியுடன் கூறுகிறார், அக்கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இதோ
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே.
அவரது திருவடிகளில் சரணடைந்தபின் தன் இருவினைகளெல்லாம் தவிடுபொடியாய்ப் போயிற்று என்பதைக் கண்டுகொண்டேன் என்றும் சொல்லொணா அவரது கல்யாண குணங்களை அனுபவித்தேன் என்றும் பாடி ஆனந்திக்கிறார்
கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று
உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.
தான் யார் பின்னேயும் செல்லமாட்டேன். எம்பெருமானார் திருவடி பற்றிய மகான்களையே பற்றி தன் வாழ்வை நடத்துவேன் என்று தொன்டர்தம் பெருமையை திருவடிப் பெருமை மூலம் கூறும் பாங்கே தனிதான் .இதோ அந்தப் பாடல்
பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே.
உலகம் உய்ய வந்த உடையவரின் திருவடி பற்றினால் பரமபதமே கிடைக்கும் என்று ஆணித்தனமாக வெளியிடுகிறார் இப்பாட்டில்
தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.
முடிவாக அவர் குறிப்பிடுகிறார். திருவேங்கடத்துள்ளானும் திருமாலிருஞ்சோலையுள்ளானும் எம்பருமானாரின் இதயத்தை இருப்பிடமாய்க் கொண்டுள்ளனர். அத்தகைய புண்ணியவான் தன் இதயத்தில் வீற்றிருப்பது தான் செய்த புண்ணியம் என்றும் அவரது எளிமைப் பண்பென்றும் மனமுருகிச் சொல்கிறார்.
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே.
இறுதிப் பாட்டில் அவர் இராமானுசரிடம் ஓர் வேண்டுகோள் விடுக்கிறார், அதைப் பார்க்கும்போது உயர்ந்த வைணவப் பண்பாகிய அடியார்தம் அடியவர்க்குத் தொண்டு செய்து வாழ விரும்பும் அமுதனாரின் பண்பு வெளிப்படுகிறது.இதோ அந்த வேண்டுகோள். என்னே அவர்தம் சீரிய பண்பு. என்னே அவர்தம் நம்பிக்கை.
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.
தேனினும் இனிய தமிழில் ஒரு அந்தாதியைத் தந்தருளிவிட்டார் அமுதனார். 130 ஆண்டுகள் வாழ்ந்து கஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை புனித யாத்திரை மேற்கொண்டு வைணவ மதத்தைப் பரப்புவதற்கு 72 யதிகளை நியமித்து அவர்கட்கெல்லாம் தலைவராயிருந்து வழிநடத்தி அனைத்துப் பிரிவினரையும் அன்பால் ஒருங்கிணத்து வைணவ மரபை உலகிற்களித்த மாமுனியே எம்பெருமானார். அவரது 1000 ஆவது அவதார நன்னாள் சித்திரை திருவாதிரை நாளன்று அடுத்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அவரின் அடியவர்களாகிய நாம் அவர் பெருமையைப் பரப்புவோமாக
உலகத்தை உய்விக்க வந்த பெருமானே
உத்தம புருடரே மாமுனியே– உள்ளத்தால்
எப்பிறப் பினரையும் உவந்தேற்றுக் கொண்டவரே
எங்கள் எதிராஜரே போற்றி
Excellent Passage and Writings. It is useful for all Vaishnavites.
R.Parthasarathy