( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

 

நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா

நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல

இயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்

நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ ?

 

ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை

வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை

பரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்ப்பதில்லை

பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் ?

 

பூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார்

காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்

நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்

கேடெல்லாம் செய்துவிட்டு கீதைபற்றிப் பேசுகிறார் !

 

ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்

நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்

நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை

பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரை பறிக்கலாமா ?

 

படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்

குடிகின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்

நடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு

நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும் !

 

கோபம்வந்தால் கொழுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்

வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல

பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை

ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம் !

 

பலமொழிகள் பேசிடினும் பசியாவர்க்கும் ஒன்றேயாம்

பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்

இவையாவும் சமமாயின்  ஏன்னீரைத் தடுக்கின்றார்

இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.