இறைவாஅருளிவிடு நீ !
( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )
நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா
நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல
இயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்
நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ ?
ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை
வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை
பரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்ப்பதில்லை
பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் ?
பூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார்
காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்
நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்
கேடெல்லாம் செய்துவிட்டு கீதைபற்றிப் பேசுகிறார் !
ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்
நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்
நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை
பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரை பறிக்கலாமா ?
படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்
குடிகின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்
நடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு
நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும் !
கோபம்வந்தால் கொழுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்
வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல
பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை
ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம் !
பலமொழிகள் பேசிடினும் பசியாவர்க்கும் ஒன்றேயாம்
பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்
இவையாவும் சமமாயின் ஏன்னீரைத் தடுக்கின்றார்
இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு !