ஏக்கங்கள் ……
க. பாலசுப்பிரமணியன்
இமைகளுக்கிடையே
கசியும் நீர்த்துளி
ஒரு ஏக்கத்தின் ..
உயிர்த்துளி !
கனவுக்கும் நனவுக்கும்
இடையே நடந்த
காதல் சண்டையில்
கண்களுக்கு கிடைத்த
ஒரு பரிசுத்துளி !
யாருக்குத்தான் ஏக்கமில்லை ?
ஐம்புலன்களுக்கும்
அடிபணியாத உடலுக்கும்
அறிவுக்கும்
அமைதியில்லா உயிருக்கும்
பிறப்பிற்கும்
இறப்பிற்கும் ..
என்றென்றும் ஏக்கம்தான் !
எரிகின்ற உடலுக்கும்
இனியொரு பிறப்பிற்கு
ஏக்கம்தான் !
ஏக்கம்..
அது ..
உணர்வுகளின் மோகத்தின்
மரண தாகம் !
ஏக்கம்..
ஒரு மூச்சுக்கும்
அடுத்த மூச்சுக்கும் ..
இடையில் ..
இதயம் இசைக்கும்
முகாரி ராகம் !
நாளைய கருவை
இன்றே பிரசவிக்க
எண்ணங்கள் நடத்தும்
ஒரு சாகசம் !
ஏக்கத்தின் வாயிலில்
ஒரு துறவிக்கும்
ஒரு வேசிக்கும்
ஒரே தாகம்தான் !
ஏங்காத மிருகங்கள் ..
ஏங்காத மனிதர்கள்…
ஏங்காத தெய்வங்கள்…
எங்கே?
கண்டீரோ நண்பர்களே ?