நவராத்திரி நாயகியர் (6)
க. பாலசுப்பிரமணியன்
தாய் மூகாம்பிகை
காலடிச் சங்கரன் சந்தங்கள் கேட்டதும்
காலடி பூமியில் வைத்திட வந்தவளே!
காலையில் பகவதி மாலையில் சரஸ்வதி
கருணையில் காவிரி காலத்தின் அறிவொளி !
முதுகலை அறிந்தவள் மூகனை அழித்தவள்
முத்தமிழ் தந்தவள் முடிவின்றிக் கொடுப்பவள்
பாரதி ! சாரதி ! பார்கவி ! பைரவி !
பங்கய மேலுறை மங்கள மோகினி !
வல்லமை வாக்கினில் நல்லவை நாக்கினில்
வளர்த்திடும் அறிவினில் வாழ்ந்திடும் வேணி
வண்டினம் சேர்ந்திடும் வெண்ணிற மலரினில்
வீற்றிடும் வாசவி, வணங்கினேன் சியாமளி !
விழிகளின் அசைவினில் வேதங்கள் வளர்ந்திடும்
விரல்களின் அசைவினில் யாழிசை மலர்ந்திடும்
வித்தைகள் நித்தமும் வழங்கிடும் வாணியே !
பித்தனாய் அலைகிறேன் சித்தமே காத்திடு !
தாமரை நெஞ்சினில் மூகையே மலர்ந்திடு!
தளராத அறிவின் தரிசனம் தந்திடு !
தங்கிடும் செல்வமாய்த் தமிழனில் வந்திடு !
தடையின்றி மொழியினைத் தானமாய்த் தந்திடு !
நலுங்கிட்டு நல்மலரிட்டு நற்சுவை உணவிட்டு
நலம்படைக்க அழைத்தேன் நான்மறை போற்றியே
கொல்லூரில் குடிகொண்ட கலைமகள் அன்னையே
கொலுவிருக்க வருவாயோ குலம்காக்கும் தேவியே ?