க. பாலசுப்பிரமணியன்

 

தாய் மூகாம்பிகை

1

காலடிச் சங்கரன் சந்தங்கள் கேட்டதும்

காலடி பூமியில் வைத்திட வந்தவளே!

காலையில் பகவதி மாலையில் சரஸ்வதி

கருணையில் காவிரி காலத்தின் அறிவொளி !

 

முதுகலை அறிந்தவள் மூகனை அழித்தவள்

முத்தமிழ் தந்தவள் முடிவின்றிக் கொடுப்பவள்

பாரதி !      சாரதி !     பார்கவி !     பைரவி !

பங்கய மேலுறை மங்கள மோகினி !

 

வல்லமை வாக்கினில் நல்லவை நாக்கினில்

வளர்த்திடும்  அறிவினில் வாழ்ந்திடும் வேணி

வண்டினம் சேர்ந்திடும் வெண்ணிற மலரினில்

வீற்றிடும் வாசவி, வணங்கினேன் சியாமளி !

 

விழிகளின் அசைவினில் வேதங்கள் வளர்ந்திடும்

விரல்களின் அசைவினில் யாழிசை மலர்ந்திடும்

வித்தைகள் நித்தமும் வழங்கிடும் வாணியே !

பித்தனாய் அலைகிறேன் சித்தமே காத்திடு !

 

தாமரை நெஞ்சினில் மூகையே மலர்ந்திடு!

தளராத அறிவின் தரிசனம் தந்திடு !

தங்கிடும் செல்வமாய்த் தமிழனில் வந்திடு !

தடையின்றி மொழியினைத் தானமாய்த் தந்திடு !

 

நலுங்கிட்டு நல்மலரிட்டு நற்சுவை உணவிட்டு

நலம்படைக்க அழைத்தேன் நான்மறை போற்றியே

கொல்லூரில் குடிகொண்ட கலைமகள் அன்னையே

கொலுவிருக்க வருவாயோ குலம்காக்கும் தேவியே ?

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.