நிர்மலா ராகவன்

பிறரைப் புரிந்துகொள்ள..

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1

கமலஹாசன் மிக நல்ல நடிகர் என்கிறோமே, ஏன்?

நடிகை ராதிகா ஒரு மேடையில், `இவர் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ஒவ்வொரு நடிகைக்கும், `இவருக்குத்தான் நம்மேல் எவ்வளவு காதல்!’ என்கிற பெருமிதம் ஏற்படும். ஆனால், `இப்போதுதான் புரிகிறது. ஓர் எருமையை இவர்முன் நிறுத்தினாலும், அப்படித்தான் பார்ப்பார்!’ என்றாரே, பார்க்க வேண்டும்! நடிகருக்கே சிரிப்பு வந்துவிட்டது.

உணர்ச்சிகளை மாறிமாறிக் காட்டினால், நடிப்போ, நாட்டியமோ, பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகள் பார்ப்பவர்களைப் போய்ச்சேரும்.

வட நாட்டு நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும்போது, மொழியின் ஆழத்தை உணர்வதில்லை. அதனால் எந்த தருணத்தில் என்ன பாவம் காட்டவேண்டும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அர்த்தத்தையெல்லாம் எதற்குப் புரிந்துகொள்ள வேண்டும், நம் உடலழகே போதாதா என்று மெத்தனமாக அவர்கள் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. சமயாசந்தர்ப்பம் புரியாது சிரித்து வைக்கிறார்கள். (கஷ்டம்!)

இயக்குனர் `சிரி’ என்கிற போதெல்லாம் சிரித்துவைத்தால் மட்டும் போதுமா? சிரிப்பில்தான் எவ்வளவு விதங்கள்! ஒரு குழந்தையைப் பார்த்து கண்களில் கனிவுடன் சிரிப்பது, கேலிச்சிரிப்பு, பிறர் நம்மை புகழும்போது வரும் பூரிப்புடன் கூடிய புன்னகை — இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மொழியோ, கதையில் குறிப்பிட்ட சந்தர்ப்பமோ புரியாதவர்கள் ஒரே மாதிரி சிரித்து வைப்பார்கள். இதனால்தான் இவர்களது நடிப்பு எடுபடுவதில்லை. சில வருடங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

மொழி தெரியாவிட்டாலும், சில நடிகர்களும் நடிகையர்களும் ஒரு காட்சியின் ஆழத்தைப் பிறர் விளக்கப் புரிந்துகொண்டு, தம் தனித்துவத்திற்கேற்ப தேவையான உணர்ச்சிகளை தம் உடலாலும் முகத்தாலும் காட்டுவதும் உண்டு. (அப்பாடா!) எதிர்நீச்சல் படத்தில் வரும் கதாநாயகியின் தந்தை ஷரத் லோஹிதாஷ்வா, கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இருவரும் மராத்தி மொழியினராம். சொந்தக் குரலில் பேசாவிட்டாலும், தம் உணர்ச்சிகளைக் காட்ட மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது.

பரதநாட்டியம் என்ற வார்த்தையின் முதல் எழுத்திலேயே `பாவம்’ என்றிருக்கிறது. பார்ப்பவரைப் பரவசப்படுத்த பாடல் வரிகளுக்கேற்ற உடலசைவு மட்டும் போதாது. என்ன ஆடுகிறோம் என்று புரிந்துகொண்டதற்கு அடையாளமாக நவரஸங்களையும் கொட்டும் முகபாவங்கள், அங்க அசைவுகள் ஆகியவை நாட்டியத்திற்கும் இன்றியமையாதவை.

தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், அல்லது அதில் நன்கு உரையாடத் தெரிந்திருந்தாலும், எல்லாருமே தாம் ஆடும் பாடலைப் புரிந்துகொண்டு, முகபாவங்கள் காட்டுவர் என்று கூற முடியாது.

சிறு பெண்கள் நடனமாடும்போது, முதல் சில வருடங்கள் சற்று பயந்தாற்போல் இருப்பார்கள். அடிக்கடி தாயின் பக்கம் கண்கள் அலையும். அவர்கள் ஆடி முடிந்ததும், `சிரிச்சபடி ஆடணும்!’ என்று ஆசிரியையும், அம்மாவும் கூறுவார்கள். கோரிக்கை மிரட்டலாகவோ, கொஞ்சலாகவோ வரக்கூடும். `சரிதான்,’ என்று அவர்களும் சிரித்த முகத்துடன் ஆட சில வருடங்கள் பிடிக்கும். ஆனால் அது போதாது.

ஏன், அதுதான் பிறர் சொல்வதைக் கேட்டு, சிரித்தபடி ஆடுகிறார்களே என்கிறீர்களா?
பாடல் முழுவதும் முகம் விகசித்தபடி இருக்கும்.

இப்படி ஆடிய ஒரு பெண்ணிடம் நான் கேட்டேன், `ஏம்மா? `புலித்தோலை அணிந்த சிவன்’ என்னும் இடத்தில், நீ சிரித்தாயே! புலி சிரித்து பார்த்திருக்கிறாயா?’

துர்கை அம்மனுக்கு அப்பெயர் வரக் காரணமாக இருந்த கதை: துர்க்காமா என்ற அசுரன் பல காலம் தவம் இருந்து, பிரம்மா அவன்முன் தோன்றியதும், `ஒரு வரம் வேண்டும்!’ என்று கேட்கிறான்.

எப்படிக் கேட்பான்?

ஒருவரை நாம் ஏதாவது வேண்டும்போது, மரியாதையாகக் கேட்போம். இல்லையா?

சுயமரியாதையின்றி, குறுகிய காலத்தில் எதையும் சாதிக்க விரும்பும் காரியவாதிகள் கூனிக் குறுகுவார்கள். கூழைக் கும்பிடு போடுவார்கள். பல்லிளிப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும், நினைத்தது நடந்துவிட்டால், அதற்குப்பின் எதிரிலிருப்பவரை மறந்துவிடுவோம், அலட்சியமாகப் பார்ப்போம் என்று. அந்த பொய்மை கண் சட்டென ஒரு பக்கம் அலைவதில் தெரியும். நினைத்தது கிடைத்தவுடன், உடல் நிமிர்ந்து, அதிலிருந்து ஒரு அலட்சியம் வெளிப்படும். இரண்டு வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படும்போது, இவ்வளவையும் காட்டினால் பார்ப்பவரையும் அந்த உணர்ச்சி தொற்றிக்கொள்ளும்.

துர்க்காமா பெற்ற வரத்தால் அகிலமே அவன் கைக்குள் வர, கொடுமைகள் பல புரிகிறான். நீர் வற்றிப்போய், மக்கள் அம்மனிடம் முறையிடுகிறார்கள்.

தண்ணீர் கிடைக்காது வாடும் உயிரினங்களின் துயரம் அவர்கள் முகத்தில். `எங்களுக்கு வேறு வழியே இல்லை!’ என்ற கெஞ்சல். `ஏதாவது செய்யேன்!’ என்ற ஏக்கம்.

அம்மனுக்கோ முதலில் ஆத்திரம், கேடுகெட்டவனுக்கெல்லாம் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான் என்பதுபோல். மக்களின் பரிதவிப்பைக் கண்டு இரக்கம், கருணை முகத்தில். அவள் நீரைச் சொரியும்போது, தான் பெற்ற மகவிற்கு அமுதூட்டும் அன்னையைப்போல அன்பு.

இறுதியில், துர்க்காமாவிடமிருந்து வேதங்களை மீட்டு, அவனையும் அழித்ததால் துர்கா என்ற பெயர் பெறுகிறாள்.

நடிகர்கள, நடனமணிகள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும் தாம் சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகவே மாறிவிட வேண்டும். இதைத்தான் GETTING INTO THE SKIN OF OTHERS என்கிறார்கள். இம்முறையால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.

பாலித் தீவில் தியானத்தால் இதைச் சாதிக்கிறார்கள். ஒரு நடனத்தில், (தேங்காய் உருமட்டையால்) கொழுந்து விட்டு எறியும் தீயை குதிரையாக மாறி, வெறுங்காலாலேயே அணைக்கிறார்கள். மயிர்க்கூச்செறிய வைக்கும் இடம் அது.

இன்னொரு நடனத்தில் இருபது நிமிடங்கள் போர்வீரர்கள் `இறந்து’ விடுவார்கள். எந்தவித அசைவும் கிடையாது. மூச்சுவிடுவதற்கு அடையாளமாக அவர்கள் மார்பும் ஏறி இறங்கவில்லை. பார்த்தவர்கள் பயந்தேவிட்டோம். பிறகு, எதுவுமே நடவாததுபோல் அவர்கள் எழுந்தபோதுதான் எங்களுக்கு மூச்சு வந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களின் தலைவரிடம் அணுகி விசாரித்தேன். அப்போதுதான் சொன்னார், `நாங்கள் தியானத்தால் எந்த மிருகமாகவும், மூச்சற்றவர்கள்போலும் மாறமுடியும்,’ என்று.

இதையெல்லாம் புரிந்துகொள்ள அதிக வயது ஆகியிருக்க வேண்டும் என்பதில்லை. தியானம் மட்டுமின்றி, நிறையக் கதைகள் படித்து, கதாபாத்திரங்களுடன் நம்மைப் பொருத்திக்கொள்ள முயல வேண்டும். பேசுவதைக் குறைத்து, பிறரைக் கூர்ந்து கவனித்தால், பல்வேறு குணாதிசயங்கள் புலப்படும்.

உற்று உற்றுப் பாருங்கள், அவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளியும்வரை. மனிதர்களின் மனப்போக்கு, வக்கிரங்கள் புரியும்.

அதன்பின், பிறர் தாமே வலிய வந்து தம் கதைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கருவிற்காக நாம் அலைய வேண்டியதில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.