நிர்மலா ராகவன்

முதியோரும் சந்ததியினரும்

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1

`என் பெற்றோர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்!’ என்பவர்களைக் கொடுமைக்காரர்களாகச் சித்தரிக்கின்றன கதைகள்.

அவர்கள் இப்படிச் சொல்வது, `நானும் என் குடும்பத்தினரும் சுதந்திரமாக, அவர்கள் தொணதொணப்பில்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்!’ என்று பிறர் அர்த்தம் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.

மாறும் காலம்

நூற்றிருபது ஆண்டுகளுக்குமுன்தான் மனிதனின் சராசரி வயதே நாற்பதுதானாமே! அப்போது இந்த பிரச்னைகள் இருந்திருக்காது.

இக்காலத்திலோ, வயதானவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், இளமையிலிருந்த உடல் வலு, ஆரோக்கியம், ஞாபகசக்தி போன்றவை கணிசமாகக் குறைந்துவிடுகின்றன. அப்போது அவர்களுக்குப் பெருமையளித்தவைகளை இழந்துவிட, அதிர்ச்சியடைகிறார்கள். பிறர் தங்களைக் குறைவாக எடைபோட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள்.

காலம் மாறிக்கொண்டிருக்கிறது, நம்மால் மாற முடிகிறதோ, இல்லையோ, நம் சந்ததியினர் அதற்கேற்ப நடந்துகொண்டால்தான் அவர்கள் வயதையொத்த பிறருடன் இணைய முடியும் என்பதை முதியோர் புரிந்துகொண்டால் பிரச்னையே எழாது.

எது முக்கியம்?

இன்றைய இளைய தலைமுறைக்கு உறவுகளைவிட நண்பர்கள் முக்கியமாகிவிட்டது. உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருக்கும், முகம் அறியாதவர்களுடனும் CHAT செய்வதில் (அரட்டை அடிப்பதில்) ஓர் ஆனந்தம்.

`இதே ஊரிலிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு வருஷத்துக்கு ஒரு முறைகூடப் போகாமல், அப்படி என்னதான் கம்யூட்டரோ, ராத்திரி பகலா!’ என்று ஒரு பாட்டி அலுத்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

உறவினர் தாம் செய்வது எல்லாவற்றிலும் குறை காண்கிறார்கள். நண்பர்கள் என்றால், தாம் எது செய்தாலும் ஆதரித்து, பாராட்டுபவர்கள் என்று தோன்றிப்போகும் இளவயதினருக்கு. நண்பர்களும் இந்த மனப்பான்மைக்குத் தூபம் போடுவார்கள். (`எங்க வீட்டிலேயும் இப்படித்தான்! இந்த வயசானவங்களுக்கே MANNERS கிடையாது. MISBEHAVE பண்ணுவாங்க!’).

`நல்லது’ என்று எண்ணி ஏதாவது சொல்வது ஒருவருக்குக் கெட்ட பெயர்தான் வாங்கிக்கொடுக்கும். குடும்பத்தில் பிறர் செய்வதில் குறுக்கிடாமல் இருக்கும்வரைதான் எவருக்கும் மரியாதை நிலைக்கும்.

என் அனுபவம்

`எங்கள் காலத்தில், அந்தந்த வாரப் பாடத்தை சனி ஞாயிறுகளில் படிப்போம்,’ என்று ஒரு முறை நான் என் வகுப்பில் சொல்லப்போக, ஒரு மாணவி, `உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.

படிப்பதைவிட, படித்து முன்னுக்கு வருவதைவிட, பொழுதுபோக்கு முக்கியம் என்று ஆகிவிட்டது. அறிவுரையை `தொணதொணப்பு’ என்று எண்ணி எதிர்த்துப் பேசுபவர்களை, `எப்படியோ தொலையுங்கள்!’ என்று விட வேண்டியதுதான்.

கூட்டுக்குடும்பமா?

ஒருவர் வாழ்வில் இன்னொருவர் குறுக்கிடுவது கசப்பை விளைவிக்கும். அவரவர் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றபடி நடக்கும் சுதந்திரம் இருந்தால்தான், குடும்பத்தில் அமைதி நிலவும்.

கதை:

போன தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி பெரிய நகரங்களில் வாழ்ந்து, மெத்தப் படித்தவள். கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டாள். மாமியார் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களது கெடுபிடியால் அதிர்ந்துபோனாள். இருப்பினும், `பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள். அப்போதுதான் பிறந்த வீட்டுக்குப் பெருமை!’ என்ற தாய் சொல்லைத் தட்டாது வாழ்ந்தாள்.

அவளே மாமியாராக ஆனபின், அதே மரியாதையை தன் மகன்களின் மனைவிகளிடமிருந்து எதிர்பார்த்தாள். அவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ அவளை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தனிக்குடித்தனம் போனபின்னரும், `அறிவுரை கூறாமல் எப்படி!’ என்று விடாப்பிடியாக அவர்கள் செய்வதில் குறுக்கிட ஆரம்பித்தாள். அவர்கள் மாறுவதாக இல்லை. அவளுக்குத்தான் கெட்ட பெயர், ஓயாது அதிகாரம் செய்கிறவள் என்று. தன் இளமைக் காலத்தில் பொறுக்க முடியாததை எல்லாம் பொறுத்துப்போனோமே, இப்போது ஏன் இளவயதினர் அப்படி இல்லை என்ற குழப்பம்தான் மிச்சம்.

வயதேற ஏற

சிறு வயதில் பாட்டி தாத்தாவின்மேல் பேரக்குழந்தைகள் பாசம் வைத்திருக்கலாம். ஆனாலும், பதின்ம வயதில் அவர்களுடைய `நச்சரிப்பை’ ஏற்க முடியாது, எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இதைத் தவிர்க்க, பேரன் பேத்திகளின் அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலாம் — அளவோடு. முதியவர்கள் தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சுவாரசியமாக, கதைபோல் சொல்வது நல்லது.

உதாரணம்: என் மூத்த மாமாவின் மனைவிக்குக் கல்யாணத்தின்போது ஐந்து வயது! இது நடந்து நூறு வருடங்கள் ஆனபோதும், இன்று கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதல்லவா? (இதற்குத்தான் அந்தக் காலத்தில் உணவருந்தும்போதும், உறங்க வைக்கும்போதும் கதை சொல்லும் வழக்கம் வைத்திருந்தார்களோ?).

கதை கேட்ட சுவாரசியத்தில், தம்மையுமறியாமல், தம்மைப் பாதித்தவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள் சிறுவர்கள். மௌனமாகக் கேட்டுக்கொண்டால், அவர்களது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அறிவுரையை நாடும் அளவுக்கு நட்புணர்வு மிகும்.

நமக்கென ஒரு பொழுதுபோக்கு

படிப்பது, இசையை ரசித்துக் கேட்பது, நண்பர்களுடன் உரையாடுவது, கணினி, தொலைகாட்சி — இப்படி எதையாவது தேர்ந்தெடுத்துக்கொண்டால், தினமும் நம் பொழுது இனிமையாகக் கழியும். பிறரது போக்கில் குற்றம் கண்டுபிடிக்க அவகாசமோ, அவசியமோ இராது.

ஆனால், மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர்ப்பது நல்லது. நமக்குப் பிடித்ததைச் செய்தால்தானே நிறைவு கிட்டும்?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.