-மேகலா இராமமூர்த்தி

கடற்கரை மணலில் பதிந்த காலடித்தடங்களைப் புகைப்படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. ராமச்சந்திரன். இந்தக் காலடித்தடங்களை வைத்துக் கவிபாடுங்கள் என்று இவ்வாரப்படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்.

footprints

ஆறடி நிலத்தில் வாழ்க்கை அடங்கும்வரை மனிதர்களின் காலடிகள் பயணப்பட்டுக் கற்றுக்கொள்ளத்தான் எத்தனை விஷயங்கள் இத்தரை மீதினில் கொட்டிக்கிடக்கின்றன! இலட்சிய மனிதர்களின் காலடிச் சுவடுகளோ பின்னர்க் காலத்தின் சுவடுகளாகவே மாறி வரலாற்றில் தடம்பதித்துவிடுகின்றன!

இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்துள்ள கவிதைகளை இரசித்துவருவோம்.

”நிலத்தில் பதிந்த மனிதக் காலடி நிலவில் பதிந்த நாளொரு நன்னாள். அவை செவ்வாயிலும் வெற்றித்தடம் பதிக்கும் நாளே நமக்குப் பொன்னாள்!” என்று தன் ஆசை பகர்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

நிலத்தில் தடங்கள்

நிலத்தில் நடக்கும் கால்கள்
நேற்றுப் பகலில்
நிலவில் தடம் பதித்து
வரலாற்றுக் கல்லை
நிலைநாட்டும் !
எளிய மனிதனின்
பூதகர மான எட்டு வைப்பு !
ஆறறிவு மானிடன்
பேரளவு முயற்சியில் ஆற்றிய
ஏழறிவுச் சாதனை !
தவழப் பயின்று தட்டுத் தடுமாறி
நடக்கப் பழகி
இறக்கை யின்றிப் பறந்து
பிற அண்டத்தில்
தடங்கள் இட்டு மீண்டான் !
அடுத்துப்
பதினைந்து ஆண்டுகளில்
செந்நிறக் கோள்
செவ்வாயில் தடம் வைத்து
வெற்றி
விண்ணவனாய்
மீள்வான்,
மண்ணிலே தடம் வைத்த
மனிதன் !

***

கடற்கரையில் பதிக்கும் வெற்றுத் தடங்கள் கடலலைகளால் அழியலாம்; ஆனால் வாழ்வில் பதிக்கும் வெற்றித்தடங்களோ காலக் கடலலைகளால் அழிக்கமுடியாதவை என்பது திரு. செண்பக ஜெகதீசனின் திண்ணமான எண்ணம்.

கடற்கரையில்
காலடித் தடங்கள்
தொடர் பயணத்திற்கு ஏற்றவையல்ல..

இலக்கை எட்டமுடியாது
இவற்றைத் தொடர்ந்து சென்றால்..

கடலலைக் கரங்களால் அழிக்கப்பட்டு
காணாமலும் போய்விடும்..

வாழ்க்கைப் பயணத்தில்
நீ பதிக்கும்
வெற்றிக் காலடித்தடங்கள்,
காலக் கடலலைகளால் அழிவதில்லை..

வாழ்க்கை இது சாதிப்பதற்கே,
வெற்றித் தடங்களைப் பதிப்பதற்கே…!

 *** 

மனித வாழ்க்கை போன்று மனிதக் காதலும் நிலையற்றதாய் மாறிவரும் நிலையினை, கடலலை போல் அது விரைந்து மறையும் விந்தையைத் தன் கவிதையில் அழகுறக் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. ஜோ. குமாரி எலிசபெத். (புதிய கவிஞருக்கு நல்வரவு!)

அவசர வாழ்வில் அந்நிய மானது
அன்புட னிருந்த அருமை உறவுகள்
அன்றொரு நாள் அப்படித் தான்
அவளும் அவனும் பிரிந்ததைக் கண்டேன்

அவளின் கண்கள் அவனை நோக்க
அவனின் கண்கள் எங்கோ பார்க்க
வெறுப்பில் அவளின் வார்த்தை வெடிக்க
சிறுத்த முகத்துடன் அறைந்தானவளை…!

விழுந்த அறையில் காதல் ஒடிந்தது
கடந்து போனது காதல் அலைபோல்
எழுந்து போயினர் ஆளுக் கொருபுறம்
அழிந்தன அவரடி அலைகளினாலே….!

ஐந்தே நிமிடம் அந்த இடத்தில்
வந்து அமர்ந்தது மற்றொரு சோடி
இங்கு வந்ததில் ஆணோ பழையவன்
அறைந்தவளில்லை இவள் புதியவள்…!

அகன்ற கண்களை விலக்கிக் கொண்டு
அவசர உலகின் அவசரம் உணர்ந்தேன்
கடற்கரை காற்று எத்தனை கண்டதோ
வெறுத்து வீசுது வெப்பத்தோடு…!

*** 

காலடித் தடங்களுக்குப் புதிய சிந்தனை முகங்களைத் தம் கவிதைகளில் தந்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்! 

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

காலத்தால் அழியாத காலடிகள்

காலடிகள் காணாமல் போகும் ஒருநாள் – ஆனால்
காவியம் படைத்தும் உள்ளது சில காலடிகள்…

அண்ணல் இராமன் காலடி ஸ்பரிக்க
அங்கே எழுந்தாள் அகல்யை உயிர் சிலிர்க்க‌

மூன்றடி மண்தான் கேட்டான் மாதவன் -ஆனால்
மூவுலகமும் வசமானது அவன் காலடியாலே

அஹிம்சையைப் போதித்தது புத்தனின் காலடி
அவ்வழி நடந்தது அண்ணல் காந்தியின் காலடிகள்

ஞானக் குஞ்சொன்று பிறந்தது காலடியிலே
அஞ்ஞானம் மாண்டதும் அவர் காலடியிலே

அறிஞரைப் போல மெய்யடியார்களைப் போல‌
அவர் வழி நடந்து பதிப்போம் நம் காலடிகளை

வரமாகப் பெற்ற இவ் வாழ்க்கைப் பாதையில்
தரமாக விட்டுச் செல்வோம் நமது காலடிகளை

ஞாலத்தில் பிறந்த மாந்தர் அனைவரும் காலடித்தடம் பதித்துத்தான் நடக்கிறார்கள். என்றாலும், அனைவரின் தடங்களும் பின்பற்றுவதற்கேற்ற வழித்தடங்களாய், வாழ்க்கைத்தடங்களாய் மாறுவதில்லை. அத்தகு திறனும் ஆற்றலும் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும் வரம்!

”காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் காலடி அத்துவைதத்திற்குப் பாதை அமைத்தது. கருணைக்கடலாம் சித்தார்த்தரின் காலடி சத்தியத்துக்குப் பாதை அமைத்தது. அதன்வழி நடந்த அண்ணலின் காலடியோ அகிம்சைக்குப் பாதை அமைத்தது!” என்று காலத்தால் அழியாத காலடிகளின் வரிசையைக் காதலுடன் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திருமிகு. ராதா விஸ்வநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 89-இன் முடிவுகள்

  1. ///”நிலத்தில் பதிந்த மனிதக் காலடி நிலவில் பதிந்த நாளொரு நன்னாள். அவை செவ்வாயிலும் வெற்றித்தடம் பதிக்கும் நாளே நமக்குப் பொன்னாள்!” என்று தன் ஆசை பகர்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.////

    செந்நிறக் கோளில் 2030 ஆண்டுக்குள் மனிதன் தடம் வைப்பது என்னாசை இல்லை. அப்பெரும் முயற்சி வெற்றி அடைய அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சைனா ஆகிய நாடுகள் தீவிரமாய்ப் போட்டி இடுகின்றன.

    எளிய மனிதனின்
    பூதகர மான எட்டு வைப்பு !
    ஆறறிவு மானிடன்
    பேரளவு முயற்சியில் ஆற்றும்
    ஏழறிவுச் சாதனை !

    சி. ஜெயபாரதன்

  2. //செந்நிறக் கோளில் 2030 ஆண்டுக்குள் மனிதன் தடம் வைப்பது என்னாசை இல்லை. அப்பெரும் முயற்சி வெற்றி அடைய அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சைனா ஆகிய நாடுகள் தீவிரமாய்ப் போட்டி இடுகின்றன.//

    உண்மைதான் ஜெயபாரதன் ஐயா. தங்கள் ஆசை என்பதைவிட அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்கும் நாடுகளின் இலட்சியம் அது என்றே நாம் அதனைக் குறிப்பிடவேண்டும்.

    கென்னடி வானியல் மையத்தில் (Kennedy Space Center, U.S.A) 2010-ஆம் ஆண்டு, ஏப்ரல் 15-ஆம் நாள் உரைநிகழ்த்திய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாகூட 2030-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாம் செவ்வாய்க்குச் சென்றுவருவது சாத்தியமாகும் என்பதையே தன் கணிப்பாகக் கூறினார்.

    சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிந்த வானியலாளர்கள் செவ்வாய்மண்டலத்தியலும் விரைவில் கண்டுதெளிவர் என்பது உறுதி.

    தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *