மார்கழி மணாளன் (10 )
க. பாலசுப்பிரமணியன்
திருப்படகம் – அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் கோயில்
அறத்தினைக் காத்திட அமைதியை நாட்டிட
அரியணை தர்மத்தை அனைவரும் உணர்ந்திட
அமரர்கள் போற்றிடும் அச்சுதா அனந்தா
அரசவை நின்றாய் தூதனாய் மாதவா !
தூதுவன் போற்றிடத் தவறிய துரியனும்
மாதவன் உன்னை மண்ணினில் வீழ்த்திட
மாயங்கள் நினைத்ததும் மனத்திலே வீழ்ந்தான்
மாயைகள் படைத்த மாலனே மடிவதோ ?
ஆடையை உருவிய அரக்கர்கள் நடுவில்
ஆணவம் பெருக்கிய அவையினர் முன்னில்
புண்ணுடை கண்ணிரு அரசனின் விழிகளில்
விண்ணுயர் வள்ளலாய் மண்ணிலே நின்றாய்!
பொன்னிரு தாள்களை பூமியே போற்றிட
விண்ணுறை கோள்களே விழிகளைப் போற்றிட
மண்ணுறை உயிரெல்லாம் மார்பினைப் போற்றிட
வானுறை அமரர்கள் வாழ்த்திய வேங்கடா !
ஐம்பொறி ஆள்கின்றாய் அரவணை அயர்ந்தே
ஐம்புலன் ஆள்கின்ற அரங்கனே அமரனே
ஐவரின் நண்பனே ! அமைதியின் தூதனே !
ஐயங்கள் நீங்கிய மனதினை அருள்வாய் !
அச்சங்கள் ஏதுமில்லை அச்சுதன் துணையிலே
உச்சங்கள் தொடலாம் ஒப்பிலி அருளினால்
பச்சைநிற மேனியன் பார்வையில் இருந்தால்
இச்சைகள் நீங்கியே இசைத்திடும் வாழ்வே !